Monday, November 23, 2009

சிட்டுக்குருவியின் சிறகுயர்த்தி....

ரவீனா உயர் தரத்துக்கு தெரிவாகியிருந்த போது தான் தூர கிராமத்துலிருந்து இங்கு படிப்பதற்காக வந்திருந்தாள் ஷியாமளா. வந்த புதிதில் யாருடனும் பெரிதாக ஒட்டிக் கொள்வதில்லை. தானும் தன் படிப்பும் என்றிருப்பாள். பாடசாலை இடைவேளை நேரத்தில் கூட யாருடனும் கலந்து கொள்வதில்லை. இவளுடைய இந்தப் போக்கு ரவீனாவுக்கு கவலையை ஏற்படுத்தியது. எனவே அவளே வழிய சென்று பேச்சு கொடுத்தாள்.

ஷியாமளாவுக்கும் பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது. புதிய பாடசாலைக்குப் போனால் அங்குள்ளவர்கள் முதலில் கதைத்தால் தானே சந்தோஷமாக இருக்கும். அந்த சந்தோஷத்தை ரவீனாவின் நட்பில் உணர்ந்தாள் ஷியாமளா. ஒவ்வொரு நாளும் சோகத்துடனேயே பாடசாலைக்கு வருவதில் உள்ள கஷ்டத்தை ஷியாமளா சொல்லாமலேயே ரவீனா புரிந்து கொண்டாள். இல்லையில்லை ஷியாவின் முகவாட்டம் காட்டிக் கொடுத்து விடும்.

~~ ஏன் ஷியா இங்க உங்கட சொந்தக்காரங்க யாரும் இல்லயா?||

அவள் பிரிதொரு விடுதியிலிருந்து தான் பாடசாலைக்கு வருவதாய் ரவீனா எண்ணிக் கொண்டாள் போலும்.

அவள் அப்படிக் கேட்டதும் ஷியாமளா விழித்தாள். விடை சொல்ல முடியாமல் தவித்தாள்.

அவளது மௌனம் யாரும் இல்லை என்பதற்கு அறிகுறியாக இருக்கலாம். அல்லது இருப்பவர்கள் பெரிய வசதிக்காரராய் இருந்து இவள் அங்கே தங்குவது பிடிக்காதவர்களாயிருக்கலாம் என்று ஊகித்துக் கொண்டாள் ரவீனா.

இது ஷியாவுக்கு உள்ளுர வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஷியாவின் பெரியம்மா மகள் ஒருவர் பிரபலமான பாடசாலை ஒன்றில் தழிம் மொழி விசேட ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்தார். பாடசாலையில் அவருக்கு செல்வாக்கு அதிகம் என்றும் அபி டீச்சர் என்றால் எல்லோருக்கும் பெரும் விருப்பம் என்றும் அடிக்கடி அந்த அபி டீச்சரே சொல்லித்தான் இவர்களுக்குத் தெரியும். எனவே ஷியாவை எப்படியாவது அந்த பாடசாலையில் சேர்த்து படிக்க வைக்க பேரவா கொண்டார்கள் ஷியாவின்; பெற்றோர்.

தன் அக்காவின் மகள் தன் மகளான ஷியாவுக்கு பக்கபலமாக நின்று உதவுவாள் என்று தான் ஷியாவின் அம்மா நப்பாசை கொண்டிருந்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த அபி டீச்சரும் அப்படித்தானே சொல்லியிருந்தார்.

தங்கள் வீட்டில் வந்து ஷியாவை தங்கியிருக்குமாறும் டியூஷன் க்ளாஸ் தேடித்தருவதாயும் எத்தனை பித்தலாட்டங்கள்??

ஆயிரம் கனவுகளை சுமந்துத்த் தான் பறந்து வந்தது ஷியா எனும் சின்னச் சிட்டு. ஆனால் மாதம் ஒன்று செல்லு முன்பே அதன் சிறகுகள் அறுக்கப்பட்டது. படிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக வாய் மூடி மௌனம் காத்தாள் ஷியா. அம்மா அப்பாவின் ஆசை படி நன்றாக படிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் மட்டுமே அவள் மனதில் படிந்திருந்தது. கிராமத்து பாடசாலையில் இருந்த உயிர் தோழிகளை மறந்தது பசி தாகம் பாராமல் பொறுமையாக இருந்தது லட்சியங்களை நனவாக்கிக் கொள்ளத்தானே.

ஆனால் அந்த அபி டீச்சருக்கு பாடசாலையில் தான் செல்வாக்கு இருந்ததே ஒழிய சொல்வாக்கில் அவர் தவறியராகவே இருந்தார்.

தெரியாத தேசத்தில் விடுதி தேடிப்போகுமாறு அடிக்கடி ஷியாவுக்கு சொல்லப்பட்டது. தன் பிள்ளைக்கு சுகமில்லை என்றால் முழு குற்றமும் வசையும் ஷியா மேல் படிந்தது. ஒரு வேளை ஷியா அங்கு செல்லாமல் இருந்திருந்தால் பிள்ளைகளுக்கு தடிமனேனும் வந்திருக்காதோ என்னவோ??

ஊரிலிருந்து அம்மா கோல் பண்ணுகையில் எல்லாம் தொண்டை அடைக்கும். அழுகை முட்டும். சிரிக்கவே தோன்றாது. அப்பா தம்பியுடனும் கொஞ்சமாக பேசி விட்டு வைத்து விடுவாள். பிறகு தலையணை நனையும்.

தன் அக்காவுடன் மாத்திரம் கொஞ்சம் கூடுதலாக ஒட்டுவதுண்டு. பாடசாலையில் உள்ள மாணவர்கள் ஷியாவுக்கு காதல் மனு போட்டதையெல்லாம் கூறுமளவுக்கு நெருக்கமாகப் பழகினார்கள் அவர்கள். ஆனால் இப்போது அருகில் அக்காவும் இருக்கவில்லை. ஓரிரு முறை தான் கொழும்பிலிருந்து கோல் பண்ணி பேசினார். அப்போதும் கூட தன் பிரச்சனைகளை கூறவில்லை ஷியா. கூறவில்லை என்பதை விட கூறும் வாய்ப்பு இருக்கவில்லை என்பதே மிகப் பெருத்தம். முதன்முதலாக தான் சந்தோஷமாக இருப்பதாயும் படிப்பதாயும் அக்காவிடம் பொய் சொன்னது பற்றி கவலை இல்லாமல் இருந்திருக்காது.

இன்றைய காலத்தில் கல்விக்கு கொடுக்கப்படும் மதிப்பு மிகவும் உச்ச நிலையில் உள்ளது. வறுமைப்பட்டவர்களும் தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். விருப்பம் மட்டும் இருந்தூல் போதுமா? கல்வி மனதில் பதிவதற்காக என்றொரு சூழல் வேண்டுமே. அது கிடைக்காத போது படி படி என்று சொல்லுவதிரும் அர்த்தங்கள் இருப்பதாய் தோன்றவில்லை.

ஏய் என்ன யோசிக்கிற என்று அவளைப்பிடித்து உலுக்கிய போது தான் சிந்தை கலைந்தாள் ஷியா.


~~எங்களுக்கு பெரிய வீடு இருக்கு. 3 பேர் இருக்கோம். டாடி பிஸ்னஸ் போனால் ஒரு மாசம் கழிச்சி தான் வருவாரு. மம்மி கிட்ட சொல்லிட்டா நீயும் வந்து தங்கிக்கலாம். என்ன வர்ரியா?||

ஷியாவுக்கும் உண்மையில் வேறெங்காவது போனால் நன்றாக இருக்கும் போல் தான் தோன்றியது. அதனால் அபி டீச்சருக்கு இந்த விடயம் பற்றி சொன்ன போது எப்படி சந்தோஷமாக இருந்திருக்கும். உடனே தன் சித்திக்கு அதாவது ஷியாவின் அம்மாவுக்கு தொலைபேசினார்.

தன் மகள் படிக்கிறாள் என்று எண்ணியிருந்த பெற்றோருக்கு இந்த செய்தி உண்மையை உணரச் செய்தது. ஷியா அங்கே படித்தது மட்டுமில்லை. துடித்தும் போயிருக்கிறாள் என்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

இரண்டு பெண் பிள்ளைகளையும் இரண்டு இடத்தில் விட்டுவிட்டு இருக்க அவர்கள் சங்கடப்பட்டதை யாருக்கு சொல்லுவார்கள்? கெட்டு சீரழிகிறார்கள் என்றால் வீட்டுக்குள் பொத்தி வைத்து பாதுகாக்கலாம். ஆனால் அவர்களும் தத்தமது வாழ்க்கையில் முன்னேறுவதற்காகத் தானே தம்மை விட்டு பிரிந்திருக்கிறார்கள் என்று தமக்குள்ளேயே சமாதானம் செய்து கொண்டு ஆசைகளை சமாதியாக்கிக் கொள்வார்கள்.

இப்போது ஷியா தன் தோழி ரவீனாவுடன் மிகவும் சந்தோஷமாயிருப்பதாய் ரவீனாவின் தாய் ஷியாவின் அம்மாவுக்கு தொலை பண்ணிக் கூறுவார். இரத்த பந்தத்தை விட இந்த உறவுகள் வலிமை கூடியது. சிறகொடிக்கப்பட்டிருந்த சிட்டுக்குருவி ஷியாவின ;ஆசைகள்; மீண்டும் சிறகடிக்க தொடங்கி விட்டன. இனியென்ன.... அவளும் ரவீனாவும் சேர்ந்து நன்றாக படித்து புது உலகொன்றை உருவாக்குவார்கள். பார்த்திருப்போம்.

(சம்பவம் மட்டும் உண்மை)

No comments:

Post a Comment