Monday, November 23, 2009

கனவுகள் உயிர் பெறும் நேரம்...

இளைய ராணிக்கு இன்று இருப்பு கொள்ளவில்லை....

வாழ்வு குறித்து தான் கண்ட கனவுகள் இன்றைக்கு பிறகு நிலைத்திருக்க வேண்டும் இறைவா! மானசீகமாக கடவுளை வேண்டினாள். இன்று அவர் வரப் போகிறார். வந்த பிறகு குளித்து சாப்பிட்டு குழந்தையை கொஞ்சும் அழகை அவள் இன்று தானே முதன் முதலாகப் பார்த்து ரசிக்க வேண்டும்??

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள்??

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்ததோ? எந்த ஜாதிமத பேதம் ஒழிய வேண்டும் என நினைத்தாளோ, அதே ஜாதிப் பிரச்சனை எந்தளவுக்கு விசுவரூபம்; எடுத்து தன்னையும் தன் கணவனையும் சுமார் ஏழு வருடங்கள் பிரித்து விட்டிருக்கிறதே? இத்தனை வருடங்களிலும் காமம் மிகுந்து திரியும் கயவர்களை சமாளிக்க எத்தனை போராட்டங்களை நடாத்த வேண்டியிருந்தது. தாலியிருந்தும் வேலியில்லாத பயிர் போல் தன்னைத் தானே எண்ணி அந்தரப்பட்டாளே. தத்தமது மனைவியருடனேயே வந்து பிள்ளையை தூக்கும் சாட்டில் இவள் மார்பை வருடும் எத்தனை பேர்? இளமை வாட்டத்தில் கணவனது படம்; பார்த்து எத்தனை இரவுகள் நெட்டி முறித்து படுத்திருப்பாள்?
எப்படி அவளால் இருக்க முடிந்ததோ?

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

பெயருக்கேற்றாற் போல மிக இளமையாக இருந்த போது தான் பசு தோலுரிக்கப்பட்;ட மனிதர்களின் முகங்களை முழுமையாகக் கண்டு அதிர்ந்து போனாள். உலகத்தில் யாருமே பண்ணாத ஒன்றை அவள் செய்தாளா? இல்லையே.....ஆனால் உலகத்தில் அரங்கேறும் மிகப் பிரதானமான குற்றமும் இது தானா?

காதல்!!!

இந்த மந்திர வார்த்தையின் சுகத்தை முழுமையாய் உணரு முன்பே காலம் அதன் கை வரிசையை எப்படியெல்லாம் காட்டிப் போயிற்று? அந்த ஒரே ஒரு காரணத்துக்காக ஊருக்குள்ளேயே எப்பேர்ப்பட்ட அவமானங்கள்? உண்மையில் இவற்றுக்கெல்லாம் காரணம் அவளுடைய காதலா? இல்லை.. காலம் தொட்டு பேசப்பட்டு வரும் ஜாதிகளுக்கிடையிலான வேறுபாடா?

பாடசாலை காலத்திலிருந்தே வாலிப்பான அவளது உடலமைப்பு மேல் மையல் கொண்டிருந்தவன் தான் அந்த சரவணன். காதலை காரணம் காட்டி அவளை அடையும் அவனது நோக்கம் புரியாதளவுக்கு இவளென்ன முட்டாளா? எக்காரணம் கொண்டும் அவனது காதலை ஏற்க அவள் தயாரில்லை. அதையும் விட அவளுக்குள் ஓர் எறும்பு சதாவும் ஓடி ஓடி உயிரை வதைத்துக் கொண்டிருந்ததே? மனசுக்குள் போட்டு பூட்டி வைத்திருந்த காதல் புகையை மறைக்க அவளால் முடியாமல் போன போது சாடைமாடையாக குமரனிடம் ஒப்பேற்றினாள். அவன் வரும் போது நாணிச் சிவந்தாள். ஏ.எல் பரீட்சையில் தமிழ் பாடம் செய்த அவள் திருவள்ளுவர் கூறும் உயர்குடி, தாழ்குடி பற்றி அறிந்து வைத்திருந்தாள். ஒழுக்கம் ஒன்றே மனிதனை உயர் குடியில் சேர்த்து விடும் என்று அவள் கருதிக் கொண்டாள்.

ஆதி கால சமூகம் தொட்டு குலம் கோத்திரம் பார்த்து மக்கள் தங்களுக்குள் பிரிவினை பட்டுப் போவதை அவளால் தாங்கிக் கொள்ள முடிந்ததேயில்லை. ஒரே இறைவனின் படைப்பு, ஒரே நிற இரத்தம் இது தான் மனித இனம் என்று அவள் எண்ணினாள். வண்ணாண் அழுக்ககற்றி கழுவும் ஆடையை ஆடம்பரமாய் உடுத்தும் அவளது தந்தை, வீட்டு வாசலுக்குத் தானும் அவர்களை வர விடாது படலை வரை மட்டுமே அனுமதித்து காசு கொடுப்பதை பார்த்து மனம் வெதும்பியிருக்கிறாள். மா இடிக்க வருகிற ஆயாவையும் கொல்லைப் புறத்தில் நிற்க வைத்து வேலை வாங்குவதையும் பார்த்துப் பொறுக்காமல் பெற்றோரிடம் வினவியிருக்கிறாள். தமது இனங்களுக்கிடையிலேயே ஏன் இத்தகைய வேறுபாடுகள் என எதிர்வாதம் புரிந்து இருக்கிறாள்.

அப்போதெல்லாம் ~நீ சின்னப் பொண்ணு இதையெல்லாம் பேசப்படாது| என்று அதட்டப்பட்டாள். இயற்கையிலேலே இரக்க குணம் கொண்ட அவள் இப்படிப்பட்ட அரக்க குணங்களை அடியோடு வெறுத்தாள். அதன் காரணமாகவோ என்னவோ குமரனை விரும்பினாள். ஆனால் அவனோ தப்பித் தவறியேனும் அவள் பக்கம் பார்ப்பதேயில்லை. எதேச்சையாக கண்டு கொண்டாலும் கூட திரும்பிக் கொண்டு போய் விடுவான்.அப்போதெல்லாம் பச்சைப் புண்ணில் மிளகாய் பட்டது போல அவளது உள்ளம் துடிக்கும். எனினும் இளையராணி தளர்ந்து போய் வில்லை. புற்றீசல் போல் வெளிப்பட்ட அவள் காதல், குமரனின் இதயத்தில் புற்றை அமைக்க அவா கொண்டது.
காலம் அதன் பாட்டில் கடந்து கொண்டிருந்தது. நான்கு மாதங்களின் பின் அவளது முயற்சிக்கு பலன் கிடைத்தது போல் அவனது புன்னகை கிட்டியது. விட்டில் பூச்சி தானாய் வலிய வலம் வந்தால் எந்த விளக்கு தான் விரட்டியடிக்கும்?? என்றாலும் வேண்டுமென்று அவள் விழுந்து அல்லல் படுவதை குமரன் விரும்பவில்லை. பக்குவமாக எடுத்துச் சொன்னான். அவளும் அவன் தான் வேண்டும் என்று உறுதியாகவே நின்றாள்.

ஆறு மாதங்கள் ஆனந்தமாய்த் தான் கழிந்தன. அதற்குப் பிறகு தான் புயலடிக்கும் என்று யார் கண்டது?? இந்த விவகாரத்தை முதலில் எதிர்த்தவன் சரவணன் தான். குமரனை மிரட்டினான். அவளை இனி சந்திக்கவே கூடாது என்றான். ஆனால் இளையராணியின் அன்பு நதியில் நீச்சலடித்துக் கொண்டிருந்தவன் இவற்றையெல்லாம் துளியளவும் பொருட்படுத்தவில்லை. எதற்காகவும் இந்த காதல் ஜோடி அஞ்சவில்லை. தம் காதல் மூலமாகவேனும் சமூகத்தில் நிலவி வரும் மூட நம்பிக்கைகள் ஒழிந்து போகட்டும்; அல்லது நம்முடன் சேர்ந்தே இந்த ஜாதிப்பிரச்சனைகள் அழிந்து சாகட்டும் என சபதம் எடுத்துக் கொண்டனர். எதிர்ப்புகள் காதலை மேலும் வலுவடையத்தானே செய்கின்றன. இவர்கள் தம் காதலில் இன்னும் உறுதியானார்கள்.

இது இளையராணியின் பெற்றோரின் காதுகளுக்கு கிட்டிய போது பதைபதைத்துப் போனார்கள். சமூக கட்டுப்பாட்டிலிருந்து அவர்கள் என்றுமே விலகி நடந்ததில்லை. அப்படி ஏடாகூடமாய் எதுவும் நடந்தால் ஊர் தம்மை தள்ளி வைத்து விடுமே என பயந்தார்கள். முழு ஊருக்கும் தெரியு முன்பே இளைய ராணியையும் அழைத்துக் கொண்டு எங்காவது கண்காணா தேசத்துக்கு ஓடி விட அவர்கள் முடிவெடுத்தார்கள். இருபது வருடமாய் வளத்த வளர்ப்புக்கு அவள் தேடித்தந்த வெகுமதியா இது?
ஒரே பெண் என்று எப்படியெல்லாம் பாசத்தை ஊட்டி வளர்த்தார்கள். அவளுக்கு குறை வைக்கக் கூடாதென்று இன்னொரு குழந்தையை பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்று கூட அவர்கள் தங்களுக்குள் கலந்தாலோசித்தார்களே.......அத்தகைய அன்பிற்கு இந்த தண்டணை போதுமா?

எத்தனை பெற்றோர்கள் இன்று இந்த பாட்டைப் படுகிறார்கள்? காரணமென்ன காதலா? சாதிமத பேதமா?

அவளாவது யோசித்திருக்கலாமே? தன்னைக் கேட்காமல் படிக்க வைத்து, தன்னைக் கேட்காமல் சாப்பிடத் தந்து, தன்னைக் கேட்காமல் ஆடை அணிகலன் தந்த பெற்றோர் தனக்குத் தேவையான வயதில் வரன் தேடித்தராமல் இருப்பார்களா? காதல் இவ்வளவு வலிமையானதா?

எப்படியோ ஊரை விட்டு போகும் யோசனையை இளைய ராணியே நிறைவேற்றி விட்டாள். ஆம்! அவள் குமரனுடன் ஓடிப் போனாள். ஊரார்களுக்கு முன்னே நின்று தலைவிரி கோலமாய் அவளது அம்மா அவளை திட்டிக் கொண்டிருந்தாள். தான் பெற்ற பிள்ளையை ஒரு தாய் இப்படி திட்டுவாளா என்று ஊர் வம்பை அவல் தின்னும் பெண்களே மனம் கலங்கினர். ஆனால்.....அதன் உள்நோக்கம் மற்றவர்கள் திட்டுவதை விட தானே திட்டுவது போல நடித்தது தான் என்பது யாருக்குத் தெரியப் போகிறது?
இந்த சம்பவம் சரவணனை மிருகமாக்கி விட்டிருக்கும் என்று யாருமே நம்பியிருக்க மாட்டார்கள். சாதி வெறி பிடித்தலையும் ஒருவன் என்றே இளைய ராணி போன்றோர் நினைப்பார்கள். சமூக கட்டுப்பாடு மீறாதவன் என ஊரார் எண்ணுவார்கள்.தன்னை ஏமாற்றி விட்டு இன்னொருவனுடன் போய் விட்ட அந்த அவமானத்தை அவன் ஏற்றுக் கொள்ள திக்கித் திணறினான். நண்பர்களிடம் கேலிக்குரியவனானான்.

இவனைப் போன்றே அவள் மீது காதல் கொண்டவர்கள் ~அவங்களை சும்மா விடக் கூடாது| என கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயில் எண்ணெய் விட்டு வேடிக்கை பார்த்தனர்.

ஒரு குழுவாக இயங்கி அவர்களை தேடித்தருவதாக அவள் பெற்றோரிடம் வாக்களித்தனர். இனிமேலும் இந்த ஊரில் இப்படிப்பட்ட தவறுகள் இடம் பெறக் கூடாதென்று மேடை அமைத்துப் பேசினர்.

எதுவுமே தெரியாமல் குமரனுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள் இளையராணி.தாய் தகப்பனை விட்டு விட்டு வந்த சோகம் குடி கொண்டிருந்தாலும், குமரனின் அணைப்பில் அவளது கவலைகள் கட்டுப்பட்டிருந்தன. இல்லற வாழ்வின் இனிமை இத்தனை சுகமா என அவள் ஆனந்த ஏக்கம் கொண்டிருந்தாள்.அதற்கு கண் வைத்தாற் போலத் தான் இவர்களின் வாழ்க்கையில் மீண்டும் பேரிடியாக வந்தான் சரவணன். தான் மணமுடிக்க இருந்த பெண்ணை கூட்டிக் கொண்டு வந்ததற்காக முதலில் வசை பாடினான். பிறகு கையோங்கினான். கீழ் சாதியான் தனக்கு பயப்படுவான் என்று எண்ணியே அவன் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும். முதலில் செய்வதறியாமல் பின்னே நகர்ந்தான் குமரன். அதை கண்ட சரவணன்; உடனே அவளை நெருங்கி பிள்ளை வயிற்றுக்காரி என்று கூட பாராமல் சட்டையை பிய்த்து உதட்டோடு.................ச்சீ!!
ஆனால் ....காதல் தந்த தைரியம்....வெறி கொண்டவனாய் எழுந்து சரவணனை தாக்கினான் குமரன்;;;. இந்த திடீர் தாக்குதலால் நிலை குலைந்து போவான் என்று சரவணன் கூட எண்ணியிருப்பானா? ஒரு நிமிடத்துக்குள் தனக்கு நடக்கவிருந்த அட்டகாசத்தை எண்ணி உயிர் நடுங்கிய இளையராணியே குமரனின் வெறியைக் கண்டு ஆச்சரியப் பட்டாள். எல்லாவற்றிற்கும் அவள் தான் முதலில் அத்திவாரம் போடுவாள். அவன் திறமையாக கட்டி முடிப்பான். அவனாக ராகமிசைத்து அவளை வழிக்கு எடுப்பதில்லை. அப்படிப் பட்டவன் இவ்வாறு நடந்து கொண்டால் யாருக்குத்தான் ஆச்சரியமிருக்காது?

ஒரு நிமிடம்.. ஒரே ஒரு நிமிடம் ஆனந்தப் பட்டவளுக்கு தன் கண் முன்னே நொடிப் பொழுதில் அரங்கேறி விட்ட அந்த காட்சி....ஈரலை குளிரச் செய்தது.!

கடவுளே..

கத்தியில் இரத்தம் சொட்டச் சொட்ட அவள் கணவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தான்
அருகில் சரவணண் இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்தான்!!!

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ


இன்று ஏழு வருடங்களின் பின் குமரன் விடுதலையாகி வருகிறான். சரவணனின் இரத்தத்தோடு ஜாதி வெறியும் அழிந்து போய் விட்டிருந்தது. காலம் காலமாக பொய்மைக்குள் வாழந்திருந்த சமூகம் விழித்துக் கொண்டு விட்டது. இளையராணியின் பெற்றோர் உட்பட குமரன் வீட்டாரும் சாதி



சனம் மறந்து அவர்களை ஏற்றுக் கொண்டனர்.

இன்று விடுதலையாகி வரும் அவனை அழைத்து வர, பாடசாலை போகிற தங்கள்; பிள்ளையையும் கூட்டிக் கொண்டு அவள் புறப்படுகிறாள். இன்று அவளது கனவுகள் உயிர் பெறப் போகின்றன.

(நிறைவு)

No comments:

Post a Comment