Monday, May 24, 2010

படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா !

ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் தியத்தலாவை என்ற ஊரைச் சேர்ந்த இளம் கவிதாயினியும், சிறுகதை படைப்பாளியுமான எச். எப். ரிஸ்னா, ஹலால்தீன் - நஸீஹா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார்.

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா என்ற சொந்தப் பெயரையே பெரும்பாலும் பயன்படுத்தி வரும் இவர் கவிநிலா, குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருவதுண்டு. சொந்த ஊரான தியத்தலாவையிலிருந்து இடம்பெயர்ந்து வந்து உயர்படிப்புக்காக தலைநகரில் தங்கியிருக்கிறார்.

துரம் 03ல் கல்வி கற்கும் போதே பூங்கா என்ற சிறுவர் சஞ்சிகையில் இவரது ஆக்கம் வெளிவந்தது. அத்துடன் மீலாத் தின போட்டிகள், தமிழ்தினப் போட்டிகளில் பங்குபற்றி பல தடவைகள் முதலிடத்தை பெற்றிருக்கிறார்.

தரம் 08ல் கற்கும் போதே கவிதையின் படிக்கட்டுக்களில் காலடி எடுத்து வைத்த இவரது முதல் கவிதை 2004ம் ஆண்டு மெட்ரோ நியூஸ் என்ற பத்திரிகையில் காத்திருப்பு என்ற தலைப்பில் வெளிவந்தது. அதையடுத்து இதுவரை சுமார் 120க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 20க்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

துன்பம், சந்தோஷம், இனிமை, காதல், பெண்ணியம், சமூக அவலம், சீதனக்கொடுமை, மலையகப் பிரச்சனைகள் என்பன இவரது பாடுபொருள்களாக காணப்படுகின்றன.

வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளான ஓசை, நிஷ்டை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், அல்லஜ்னா, நிறைவு, ஞானம், இந்திய சஞ்சிகையான இனிய நந்தவனம், மற்றும் இணையத்தளங்களான www.vaarppu.com, www.youthfulvikatan.com பெண்களின் குரலாக ஒலிக்கும் www.oodaru.com, போன்ற வலைப்பதிவுகளிலும் அவருடைய ஆக்கங்கள் பதிவாகியுள்ளன.www.riznapoems.blogspot.com, www.riznastory.blogspot.com, www.poetrizna.blogspot.com ஆகிய தன்வலைப்பூக்களிலும் அவரது படைப்புக்களைப் பார்வையிட முடியும்.

2008ம் ஆண்டு ஏப்ரல் 20 - 26 வார சுடர் ஒளி பத்திரிகையில் வெளிவந்த உணர்வுகள் என்ற பகுதியிலும், 2008 புரட்டாதி மாத செங்கதிர் சஞ்சிகையிலும் மற்றும் 2010ம் ஆண்டு பெப்ரவரி ஞானம் சஞ்சிகையிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் பிரசுரமாகியுள்ளன.

பிறை எப்.எம்., சக்தி எப்.எம்., இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மற்றும் நேத்ரா அலைவரிசையில் கவிதை கூறியிருப்பதுடன் கடந்த 2010 பெப்ரவரி 03ம் திகதியன்று இவரது நேர்காணலும் இடம் பெற்றது.

தற்போது BEST QUEEN FOUNDATION என்ற அமைப்பின் பிரதித் தலைவராகவும் (bestqueen12@yahoo.com, www.bestqueen12.blogspot.com) பூங்காவனம் சஞ்சிiயின் ஆசிரியர் குழுவிலும் சேவையாற்றி வரும் இவர் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.

பேய்களின் தேசம் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற இவருடைய இரு கவிதைத் தொகுப்புக்களும் கனவுகள் உயிர் பெறும் நேரம் என்ற சிறுகதைத் தொகுதியும் இலக்கிய உலகத்துக்குள் நுழைய காத்திருக்கிறது.

இலக்கியத் துறையில் மாத்திரமன்றி கணினித் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் Information & Communication Technology என்ற கற்கை நெறியைப் பூர்த்தி செய்து Diploma பட்டத்தையும் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கவி வானில் உலா வரும் இக் கவிநிலாவுடன் தொடர்பு கொள்ள...

E-Mail- poetrizna@gmail.com

Thursday, May 20, 2010

காணாமல் போன கவிதை

நிஸ்தார் நானா கேட்டை திறந்து வெளியே வந்து பார்த்தார். எறும்புக்குட்டங்களாய் வாகனங்கள் போய்க் கொண்டிருந்தன. இந்த நிமிடத்தில் அவசரமாக பாதையைக் கடக்க வேண்டும் என்றால் உணிரைத் தான் விட வேண்டியிருக்கும்.
என்ன யோசிக்கிறீங்க... வாங்க சாப்பிடலாம்
சொல்லிக் கொண்டு வந்த மனைவியைப் பார்த்து புன்னகைத்தார்.
புள்ளையள் ரெண்டு பேரும் டியூஷன் பொயிட்டாங்களா?
ம்ம்... சாப்பாடு கொடுத்து அனுப்பிட்டேன்... வாங்க நாம சாப்பிடலாம் என கூற அவரும் வீட்டுக்குள் வந்தார்.
¨¨¨¨¨¨¨¨¨¨
அவருக்கு முப்பத்தியிரண்டு வயதிருக்கும். என்றாலும் இருபத்தியாறு வயது போலத் தான் தோற்றம். காது மடலருகே எட்டிப் பார்க்கும் வெள்ளை முடியை பின்புறமாக சீவி விட்டால் வாலிபன் தான் நிஸ்தார் நானா. மனைவி ரயீஸா மட்டும் என்னவாம். இரட்டைக் குழந்தைகளின் தாயார் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்? இயற்கை இவர்களிடம் அதீத பாசம் கொண்டு இளமையை வாரி வழங்குகிறதா என்றே எண்ணத் தோன்றும்.

நிஸ்தார் நானா ஆசிரியர் நியமனம் பெற்று எட்டு வருடங்களிருக்கும். அவரது வாழ்வில் அடி, தண்டிப்பு, கோபம் என்றெல்லாம் மாணவர்களிடம் வெளிக்காட்டியதேயில்லை. அன்பும் பாசமும் தான் ஒருவனை நல்லவனாக்கும் என்று எப்Nபுhதோ அனுபவம் மூலம் அறிந்தவர். உயர்வகுப்பு மாணவர்களுக்கெல்லாம் இவர் தான் பெஸ்ட் பிரண்ட். மனசு விட்டுப் பேசி மாணவர்களின் குறை நிறைகளை அறிந்து உதவுவார். அவர்களுடனிருக்கும் போது தன் இளமை நினைவுகளில் மாறிப்போவார்.

என்ன சேர்..அந்தக்கால யோசினை வந்திட்டா? குறும்புக்கார மாணவன் கேட்க,
ஓமோம். ரோமியோ ஜுலியட் காலம். போய் திருக்குறள் பாடமாக்கு. நாளைக்கு பரீட்சை என ஆதரவாக கூறி அனுப்பினார்.

அவன் கேட்டதும் சரி தானே?
எவ்வளவு வசந்தமான காலங்கள் அவை?
¨¨¨¨¨¨¨¨¨¨
ஆசிரிய பயிற்சிக் கலாசாலை... அங்கு தானே அவருக்கு மறக்க முடியாத காலம். ஸீனியர் மாணவர்க்ள எல்லாம் இவரை பாடச்சொல்லி அதட்டினார்களே?

ரேக்கிங் பற்றி கேள்விப் பட்டிருக்கிறார் தான். ஆனால் இப்படியுமா?
பாடசாலைக் காலத்தில் எந்தவித வம்புதும்புக்கும் போகாதவர் இவர்களிடம் மிரண்டு தான் போனார்.
ப்ரதர் எனக்கு பாட வராதே
என்னடா பாக்குற பாடன்னு சொல்றேனில்ல.. மீண்டும் அதட்டல்கள்.
பாடவா ஓஓர் பாஆஆடலை..... குரல் நடுங்கியது நிஸ்தார் நானாவுக்கு.
ஸீனியர் மாணவர்கள் எல்லாம் குடல் வெளியே தெரியுமளவுக்கு சிரித்தார்கள். பாடலை நிறுத்தச் சொல்லி, நிறுத்தியதற்காக பாராட்டினார்கள். பின்பு அவர்கள் அனைவரும் நண்பர்களாகி வாழ்க்கையை அனுபவித்ததெல்லாம் மனசில் பதிந்த இனிப்புகள் அல்லவா?

டேய் மச்சான் சூப்பர் ஃபிகர்டா..வா போய் பார்க்கலாம்
ஸீனியர் மாணவன் கூப்பிட்டும் பேகாவிட்டால் என்ன நடக்கும் என்று முழு பல்கலைக்கழக வளாகமும் அறியும். ஆதலால் குட்டி போட்ட பூனை போல நிஸ்தார் நானாவும் சென்றார்.
போய் அந்தப் பெண்ணைப் பார்த்தவர்.....
¨¨¨¨¨¨¨¨¨¨
பாடசாலை விடுவதற்பாக மணி ஒலித்தது. தன் மோட்டார் சைக்கிளின் உதவியுடன் அரை மணி நேரத்துக்கெல்லாம் வீ வந்து சேர்ந்தார். சாப்பிட்டு விட்டு வந்தவருக்கு மனைவி நீட்டிய பானத்தில் பார்வை நிலை குத்தியது. அதனூடே மீண்டும் அந்தப் பெண் அவரது புலன்களுடே வந்து சலனமூட்டிள்.

அப்படித்தான். ஒருநாள் சிற்றுண்டிச்சாலைக்கு நுழைந்து தொண்டை வரை சாப்பிட்டார். அந்த நேரம் பார்த்து ஒரு குரல்..

அங்கிள் கொக் ஒன்னு ப்ளீஸ்..

திருமியவருக்கு வியப்பு. என்ன அழகான குரல். பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் அவரை நோக்கி நெருங்கிக் கொண்டு வந்தாள்.
பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா எனப பார்ததார். இல்லை. அவருக்கு மின்னலடித்தது. அவர் கைகளில் கோக்கா கோலாவை தந்து விட்டுப் போனாள்.
அவரது மனசை ஓராயிரம் பட்டாம்பூச்சிகள் குடைய ஆரம்பித்தன. அடுத்த நாள் காலை சற்று லேட்டாகி எழுந்தவர் தனக்குத்தானே கனவு முழுவதும் கன்னியவள் வருகை என்றார்.
¨¨¨¨¨¨¨¨¨¨
அட கவிதை கூட வருமோ, கண்களை சிமிட்டிய படி ரயீஸா வர, வெலவெலத்துப் போனார் நிஸ்தார் நானா.
காப்பி பொடி தீர்ந்துடிச்சி. வாங்கிக்கிட்டு லைப்ரரியில புள்ளயள் நிப்பாங்க. அழச்சிக்கிட்டு வந்துடுங்க
¨¨¨¨¨¨¨¨¨¨
லைப்ரரி!
அது கூட நெஞ்சிலிருந்து அகலவில்லை. எதை மறக்க நினைக்கிறோமோ அது தான் அடிக்கடி நினைவில் வந்து போகும் என்று எங்கோ வாசித்த வரிகள் அவருக்கு ஞாபகம் வந்தது.
எத்தனை முறை அவளுpடம் பேசவென்று முயற்சித்திருப்பார். ஒரு பார்வை... ஒரு புன்னகை...
இதையே பார்த்து எவ்வளவு நாள் சீவிப்பது? மனம் திறந்து ஒரு வார்த்தை??

ஆம்! பேசக்கிடைத்தது. ஆனால் நான்கு மாதங்கள் கழிந்து ஒரு கலைவிழாவின் போது தான்.
அவள் கவிதை சொல்வதற்காக மேடை ஏறிய போது பலத்த கரகோஷம். கவிதையே கவிதை சொல்கிறதா? என்று வியந்தார்.
அதை சாட்டாக வைத்து பாராட்னார் அவளும் சிரித்தாள்.

நாளிராவுடனான அவரது பார்வை மற்ற ஆண்களிலிருந்தும் வித்தியாசப்படுவதை உணர்ந்தாள் நளீரா. அவரது காதல் மனம் அவளுக்கு விளங்கியது.

அதன் பிறகு பயிற்சிக்கலாசாலையிலிருந்து அவர் பாடசாலைக்கு மாறினார். இதன் போது தன் தந்தையின் உத்தரவுக்கிணங்க நளீரா போவது கட்டாயமானது. சந்திப்புகள் யாவும் வுங்சனை ஆனதால் கண்ணீருக்கு கைகளை அணையாக்கிப் பார்த்தார்கள். முடியாமல் போகவே பிரிவு என்பது உண்மை என உணர்ந்தார்கள். அவர்களது எதிர்கால கனவுக் கோட்டையை காற்று அடித்துச் சென்று காணாமலாக்கும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?
ஊருக்குச் சென்ற நாளிராவின் தொடர்பு திடீரென்று குறைய மலை உன்று இடம் பெயர்ந்து தன் நெஞ்சில் இருப்பதை உணர்ந்தார். உண்மையாக காதலித்தவர்களுக்கு காத்திருப்பதில் தானாம் சுகம் அதிகம். ஆனால் மானசீகமாக காலித்த நிஸ்தார் நானாவுக்கு பொறுமை என்பது பொய்யாகிப் போனது. எனவே அவர் அவளைப் பார்க்கவென்று புறப்பட்டார்.
ஒரு வேளை போகாமல் இருந்திருந்தால் நாளிரா அவரை ஏமாற்றி விட்டுப் போயிருக்கிறாள் என்றோ அல்லது பெண்களே பேய் என்றோ பிதற்றித் திரிந்திருக்கலாம். ஆனால்....

இதோ அவள் பாதி நிர்வாணத்துடன் பிணமாக கிடந்ததாக ஊரார் பேசிக் கொகின்றார்களே. இதைக் கேட்கத்தான் ஓடி வந்தாரா? சிறுவயதிலிருந்தே நாயிராவுடன் ஒன்றாக விளையாடிய இனிய நண்பனப இப்பயான கொடுமையைச் செய்தவன்? மூர்ச்சித்து விழுந்தார் நிஸ்தார் நானா.
¨¨¨¨¨¨¨¨¨¨
இன்றும் அவர் நினைவுகளில் நாளிரா வந்து போவதுண்டு. நாளிராவை மறந்த கயவராக அவர் இல்லை. அதே போல நாளிராவை நினைத்துக் கொண்டு ரயீஸாவுக்கு துரோகமும் செய்யவில்லை. அவரைப் பொறுத்தவரையில் நாளிராவைமறக்க முடியாது ஏனெனில் அந்த நாளிரா...அவரது காணாமல் போன கவிதை!!!

தெளிந்த வானம் !

அந்தப் பகல் அகோரமாய் காட்சியளித்தது. சூரியன் தன் மனைவி சாயையை தேடி நிலத்தின் வெடிப்புகளுக்கிடையிலும் தன் கதிர் எனும் கைகளை செலுத்திக் கொண்டிருந்தான். கடையில் கணக்கு வழக்குகளைப் பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்த அஸ்லம் எதிர்பாராத விதமாக அக்காட்சியைக் கண்டுவிட்டான். ஆம் அவனது தந்தையும் அவளும் வழியில் பேசிக்கொண்டு இருக்கிறார்களே! பேசுகிறார்களா? வாப்பா ஏதேதோ அவளுக்கு கைநீட்டி ஏசிக் கொண்டல்லவா இருக்கிறார்.

முக்கிய தேவைகளின் போது தனக்கு கோல் பண்ணுவதற்கு ஒரு மொபைல் போன் வாங்கித்தருவதாக அஸ்லம் தான் அவளை வரச்சொல்லியிருந்தான். காலை பத்தரைக்கு வந்து வாங்கிக்கொண்டு போனாளே... இப்போது இரண்டு மணி கடந்து இங்கென்ன செய்கிறாள்? இந்த மனிதரிடம் வசமாகவே மாட்டிக்கொண்டுவிட்டாளே? மனிதத் தன்மையை மறந்து அவள் மனசை என்ன பாடுபடுத்தி இருப்பாரோ இந்த வாப்பா? ஒரு வேளை நான் மொபைல் வாங்கிக் கொடுத்ததையும் வாப்பாவிடம் போட்டுக்கொடுத்து விட்டாளோ?

சொல்லியிருந்தால் தான் என்னவாம்? அஸ்லமிடம் கேட்கும் உரிமை அவளுக்கு இருக்கிறது தானே? அவளது தேவைகளை கவனிப்பது அஸ்லமின் பொறுப்பில்லையா? பாவம் ரமீஸா!

தன் வாழ்வுரிமை மீறப்பட்டதால் தானே இப்படியொரு இக்கட்டுக்கு விருப்பமின்றியேனும் தள்ளப்பட்டாள். இப்படி அஸ்லமுக்கு தோன்றி என்ன பயன்? அவளது வாப்பாவான தாஸீம் ஹாஜியாருக்கல்லவா தோன்ற வேண்டும்? ஏன் தான் வாப்பாவுக்கு புத்தி இப்படிப் போகிறதோ? பௌதீக மாற்றமேனும் நிகழ்ந்துவிட்டதோ? வாப்பாவை எதிர்த்து அவளை இந்த வீட்டுக்கு அழைத்து வரும் தைரியம் அஸ்லமுக்கு இல்லை தான். அவ்வளவு கையாலாகாதவனா அஸ்லம்? இவர்களை விட்டால் ரமீஸா எங்கு போவாள்?

யோசித்தவாறே பகல் சாப்பாட்டுக்கு வந்திருந்த அஸ்லமைப் பார்த்ததும் அவனது தாயான பாயிஸாவுக்கு அவன் இதயம் புரிந்துவிட்டது.

என்ன ராஜா இன்னிக்கு ரமீஸாவ கண்டுட்டீங்களா?

ஓம் உம்மா. அதுவும் வாப்பாகிட்ட வசமா மாட்டிட்டாளே. என்று கூறியதை கேட்ட பாயிஸாவுக்கும் தூக்கிவாரிப்போட்டது. கண்மண் தெரியாமல் தாஸீம் ஹாஜியார் அவளை ஏசியிருப்பார் என்றே பாயிஸா கவலைப்பட்டாள்.

சற்று நேரத்தில் அஸர் தொழுதுவிட்டு வந்த ஹாஜியார் அஸ்லமை பன்மையில் கூப்பிட்டார். அவர் அப்படி கூப்பிட்டால் நிச்சயமாக ரமீஸாவை, தான் சந்தித்த விடயம் தெரிந்திருக்க வேண்டும். ரமீஸாவை தான் சந்தித்து பேசிய விடயத்தை கேள்விப்படும் ஒவ்வொரு முறையும் இவனுக்கு பன்மையில் அழைப்பு வரும். பிறகு காதுக்கு அர்ச்சனை நடக்கும். ஏன் தான் இப்படியோ என்று நினைக்கும் போது அஸ்லமுக்கு மூளையில் எரிச்சல் பரவும். அஸ்லமுக்கும் ரமீஸாவுக்கும் இடையில் இருக்கும் பந்தம் பற்றி இவருக்கு என்ன தெரியும்?

காதலித்திருந்தால் தானே... ரமீஸாவின் மனநிலையை புரிந்திருப்பாரே? ஏதோ இவர்களின் தந்தைமார்களின் ஸ்நேகிதத்தால் தான் உம்மாவும் வாப்பாவை மணமுடித்திருக்கிறார். தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்! எத்தனை முறை இப்படி உயிரை வாங்கிவிட்டார்.

அவர் தனது வெறுப்பை அடிக்கடி வெளிப்படுத்துவதால் தானோ என்னவோ அஸ்லமுக்கு ரமீஸா மீதிருந்த அன்பு அதிகரித்துக் கொண்டே சென்றது? இல்லாவிட்டால் அதிகரித்திருக்காதா? இது என்ன புதிர்? இருபத்திமூன்று வயது வரை அவளுடன் தானே பேசி, சிரித்து வாழ்ந்தான். அவனை விட இரண்டு வயது வித்தியாசம் தானே அவளுக்கு இருந்தது!

பாயிஸாவுக்கு அவளை ரொம்பவும் பிடிக்கும். பிடிக்காமல் போகுமா? என்ன தவறு செய்தாலும் பாசம் கண்ணை மறைத்துவிடுமாமே? அவளை வீட்டுக்கு வந்திருக்க அனுமதிக்குமாறு எத்தனை முறை தன் கணவனிடம் சண்டை போட்டிருப்பாள் பாயிஸா?

அஸ்லம்!!!

வாப்பா மீண்டும் கூப்பிடுவது கேட்ட போது அஸ்லமின் கை கால்களில் உதறல் எடுக்கத் தொடங்கின. என்ன கேட்கப் போகிறாரோ என்று எண்ணியபடி சாரத்தை இருகக் கட்டிக்கொண்டு வாசலினருகே வந்து நின்றான்.

சொல்லுங்க வாப்பா...

இப்படி பயந்தபடி வாப்பா முன் போய் அழாத குறையாக நிற்பதற்கு அவன் ஒன்றும் ஒன்பது வயதுச் சிறுவனல்ல. கடந்த செவ்வாயன்று தான் இருபத்தி ஐந்து வயதை எட்டிப் பிடித்திருந்தான். தன் முன்னால் வந்து நின்ற அவனை பார்த்தார் ஹாஜியார்.

உங்களுக்கு இப்படி ஒரு மகன் கிடைக்க கோடி புண்ணியம் செஞ்சீக்கோணும் அடிக்கடி பஸ்லியா மாமி வாப்பாவிடம் கூறுவாள். தன் மகள் சியானாவுக்கு இவனை கணவனாக்கிவிட வேண்டும் என்ற உள் நோக்கம் அவளுக்கிருப்பதை ஹாஜியார் உற்பட அனைவரும் அறிந்திருந்தனர்.

பஸ்லியா மாமி சொல்வதிலும் தவறில்லையே? உண்மையில் அஸ்லம் போல் ஒருவனை தன் மகளுக்கு கணவனாக்க முடிந்தால் அந்த பெற்றோர் நன்மை செய்தவர்கள் தான். பாடசாலையில் உயர்தரம் படிக்கும் போது கூட பெண்கள் பின்னால் வலிய செல்வதும், சைட் அடிப்பதும் நண்பர்களோடு இணைந்து மானம் மரியாதை இழந்து பெண்களை இழிவு படுத்துவதும் கொஞ்சம் கூட அவனுக்கு பிடிப்பதேயில்லை.

தன் தாய் தந்தையர் பார்த்து தனக்கும் அவளைப் பிடித்தால் அவளை மணமுடித்து அதன் பிறகு அவளைக் காதலிக்கலாம். பார்க், பீச், ஹோட்டல் என்று உள்ளாசமாக காலத்தைக் கழிக்கலாம் என்று நண்பர்களிடம் கூறுவான். அப்போதெல்லாம் அவனுடைய ஸ்நேகிதர்களின் கேலிப் பேச்சுக்களுக்கு சிறைப்பட்டுத் தவிப்பான்.

கற்பென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அதைப் பெண்களுக்கு மட்டுமே உரியதாக இந்தக் குருட்டுச் சமூகம் ஓரங்கட்டிவிட்டதுடன் ஆண்களுக்கு ஆரோக்கியமற்ற சுதந்திரத்தையும் தந்துவிட்டது. காதல் மட்டுமல்ல கலாச்சார ரீதியிலும் கூட மார்க்கம் கூறாத சில சம்பிரதாயங்களை கடைபிடிக்கும் இந்தச் சமூகம் குறித்து அஸ்லம் கவலைப்பட்டிருக்கிறான். அத்தகைய அஸ்லமுக்கு வந்து வாய்த்தாளே உறவாக ஒருத்தி?

அவளால் அஸ்லம், தாஸீம் ஹாஜீயார், பாயிஸா என்று அனைவருமே சந்தித்த பிரச்சினைகள்?

வாப்பா பெரு மூச்சுவிட்டார். என்ன சிங்கம் கர்ஜிக்கவில்லை? மனுஷன் மௌனமாக இருக்கிறார் என்றால் அவரை உளரீதியாக ஏதோ ஒன்று தாக்கியிருக்க வேண்டும்? புரியாமல் உம்மாவும், மகனும் தவித்தனர். அதை கண்டுவிட்டவர் போல அவர்களை மாறி மாறி பார்த்த ஹாஜியார் நிதானமாகக் கூறுவதற்காக தொண்டையைச் செருமினார்.

அவ கர்ப்பமாக இருக்கிறாளாம் இது ஹாஜியார்.

அஸ்லமின் நாடி நரம்புகள் ஒரு நிமிஷம் வேலை செய்யவில்லை. கர்ப்பமாக இருக்கிறாளா? தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே? ஏன் சொல்லவில்லை? என்னிடம் கூறாத அளவிற்கு வைத்திருந்த ரகசியத்தை சட்டப்படி வாப்பாவிடமா கூறுவது? நெஞ்சில் இடி இறங்கினாலும் ஏதோ ஒரு குதூகலம் அதனுள்ளும் எட்டிப்பார்த்தது. உள்மனம் மகிழ்ச்சிக்கூத்தாடியது.

ஹையோ பிள்ளை ஆணாக இருந்தால் என் மடி மீது ஓடி வந்து உட்காருவானே? பெண் பிள்ளை என்றால் வடிவாக உடுப்பாட்டி அழகு பார்த்து... ஓரு வேளை இரட்டையர்கள் என்றால் இருவரையும் மாறி மாறிக் கொஞ்சி...

எத்தனை கற்பனை அஸ்லமுக்கு? திடீரென ஏதோ நினைவு வந்தவன் போல வாப்பாவின் முகத்தை கூர்ந்து ஆராய்ந்தான். அதில் கோபத்தின் ரேகைகள் அறவேயில்லை. ஒரு வேளை தன் தவறு நினைவுக்கு வந்துவிட்டதோ அவருக்கு?

ரமீஸாவின் காதலை தாஸீம் ஹாஜியார் ஏற்காத காரணம், சமூகத்தில் அவருக்கிருந்த செல்வாக்கும் பணமும் தானே? அப்படிப்பட்டவர் வீட்டை விட்டு ஓடி வந்த ரமீஸாவை எப்படி ஏற்று அனுமதிப்பார்? அவர் நிலையிலிருந்து எண்ணும் போது அவர் பக்கம் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் அஸ்லமுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறதே?

பால்ய காலத்திலிருந்தே ஒன்றாக உண்டு, விளையாடி, படித்து... காதல் என்ற ஒன்றை காரணம் காட்டி அவனிடமிருந்து அவளை பிரித்தால் அவன் எப்படித்தாங்கும்? அவனை அவள் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாள். அத்தனை உரிமை? எல்லாம் பறிபோய்விடுமா?

பாயிஸா...

வாப்பா உம்மாவை சன்னமான குரலில் கூப்பிட்ட போது அஸ்லம் சந்தனை கலைந்தான். இனியும் அவளை ஏற்கனவே முடியாது என்று தீர்க்கமாக கூறிவிட்டால்... நினைத்த போதே ஈரல் குளிர்ச்சியடைந்தது.

பாயிஸா அவ உண்டாகியிருக்கிறத கேள்விப்பட்ட பின்பும் நான் பிடிவாதமா நின்றால் நான் மனுஷனா பிறந்ததே அர்த்தமில்லாம போயிடும். ரமீஸாட மாப்பிள ஸஜாத் இப்ப ஹோட்டல் வச்சிருக்கானாம். ஸஜாத் உடன் இவ வீட்ட விட்டு போனதுக்கு காரணமே நான் தானே? நல்ல பண்புள்ள ஸஜாத்தை மதிக்காம இழவு... பணம் பணம்னு என்ட பிள்ளைய பிரிஞ்சி ஒரு வருஷம் எப்படி இருந்தனோ? என் கவுரவத்தை கல்லில் அடிச்சி உடைச்சிட்டு இன்று இப்படி நடக்குமா?

இந்தா இருக்கானே உன் பையன் அஸ்லம் எப்பப் பாரு தங்கச்சி தங்கச்சின்னு உருகுறான். எனக்குத் தெரியாமலே அவளோட தனியே பேசி உதவிகளும் செய்திருக்கான். இப்படி ஒரு நானாவை விட்டுட்டுப் போக அவளுக்கு எப்படி மனசு வந்திச்சோ?
ராஜா.. நீயாவது எங்கள் விருப்பத்துக்கு கல்யாணம் பண்ணிக்கப்பா. ம்.. என்ன பாயிஸா என் ரத்தத்துல பொறந்தவனுக்கே தங்கச்சி மீது இவ்ளோ பாசம்னா என் மகள் மீது எவ்ளோ பாசம் எனக்கிருக்கும்? ஏதோ விதி வெளயாடிரிச்சி. சரி அஸ்லம் நீ இனி பயப்படாம உன் தங்கச்சியுடனும், மச்சானுடனும் பேசு. காலம் கடந்தாலும் என் கண்களை அல்லாஹ் திறந்திட்டான் என்று சொல்லு..

நீண்ட நேரமாக பேசிய வாப்பாவை ஆச்சரியமாக பார்த்தான் அஸ்லம். மூடியிருந்த இருள் மேகம் தாஸிம் ஹாஜியாரை விட்டு விலகிற்று. அவரது இதய வானமும் தெளிந்து விட்டது. இதைக் கண்ட பாயிஸாவுக்கும் ஆனந்த மேலீட்டால் கண்கள் கலங்கின.

இனியென்ன மீண்டும் ரமீஸா என்ற பட்டாம்பூச்சி இந்த வீட்டில் பறந்து திரியும். சொல்லி வைத்தாற்போல அந்த நேரம் பார்த்து தான் வாங்கிக் கொடுத்த போனிலிருந்து ரமீஸா கோல் பண்ணிய போது அஸ்லமின் உதடுகள் மௌனமாக அல்ஹம்துலில்லாஹ் என்று இறைவனுக்கு நன்றி கூறிக் கொண்டது!!!
(கற்பனை)

அவள் அவனுக்குச் சொந்தம் !

ப்ளீஸ் ரவி நான் சொல்றத கேளுங்க ரவி ரவி

அவன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை. முன்பிருந்தவனா இவன்? என்ன நினைப்பு? என தனக்குள்ளேயே கூறிக்கொண்டு திரும்பிய சுகிர்தா ஒரு கணம் அதிர்ந்தாள்.

அவளருகே... நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தபடி சதீஷ் எதிர்ப்பட்டான். கணநாக்கி நடக்கத் தொடங்கினாள். அரை மணி நேரத்தில் வீட்டை அடைந்த போது இவளின் அம்மா, அப்பாவுடன் மல்லுக்கு நின்றது தெளிவானது.

மெதுவாக குளியலறைக்கு சென்றவள் கதவைத் தாளிட்டு விட்டு குமுறி அழுதாள்.

சதீஷ்!

சொந்தமாக ஒரு கம்பனியை நடாத்துகிறான். அழகுக்கு குறைவில்லை. லேசான மீசை தாடியுடன் ஸ்மார்ட் ஆக இருப்பான். இவன் முதன் முதலாக சுகிர்தாவை காணும் போதே இதயத்தை இழந்துவிட்டான். என்றாலும் ஆண்டவன் சித்தம் இருக்க வேண்டுமே? 120 செக்கன் கழியும் முன்பே இவள் ரவியின் பின்னால் வலிய சென்று பேசுவதை அவதானித்தான். இந்த ஊமை நாடகத்தை சதீஷ் சமீப காலமாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். அவனுடைய இதயக் கோவிலில் சுகிர்தா என்று குடியேறுவாளோ?

அம்மா சாப்பிட்டாச்சா? என்ற படி புத்தம் புது மலராய் பாத்ரூமிலிருந்து வந்தாள் சுகிர்தா. மனசோ சலனப்பட்டுக் கொண்டிருந்தது. மனசிலுள்ள கவலைகளை அம்மாவிடம் கூறி அவளை சங்கடத்தில் சிக்க வைக்க நினைக்கவில்லை. என்றாலும் அம்மாவிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது.

இதோ வந்திடறேன்மா என்ற படி அடுக்களையிலிருந்து வந்த அம்மாவுக்கு மகளின் முக மாற்றம் புலப்பட வெகுநேரம் எடுக்கவில்லை.

என்னம்மா ஒரு மாதிரி இருக்கே? என்ற அம்மாவின் கேள்வி சுகிர்தாவின் கண்களில் நீர் வரச் செய்யவே பதறிப் போனாள் அம்மா. ரவியை கண்டது முதல் சதீஷிடம் அவமானப்பட்டது வரை ஒன்று விடாமல் கூறினாள். அவற்றை எல்லாம் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு நிதானமாக அம்மா கூறிய பதில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

வேண்டாம் விட்டுடு. நம்மள மதிக்காதவனை நீ ஏன் தேடிப் போற? அந்த தம்பி பேரென்ன சதீசு, அது சொன்னது கரெக்டு. நீ ஏன்மா வலியுற?

சாத்தி வைத்து சவுக்கால் அடித்தது போலிருந்தது. என்ன இந்த அம்மா இப்படி பேசுகிறாள்? மற்றவர்களை விட அம்மா புரிவாள் என்றல்லவா கூறினேன். இல்லை அது பொய் என்பதைப் போல அம்மா நடந்துக்கிறாளே?

இறைவனே! உன் படைப்பினங்களில் யாருமே இதயத்தோடு படைக்கப்படவில்லையோ?

அம்மா நீ என்ன பேசற? ரவியை மறந்திட்டு.... எப்படிம்மா...?

சுகிர்தா அப்படி வலிமையாக கூறிய போது தாயுள்ளம் தப்பு செய்தது போல தவித்தது. விடிய விடிய நீரை இறைத்து விட்டு கடைசியில் குடத்தை உடைத்துப் போட்டது போன்ற குற்ற உணர்வு அம்மாவை ஆர்ப்பரித்துக் கொண்டது.


மறு நாள் க்ளாஸ் போய் வரும் போது பாதையைக் கடக்க முயன்றாள்.
க்ரீச்!!!
அவ்வளவு தான் சொல்லி வைத்தது போல எங்கிருந்தோ வந்த சதீஷின் காராசாரமான வார்த்தைக்குள் செவிப்பறை கிழிந்து நின்றான் டிறைவர். மீண்டும் அவள் பக்கமாக திரும்பி

என்ன சுகி.. கொஞ்சம் அக்கம் பக்கமா பார்த்து வரக் கூடாதாம்மா.... என்றான்.முழுமையாக அவன் வார்த்தைகளுக்குள் சுருண்டு போனாள் சுகிர்தா.

சுகி யாமே...? அந்த வார்த்தையில் தான் எத்தனை இதம்? எத்தனை மென்மை? ஓ... பட்டாம் பூச்சி சிறகடித்தது.

ஒரு கணம் தான். திடீரென மூளைக்குள் சந்தேகப் பொறி தட்டியது. என் பெயர் எப்படித் இவனுக்குத் தெரியும்? வெகுவாக குழம்பியவள் அதைக் கேட்க வாயைத் திறந்து ஏமாந்தாள். அவன் எப்போதோ போய் விட்டிருந்தான்.

பெயர் எப்படித் தெரியும்? அவன் தான் இவளைக் காதலிக்கிறானே? அந்த காதல் செய்த மாயம் தான். எனினும் தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தவில்லை. அப்படித்தான் அவன் வெளிப்படுத்துவது நாகரீகமில்லையே? இன்னுமொருவனை அவள் விரட்டி விரட்டி காதலிக்கும் போது அவன் எப்படிச் சொல்லுவான்? அப்படித்தான் சொல்லி விட்டாலும் சுகிர்தா அதை ஏற்பாளா? அல்லது தெரிந்து தெரிந்து என்னை லவ் பண்றியேன்னு அவனை தப்பாக நினைக்க மாட்டாளா? அதனால் தான் சதீஷின் காதல் மனசினுள்ளே விம்மிக்கிடந்தது.



அந்த சம்பவத்துக்குப் பின் அவளது மனம் அவன் பின்னால் அலை பாயத் தொடங்கியது. இந்த விசித்திரத்தைக் கண்ட அவளுக்கே தன்னை நம்ப முடியாமல் தவித்தாள்.

அவள் அவனை காதலிக்கிறாளா?

ச்சே! காதல் என்ற நோய்க்குள் தன்னை பலி கொடுக்க தயங்குபவளாச்சே சுககிர்தா. என் மனசு எப்பவுமே என் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும். என்று அடிக்கடி தோழிகளிடம் பெருமை பேசிய இவளுக்கு என்னவாயிற்று?
மனம் தடுமாறிற்றா?

இதென்ன யாராயிருந்தாலும் ட்றைவரை ஏசித் தானிருப்பார்கள். என்று சமாதானம் சொல்லிப் பார்த்தாள்.

இல்லையே யோசனை தவறி பாதையைக் கடந்தவள் நீ தானே என மனமும் மூளையும் அவளை அடங்கச் செய்தன.

மேய்ப்பவன் முட்டாளாயிருந்தால் ஆடு மாடு கூட அவனை மச்சான் என்றழைக்குமாமே? முட்டாள் போல டிறைவரை குற்றம் சொன்ன போது அவளது மனமும் மூளையும் கூட அதைத்தானா செய்தன?


ஒரு வாரத்துக்குப் பின்பு வேலைக்கு தெரிவாகி இருப்பதாக அவளுக்கு கடிதம் வந்தது. கடிதம் உட்பட முக்கியமான சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு மேனேஜர் அறைக்குள் நுழைந்தவளுக்கு தேள் கொட்டியது போலிருந்தது. இப்படி மாட்டிக் கொண்டாளே!

ஆனால் அவனோ அவளை தெரியாதது போலிருந்தான். அது அவளுக்கு வசதியாகப் போனாலும் உள்ளுக்குள் என்னவோ செய்தது.

அன்றைய மாலைப் பொழுதில் பஸ்ஸ_க்காக காத்துக் கொண்டிருந்த போது, எதிர்பார்த்த விதமாக ரவியை தூரத்தில் கண்டாள். இதயத்தில் வெளிச்சம் பரவியது.

ரவி! ரவி!!

அவன் சுகிர்தாவைக் கண்டவுடன் நடையின் வேகத்தை அதிகமாக்கினான். உடனே சாரியை சற்று தூக்கி கையால் பிடித்துக் கொண்டு வேகமாக செல்ல முயன்ற போது அவளது தோளை ஒரு கை தொட்டது. சந்தேகமேயில்லை அது சதீஷ் தான்.

சுகி உன்னை புரிஞ்சிக்காதவன நீ எதுக்கு தேடிப் போகணும்? என்று அவன் ஒற்றையில் அவளை அழைத்த போது ஒரு பக்கம் ஆச்சரியம் கலந்த ஆனந்தமாகவும் மறுபக்கம் அதிர்ச்சி கலந்த கோபமாகவும் இருந்தது. ஆனாலும் இவ்வளவு இயல்பாக பேசுபவனிடம் எப்படி கோபப்படுவது? தன் மனம் தான் அவன் பக்கம் எப்போதோ ஈர்க்கப்பட்டு விட்டதென்பதை அவள் அந்த கணத்திலாவது கண்டு கொண்டுவிட்டாளே!

அவள் எதையும் பேசவில்லை...
என்ன யோசிக்கிற சுகி... அவனது குரல் இளகியிருந்தது. இப்போது சுகிர்தாவுக்கு கோபம் வரவில்லை. தன் மேனேஜர் என்பதால் சற்று நிதானித்து...
ஒன்னுமில்ல சேர் என்றாள்.

ம்ம் என்னை பெயர் சொல்லியே கூப்பிட உனக்கு அனுமதி தர மாட்டேனாடா?

தேக்கி வைத்திருந்த காதல் வெள்ளம், வார்த்தைகளாய பீறிட்டுக் கிளம்பியது. சற்று தயங்கியவள் சமாளித்துக் கொண்டு

ஓகே சதீஷ்! நீங்க என்ன தப்பா விளங்கிட்டீங்க. நான் அவர் பின்னால அலையவில்ல. யாரையும் நான் காதலிக்கவுமில்ல..

என்ன சொல்ற சுகிம்மா? குரலில் உற்சாகம் ஒட்டிக் கொண்டது.

ஆமா சேர்..சொரி சதீஷ்! அவர் எங்கள் அண்ணா. அவர் வேற்று மதப் பெண்ணைக் காதலிக்கிறார். அதை அம்மா அப்பா விரும்பவில்லை. அதனால வீட்டை விட்டு போயிட்டார். அதனால அவரை எங்கு கண்டாலும் கெஞ்சி வீட்;டுக்கு கூப்பிடுறேன்...

சுருக்கமாக முழுவதையும் கூறிய போது தான் அவளை அவமானப்படுத்திய சம்பவங்கள் சதீஷின் கழுத்தை நெரித்தன. மிகவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான்.

ஒரு வாரத்துக்குப் பின் ரவி; அண்ணா வீட்டுக்கு வந்தார். ஆனந்தத்துடன் வந்தவள், அவர் கூறியவற்றைக் கேட்டு பரவசமடைந்தாள். ஆம். அன்றொரு நாள் அம்மா அப்பாவிடம்

என் பிள்ளைகள் படிச்சவங்கள். அவங்கட ஆசைப்படி செய்து வைங்கோ என்றிருக்கிறாள். அது தான் அப்பா என்னிடம் வந்து... என்று விட்டு நிறுத்தினார். நேரம் பார்த்து அம்மாவும் அப்பாவும் அவ்விடத்தில் பிரசன்னமானார்கள். அப்பா தான் முதலில் கூறினார். அம்மாவும் ஆமோதித்தார்.

ரவியின்ர விஷயம் சரியாகிட்டு... அத்தோட உன்ர விஷயத்தையும்... என்ற போது முகம் வெளிறினாள் சுகிர்தா. ஏனோ சதீஷ் மனத்திரையில் வந்துதித்தான். அந்த மாற்றத்தைப் புரிந்த அம்மா...

ஆமாம்டா. அந்த சதீசு தம்பி நம்மகிட்ட ஏற்கனவே பேசிட்டாரு.நமக்கெல்லாம் ஓகே. நீ என்னம்மா சொல்றே? என்றாள். பூவருகில் வண்டை நிறுத்தி தேன் பருக ஆசையா என்று கேட்டால் என்ன பதில் சொல்லும் வண்டு?

மனசுக்குள் குடிகொண்டிருந்த அந்தக் கள்வனின் கள்ளத் தனத்தை ரசித்தாள். நாளை காலை அவனை எப்படி பார்த்து... எப்படி பேசுவாள்?

இதையெல்லாம் எண்ணி நாணிச் சிவந்து ஓடிப் போய் தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்து தானே சிரித்துக் கொண்டு மகிழ்ந்தாள் அவள்!!!

(நிறைவு)

தவிப்பு !

ஏன் இன்னிக்கு இவ்ளோ லேட் பொய்க் கோபத்துடன் ஷாமிலா கேட்டாள்.
இல்ல செல்லம். ஒபிஸ்ல சரியான பிஸிடா. அது தான்; என்று கூறிக் கொண்டே அவளிடம் குனிந்தான்.
இரு வீட்டாராலும் தம் காதலுக்கு எதிர்ப்பிருந்த போதும், பொறுத்திருந்து..பெற்றோரின் சம்மதத்துடனேயே தன் இனிய காதலியைக் கைப்பற்றியவனல்லவா அஸ்வின்! இன்றைக்கு மூன்று வருடங்கள் கடந்தும் யாரும் அவர்களை தம்பதியராய் நோக்க மாட்டார்கள். காரணம் இவர்களுக்கிடையே காணப்பட்ட இரக்கமும் நெருக்கமும் தான்.
என் அஸ்வின் ரொம்ப நல்லவன்
இப்படித்தான் தன் கணவனைப்பற்றி நேற்று வரை பெருமை பட்டுக்கொண்டிருந்தாள் ஷாமிலா.
ஆனால் இன்று..திருஷ்டி பட்டதைப்போல...
இறைவனே ஏனிந்த சோகம்?
அஸ்வின் அப்படிப்பட்டவன் என்று யார் தான் நினைத்தார்கள்? இல்லை. அவன் அப்படிப்பட்டவனில்லை என்று ஆறுதலடைய அவளால் முடியவில்லையே?
நித்யா!
இந்த மனக்குமுறலுக்கெல்லாம் காரணம் நித்யா என்பவளுக்கு அஸ்வின் எழுதியிருந்த கடிதம் தானே? பீரோவைத் திறக்கையில் வந்து விழுந்த பைலிலிருந்து; தானே அஸ்வின் பாதி எழுதி விட்டு வைத்திருந்த அந்தக்கடிதம் இவளுக்குக் கிடைத்தது.
தன் கற்பனையை ஓட விட்டுப் பொருமினாள். வயிற்றெரிச்சலாயிருந்தது. சாப்பிடப்பிடிக்வில்லை. குளிக்கவுமில்லை. தன் மணவாழ்வின் இதுவரையும் செய்திராத ஒன்று இன்று அரங்கேறியது.
ஆம். குப்புறப்படுத்து அழுதாள் ஷாமிலா.
பொழுது சாயும் நேரம் மிகவும் களைத்துப் போய் வந்த அஸ்வின், புன்னகையால் தன் களைப்பைப் போக்கும் ஷாமிலா எங்கே என கண்களால் வீடு முழுக்க தடவினான். பளிச்சென அவன் முகம் மிளிர்ந்தது. ஓ.. மூடு வந்து விட்டது போல. தனக்குத்தானே கூறிக்கொண்டவன் உற்சாகத்துடன் படுக்கை அறையை நெருங்க நெருங்கத் தான் பயம் கௌவிக் கொண்டது.
குப்புறப்படுத்து விம்மிக் கொண்டிருந்த ஷாமிலாவின் நெற்றியில் கைவைத்துப்பார்த்து பதறினான். அல்லாஹ்வே..இப்படி கொதிக்குதே..என்று கலவரப்பட்டான்.
பதறிக் கொண்டிருந்தவனை மெல்ல கண்விழித்துப் பார்த்தாள் ஷாமிலா.
என் மேல் தான் எவ்வளவு அன்பு என்ற எண்ணம் தோன்றி மறையும் முன்பே சீ..என்னமாய் நடிக்கிறான் ராஸ்கல் என்று எண்ணி அவனது கையை விலக்கி விட்டு விருட்டென எழுந்து குளியலறைக்குச் சென்றாள்.
எல்லாமே புதிதாக இருந்தது அஸ்வினுக்கு. பசியோடு அமர்ந்திருந்தவனுக்கு ஷாமிலாவின் திடீர் மாற்றத்தை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது.
அவளை முதன் முதலில் சந்தித்தது ஒரு விபத்தில் தான். அதுவும் அவனது காரிலேயே! செல்போனில் சுவாரசியமாக உரையாடிக் கொண்டு வந்தவள் மஞ்சட்கடவையில் அல்லாமல் பாதையைக் கடக்க முற்பட்டாள்.
க்ரீச்!
மறுநிமிடம் இமைகளால் விழிகளை மூடிக்கொண்டாள். சொல்லி வைத்தாட் போல பொலீஸ் சூழ்ந்து கொண்டது. பொலீஸ் அதிகாரி இவனை ஜீப்பில் ஏறச் சொன்னார். பெண்கள் தவறு செய்தாலும் ஆண்களின் தலையில் தானே விடிகிறது என்று நினைத்துக் கொண்டவன் தன் விதியை நொந்வாறு வேறு வழியின்றி ஜீப்பில் ஏறிக் கொண்டான்.மூன்று நாட்கள் கழிய இன்னும் இரண்டு மணித்தியாலம் இருந்தது.
அப்போது
உங்கள விட்டாச்சி..வீட்டுக்குப் போகலாம் என்று கான்ஸ்டபிள் சிங்களத்தில் கர்ஜித்தான். வெளியே வந்த போது ஷாமிலா அவனுக்காக காத்திருந்தாள்.
என்ன நினைத்தானோ அவளிடம் மன்னிப்புக் கேட்டான் அஸ்வின்.
தவறு செய்தவள் அவள். அவனை மன்னிப்பதா?
இல்ல மிஸ்டர்........ அவள் தடுமாறிய போது
அஸ்வின் என்று முடித்து வைத்தான்.
நீங்க தான் என்னை மன்னிக்கணும். நான் தான் பிழை செய்தேன்
எப்படியோங்க...உங்களால் அவர்களுக்கு செமலாபம் என்று கூறி சிரித்தான். அந்த சிரிப்பில் அவள் சொக்கிப் போனாள்.
ட்ரிங்..ட்ரிங்...
சுய நினைவுக்கு வந்த அஸ்வின் ரிஸீவரைக் காதுக்குக் கொடுத்தான்.
ஹலோ யாரு நித்தியா..சொல்லு. ஓகே வர ட்ரை பண்ணுறேன் பேசிக்கொண்டிருந்தான்.
மீண்டும் நித்தியாவா? எத்தனை நாளா நடக்குது இந்த நாடகம்..குளித்துக் கொண்டிருந்தவள் குரூரமாய் சபித்தாள். அஸ்வினுடைய நினைவுகளோ தான் ஷாமிலாவைக் காதலித்த காலங்களை அசை போட ஆரம்பித்தது.

கம்பனியில் புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவளைப் பற்றியே அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் ரொம்ப அழகாய் இருப்பதாய் கூறினார்கள். பார்ப்போமே என்று அலட்சியமாய் வந்தவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. மனசு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. புன்னகை ஒன்றை மட்டும் அன்று பகிர்ந்து கொண்டார்கள்.
ஒரு நாள் தன் உம்மாவுக்கு சுகமில்லை என்று ஷாமிலா வராதிருந்த ஒரு நாளின் போதே..தான் ஷாமிலாவுக்குரியவன் என்பதை அஸ்வின் தெரிந்து கொண்டான். பின்பு அவர்கள் தத்தமது இதயங்களை பரிமாறியதும்....அவள் வீட்டில் தோன்றிய எதிர்ப்பலைகள் அஸ்வினின் நடத்தை கண்டு ஓய்ந்ததும், ஷாமிலாவின் குணம் கண்டு அஸ்வினின் பெற்றோருக்கு அவளை பிடித்துப் போனதும் பழைய ஆனால் இனிய கதை.

குளியலறைக் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். டவலுடன் வந்து கொண்டிருந்தாள். ஆனால் அவளை ரசிக்கும் மனநிலையில் அவன் இருக்கவில்லை. மிதித்து விட்டது போல் சென்றாளே..
எழுந்து சென்று பாதி எழுதி விட்டு வைத்திருந்த அந்த கடிதத்தை எழுதத்தொடங்கினான்.
எதேச்சையாக வந்தவள் அவன் பின்னாலிருந்து அவன் எழுதுவதை வாசிக்கத் தொடங்கினாள்.
அதில்
........................... நித்தி.. ஸொரிடா. உன் ரூமில் வந்து உன்னைப் பார்க்க முடியவில்லை.....
இப்படி தொடர்ந்து எழுதி நிறைவு செய்தான்.
அன்றைய இரவு இருவருக்கும் நரகத்துக்கு இட்டுச் சென்ற பாலமாக இருந்தது. எனினும் ஷாமிலாவின் நெஞ்சம் பாறையாய் இறுகியிருந்தது. ஸொரி டா வாமே..அந்தளவுக்கு நெருக்கமோ...அழுகை வந்தது. ஆனால் அழவில்லை. துரோகிகளுக்காக அவள் ஏன் அழ வேண்டும்? அத்தோடு விட்டால் கூட பரவாயில்லை. ரூமில் போய் பார்க்க முடியவில்லையாம். நெஞ்சு வெடித்து விடும் போல் இருந்தது. உலகமே ஒன்றிணைந்து தனக்கு சதி செய்வது போல் உணர்ந்தாள்.
சற்று திரும்பியவளின் கண்களுக்கு அஸ்வினின் புகைப்படம் தென்பட்டது. இந்த..இந்த சிரிப்பில் தானே அவளது கன்னி மனம் பறிபோனது. அவனின் சிரிப்பழகை ரசிக்கவென்றே எத்தனை ஜோக்குகளை தேடிச் சொன்னாள்? திடீரென அது ஆள்மயக்கிச் சிரிப்பு போல் தோன்றியது.
எல்லா ஆண்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.. அந்த மாதிர பொறுக்கிகளை மரத்தில கட்டி வச்சி சுடணும். பிறகு கழுகு கொத்தணும்...
என்று கணவனால் ஏமாற்றப்பட்ட தன் தூரத்து உறவினர் ஒருத்தி சொல்லியிருந்தாள். அது நடந்து அரை ஆண்டுகள் கழிந்திருக்கும். ஆனால் இப்போது ஷாமிலா சொல்லிப் பார்த்த போதும் பொருந்துகிறதே..!
தான் பார்த்துப் பார்த்து காதலித்தவள்..மணம் முடித்து இன்று வரை தேனாய் தித்திப்பூட்டியவள் இப்படி சீறுகிறாள் என்றால், தன்னில் ஏதாவது பிழையிருக்குமோ என் மூளையைக் கசக்கி யோசித்தான் அஸ்வின். ம்ஹ{ம்..அப்படி சொல்லுமளவுக்கு எதுவுமில்லை. எதற்காகவாவது சற்று உரத்துப் பேசினாலும் சிரித்துக் கொண்டே கேட்டு விட்டு பிறகு அதற்குத் தண்டனையாக முத்தம் கேட்பாள். இன்று என்னவாகிற்று?
தமக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த பிரிவு பற்றி ஈரேழு வாரங்களாக அவள் எதுவுமே கூறாததில் குழம்பிப் போனான் அஸ்வின். எங்காவது போய் வந்தால் நன்றாக இருக்கும் போல் இருந்தது. அவளிடம் சொல்லாமலேயே டவுனுக்குச் சென்றான்.
ஷமி...நீ நடந்நுக் கொள்றது கொஞ்சமும் பிடிக்கல.... அவன் சொல்லி விட்டு திரும்pப் பார்த்த போது அவள் அங்கிருந்தால் தானே? முதன் முதலாக அவள் மேல் கோபம் கோபமாய் வந்தது.
நித்தி!
ஷாமிலா சொல்லிப் பார்ததாள். எரிச்சலாக இருந்தது. சற்று நேரத்தில் குமட்டிக் கொண்டு வர காரணமறிந்து பூரித்துப் போனாள். ஆனால் அந்த சந்தோஷம் வெகுநேரம் நிலைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் முடிவு கட்ட எண்ணிக் கொண்டிருந்தவள் இப்போது விக்கிக் கொண்டு அழுதாள். தான் மோசம் போனதாய் தனக்குள்ளே கற்பனை பண்ணி மனம் சோர்ந்து போனாள்.
மாலை நேரம் அஸ்வின் தன் நண்பன் ஒருவனுடன் வீட்டுக்கு வந்தான். அவனை இதுவரை ஷாமிலா கண்டதில்லை. அவர்கள் தத்தமது அலுவலக வேலையில் முழ்கிப் போயிருந்தார்கள். வந்தவர்களுக்கு ஒரு கப் டீயாவது கொடுக்காவிட்டால் நல்லாயிருக்ககாது என்று அவளுக்குத் தெரியும். எனவே நாகரீகம் கருதி தேநீர் தயாரிக்க சமையலறைப் பக்கம் சென்றாள். அவர்கள் பேசுவது அவள் காதுகளுக்கு கேட்டது.
இடையில் அஸ்வின் சொன்னான்..
உன் ரூமுக்கு வர நினைச்சன்டா நித்தி;. ஆனால் கொஞ்சம் வேலையா இருந்தது.. உன் இனிஷியல் என்னானு சொல்லு. பயோடேட்டாவை டைப் பண்ணிடலாம்?
அதற்கு அந்த மற்றவன் கூறினான்...
உன் லெட்டர் கிடைச்சதுல சந்தோஷம்டா. நீ வருவன்னு நினச்சன்..பட். பரவாயில்ல .என் முழுப்பெயர் எஸ். ஏ. நித்தியானந்தன்..
ஓகே மிஸ்டர் நித்தியானந்தன். கண்களில் குறும்புடன் அஸ்வின் கூறினான்.
ஓ.. நித்தியா னந்தன்!
ஷாமிலாவுக்கு எல்லாம் புரிந்தது. இவனுக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்துத் தான் அவள் அப்படி குதித்திருக்கிறாள்..அஸ்வினைப் பற்றி தவறாக நினைத்ததை எண்ணி மனசு வலித்தது.
எதையும் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டு டீயும் வடையும் கொடுத்த போது அஸ்வின் மெதுவாக அவளை ஏறிட்டான். அவனுக்கு எக்ஸ்ட்ராவாக ரொமான்ஸ் புன்னகையும் கொடுத்தாள். ஏதோ சொல்ல நினைத்த நித்தி அதைக் கண்டு புரிந்தவனான சொல்ல வந்தததை சொல்லாமலேயே விடைப் பெற்றுச் சென்றான்.
வெட்கத்தில் மிரண்டவள் தான் தாய்மை அடைந்த விடயத்தைக் கூறினாள். பிறகு தன்னுடன் சில நாட்களாக கோபம் காட்டியது ஏன் என்று அவன் கேட்ட போது அசடு வழிய காரணத்தைக் கூறினாள். அவனுக்கு சிரிப்பு வந்தது. இப்போது அந்த சிரிப்பில் கள்ளம் இருக்கவி;லை.
அவனைக் கட்டியணைத்தாள் ஷாமிலா.
இப்படி ஒருவருக்கொருவர் அணைத்து மகிழ்ந்து எத்தனை நாட்களாகி விட்டன?
ஏய் விடு குளிச்சிட்டு வர்ரேன் என்றான் அஸ்வின்.
அவனை விடாமலேயே வேணாம் சேர்ந்து குளிக்கலாம் என்றாள்.
வெட்கம் விட்டு கூறியவளை தவிக்க விடாமல் அவனும் அணைத்துக் கொண்டான்!!!

காதல் வரம் !

கால்களை நீட்டி சோபாவில் சாய்ந்திருந்தார் சுபா டீச்சர். அவரது சிந்தனைகள் யாவும் பத்து வருஷம் பின்னோக்கியதாய் இருந்தது. ஆம். அவர் ஆசிரியர் தொழிலில் இருந்து ரிட்டயர் ஆகியும் பத்து வருஷங்கள் தான். தன்னால் தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தார்.
இந்த தவிப்பிற்குக் காரணம் என்ன? ஓ வைஷ்னவி தான். அவள் படிப்பில் கெட்டிக்காரி. அவளது பரீட்சைப் புள்ளிகள் பல தடவை சுபாவை குளிர்வித்திருக்கின்றன. வைஷியை உதாரணம் காட்டி எத்தனை பிள்ளைகளை ஊக்குவித்திருப்பார் சுபா டீச்சர்?
இன்று காலை சுபா டீச்சர் வங்கிக்குச் சென்றிருந்தார். கியூவில் வருமாறு இருந்த அறிவித்தல் எரிச்சலைத் தந்தது. அதன் பிரதிபலிப்பாக அங்குமிங்கும் பார்த்தவருக்கு அதோ அந்த ஜன்னலினூடாக வைஷி தென்பட்டாள். முதலில் யாரென்று அனுமானிக்க முடியாமல் குழம்பினாலும் தீவிரமாக யோசித்ததில் ஆசிரிய மூளை சட்டென்று இனம் கண்டு கொண்டது. சந்தோஷப்பட முடியவில்லை. ஏனெனில் பாடசாலை பருவத்தில் துருதுரு என்று இருந்த வைஷி தற்போது களையே இல்லாமல் கறுத்து சிறுத்து இருந்தது தான். அதையும் விட பல்கலைக்கழகம் போக வேண்டும் என்ற அவளது சதா ப்ரார்த்திப்பு??
என்ன டீச்சர். பெல் அடிச்சி பத்து நிமிஷம் ஆயிட்டுது வகுப்புத் தலைவியாயில்லாத போதும் வைஷி வந்து கூப்பிட்டாள். பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவராயிருந்த சுபா டீச்சருக்கு அளவில்லா ஆனந்தம்.
படிப்பில் எத்தனை ஆர்வம் இந்தப் பிள்ளைக்கு? கட்டாயம் நல்ல நிலைக்கு வருவா
மனப்பூர்வமாக ஆசிர்வதித்தார் டீச்சர். ஆசிரியர்களின் ப்ரார்த்தனை தட்டுப்படுவதில்லையே? இப்போதும் கூட நல்ல ஸ்தானத்திலிருந்து தான் கடமை புரிகிறாள். என்pனும் சுபா டீச்சருக்குத் தான் திருப்தி பட்டுக் கொள்ள முடியவில்லை.

அவர் அப்படி கியூவில் நின்ற போது வைஷியும் அவரைக் கண்டிருக்க வேண்டும். பியூன் வந்து உள்ளே வருமாறு கூற சுபா ஆச்சரியமடைந்து பின் நிதானித்து உள்ளே சென்றார். அவரைக் கண்டதும் வைஷி எழுந்து நிற்க
ம்ம் பண்பாடு மாறாத பிள்ளை. இப்போதும் என்ன கண்டிட்டு எழுந்து நிண்டிட்டுது வாழ்த்தினார் டீச்சர்.
அவர் வந்த காரணத்தைக் கேட்டு உடனே செய்து கொடுத்ததுடன் அவரது முகவரியையும் வாங்கி தனக்கு லீவு கிடைக்கும் போது வந்து போவதாகவும் கூறினாள். நன்றியுடன் விடைபெற்று வந்த டீச்சரை குறை கூறியவர்களாக கியூவில் இருந்தவர்கள் முணுமுணுத்தார்கள்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு வைஷி சுபா வீட்டுக்கு வந்தாள். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சுபாவின் வாழ்க்கைஇ கணவன்இ பிள்ளைகள் பற்றி வினவினாள். எதிர்பாராத இக்கேள்வியினால் திக்குமுக்காடிப் போனார் டீச்சர். அவரது முகமாற்றம் வைஷியின் மனதை என்னவோ செய்தது. செய்யக்கூடாத பெரிய தப்பை செய்து விட்டதாக கருதி தடுமாறினாள். அதை உணர்ந்த சுபா
அவர்கள் யாரும் எனக்கில்லைம்மா என்றார்.
இந்த ஒற்றை பதிலில் அதிர்ந்த வைஷி
ஏன் எல்லோரும் எங்கே? வெளியூரிலா அல்லது நாடிருந்த நிலையில் யுத்தத்துக்கு இரையாகி...
இதைக் கேட்க நினைத்தாலும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். சற்று நேரத்தின் பின் வைஷி பற்றி ஆராய்ந்த போது அவள் பாதாளம் நோக்கிப் போவதை உணர்ந்து கொண்டார் டீச்சர். அது பாதாளமா? பூபாளமா? யாருக்குத் தெரியும்?
நீ இன்னமும் அவனைக் காதலிக்கிறியா?|
இல்லை டீச்சர் உண்மையாகவே பொய்யைச் சொன்னாள்.
ராகுலின் அப்பா வைஷியின் ஏழ்மை காரணமாகவே அவளை எதிர்ப்பதாக அறிந்த போது கோபம் தலைக்கு உச்சியில் ஏறியது சுபா டீச்சருக்கு. ராகுலின் அப்பாவுடன் தான் பேசுவதாக தைரியப்படுத்தினார்.
வைஷியின் காதலாவது வாழட்டுமே?
சுபாவின் காதல் தான் பட்டமரமாய் போயிற்றே. அதை வைஷியிடம் வெளிப்படையாக கூற முடியுமா? குருசிஷ்ய உறவுக்கு பாதிப்பு என்பதை விட சுபாவுக்கு ஒரு மகளிருந்தால் ஏறக்குறைய வைஷியின் வயது தான் இருந்திருக்கும். அப்படியென்றால் மகளிடமே தன் காதல் தோல்வியை கூறுவது போல் ஆகிவிடாதா? அது அநாகரிகம் அல்லவா? வைஷி நாவலொன்றை பார்த்திருக்கஇ சுபா டீச்சர் இளமைக்கால நினைவுகளை மீட்டிக் கொண்டிருந்தார.
சுபா என்னைப் பாரேன் ப்ளீஸ்
......................
சொல்றத புரிஞ்சிக்க..உன்ன கலியாணம் செஞ்சா சீதனம் தர மாட்டியள் என்டு அப்பா சொல்றவர். மலேசியாவில் இருக்கும் அப்பாவின் பிரண்டின்ர மகளை யோசிக்கினம். அதனால..
அதனால்
அவர் குனிந்த தலை நிமிரவில்லை. அவரைப்பிடித்து உலுக்கிக் கேட்டதில் இனி அவர் தனக்கு சொந்தமில்லை என்பதை சுபா புரிந்து கொண்டாள்.
இறைவா!
கனவில் அவருடன் வாழ்ந்துஇ பிள்ளைக் குட்டிகள் பெற்று...
ஒரே வார்த்தையில் வாழ்க்கையைச் சீரழித்து விட்டாரே? காதலிக்கும் போது பெற்றோரைக் கேட்கிறார்களா? குதிரைக்கு பசித்தால் வைக்கோலையும் திண்ணும் என்பது எவ்வளவு நிதர்சனம். எந்த கஷ்ட நஷ்டம் வந்தாலும் பசித்தாலும் புல் திண்ணாத புலி போல் மனம் மாறமாட்டார் என்று தானே சுபா ஆழமாக நம்பியிருந்தாள்?
அதே நிலை தானா வைஷ்ணவிக்கும்?

சத்தியமாக வைஷி நாவலை படித்துக் கொண்டிருக்க வில்லை. அவளது கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. பாவம் அவளின் ஏழை பெற்றோர். வறுமை காரணமாக ராகுலின் அப்பாவிடம் பேசவே தயங்கினார்கள்.
டீச்சர் ராகுலில் வீட்டாரிடம் சென்று தனக்காக பரிந்து பேசுவதை வைஷி விரும்பவில்லை. காரணம் சுபா டீச்சரும் ஏழை மனுஷி என்பதால் தான். அழகுஇ குணம்இ மார்க்கம் இருந்து என்ன பயன்? பணத்துக்கு முன் அவை எல்லாமே மண்டியிட்டு காணாமல் போகின்றனவே?
அவற்றைக் கண்டு வைஷியினதோஇ ராகுலினதோ காதல் நெஞ்சங்கள் மசியவில்லை. அவனும் தன் அப்hவுடன் வாக்குவாதப் பட்டுக் கொண்டு தான் இருந்தான். அவர்கள் தம் காதல் கைகூடாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளவும் தயங்கமாட்டார்கள். அப்படியென்றால் இத்தனை வருடங்களாக வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டுவிட்டு ஓடுமளவுக்கு வலிமையைத் தந்தது எது? காதல் புனிதமானதா? தீய சக்தியா? உண்மையாக காதலிக்கும் அனைவரும் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்குத் தான் வைஷியும் முகம் கொடுத்திருந்தாள்.

சுபா டீச்சர் கதவைத் தட்டினார். இருபததேழு வயது மதிக்கத்தக்க ஒரு அழகான வாலிபன கதவைத்திறந்து பார்த்து புருவத்தை சுருக்கினான். அவனைப் பார்த்த டீச்சருக்கு முள்ளுக்குத்தியது போல் இருந்தது. இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே?
அப்போது ராகுல் ஹ_ இஸ் தெயார்? (ராகுல் யாரங்கே?) என்று கம்பீரமாக ஒலித்த குரலும் டீச்சரை தடுமாறச் செய்தது. அந்த உருவம் அவர்களை நெருங்க நெருங்க டீச்சரின் மனமும் மூளையும் ஒருமித்தே விளித்துக் கொண்டன.
அடக்கடவுளே!
பால் வாங்க பாம்பிடமா வந்திருக்கிறேன்?
இவன் ராகுலை எங்கும் பார்க்கவில்லை. இதோ இவரில் தான். மனசு ஓலமிட்டு அலறியது. அவரும் டீச்சரை அடையாளம் கண்டு கொள்ளாதிருப்பாரா? வந்த வேகம் குறைந்து பணிந்து போய்... இல்லையில்லை கூனிக்குறுகிப் போய் நின்றிருந்தார்.
டாடி இவங்களைத் தெரியுமா - இது ராகுல்
இல்..ஓம்..இல்லை.. தடுமாறினார் ராகுலின் தந்தை.
தெரியாதுப்பா. ஆனா உன்னப்பத்தி பேசத்தான் வந்தருக்கேன் என்றார் டீச்சர்.
ராகுலுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். சுடர்விட்டு எரிந்த டீச்சரின் நம்பிக்கைத்தீ ராகுலின் தந்தையைப் பார்த்ததும் அணைந்தே போயிற்று. இருக்காதா பின்னே? அவன் அப்பன் தன்னைப் போலவே ராகுலையும் மாற்றி விட்டால்..?
நாக்கு மேலண்ணத்தில் ஒட்ட கதிரையில் சாய்ந்து மௌனம் காத்தார் ஐங்கரன்.
ஐங்கரன்!
ம்ம் சுபாவின் காதலர்இ இன்னொரு முறையில் சொன்னால் ராகுலின் அப்பா.
எதை எப்படி சொல்வது என தவித்துஇ பின் நிதானித்து வைஷியைப் பற்றி கூறி முடித்த போது ராகுல் மொத்தமாய் உடைந்திருந்தான்.
தன் மகளுக்கு ராகுலைக் கேட்டு வந்திருக்கிறாளா சுபா... என்ன நீனைத்தாரோ செய்திடலாம் என்றார்.
அப்பாடா. வந்த காரியம் இனிமையாக முடிந்ததே. கண்மூடி இறைவனுக்கு நன்றி கூறினார் டீச்சர்.
இன்னும் இரண்டே மாதங்களில் திருமணம்!

அம்மா! இவங்க தான் எங்கள் விஞ்ஞான பாட டீச்சர்.... என்று வைஷி தன் ஏழைத் தாயிடம் கூறிக் கொள்ள அவள் சுபா டீச்சரைப் பார்த்து கைகூப்பினாள்.
அவளது விழிகளில் தான் எத்தனை நன்றிப்பெருக்கும்இ சந்தோஷமும்!
இக்காட்சியைக் கண்ட ஐங்கரனுக்கு கண்ணைக்கட்டி நடுக்காட்டில் விட்டது போல் இருந்தது.
இவள்.. இவள் சுபாவின் மகளில்லையா? ஐயோ தன் மகள் என்று சுபா என்னிடம் கூறவில்லை தானே? நான் எப்படி கற்பனை பண்ணி.... சுபாவைக் கண்டதும் ஏற்பட்ட தடுமாற்றத்தில் கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டேனா? - தவித்த ஐங்கரன் சுபாவை அழைத்து விபரம் கேட்டார்.
உங்களைத் தவிர வேறொருத்தன என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியல்லீங்க. நான் இன்னமும் கல்யாணமே பண்ணிக்கல. வைஷி என் பொண்ணுன்னு உங்ககிட்ட சொல்லலியே..ம்ம் என்ன நல்ல குணமான மருமகப் பொண்ணு கிடைச்சிருக்கா. பயம் வேணா. ராகுலை சந்தோஷமா வச்சிக்குவா. ஐயோ கெட்டிமேளம் சொல்றாங்க. வாங்க போகலாம்
சுபா நகர அப்படியே சுவரில் சாய்ந்து விட்டார் ஐங்கரன். காதலர் பிரிந்தாலும் சுபாவின் காதல் அழியவில்லை.
அங்கே வைஷியின் கழுத்தில் தாலி கட்டிக் கொண்டிருந்தான் ராகுல்!!!

Wednesday, May 19, 2010

கண்ணீர் தீயாகிறது !

காலை ஏழு மணியிருந்திருக்கும். அனாஸ{க்கு வயிற்றுக்குள் என்னவோ செய்தது. தேனீர் கோப்பையை வைத்து விட்டு எழுந்து மலசலகூடம் செல்ல நினைத்தான். நினைக்கத்தான் முடிந்ததே தவிர போவதற்கு முடியவில்லை. ஏனெனில் கொழும்பில் பிரபலமான அந்தக்கடையில் சிற்றூழியர்களாய் வேலை செய்யும் இவன் போன்று ஆறு பேர், இவனுடன் இந்த அறையில் தான் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் நேரகாலத்துடன் எழுந்திருந்ததால் அவர்கள் வரும் வரை காத்துக்கிடக்க வேண்டிய கட்டாயத்தில் படுத்திருந்தான்.
மலசலகூடம் என்றால் அறையோடு இருக்கும் அட்டேச் பாத்ரூம் என்றோ, சகல வசதிகளுடன் கூடியதாக இருக்கும் என்றோ எண்ணினால் அதற்கு யாரும் பொறுப்பல்ல. மெதுவாக எழுந்து சோம்பல் முறித்த அனாஸ் காலைக் கடன்களை முடிக்க ஆயத்தமாகி பாத்ரூம் பக்கம் சென்றான். வசதியான இடத்தில் பிறந்து வளர்ந்த அவனுக்கு இப்படியெல்லாம் கஷ்டப்படுவது பெரும் வேதனையாக இருந்தது. கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ளலாம் என்று பாயில் வந்து சாய்ந்து கொண்டான்.
மனசைக் கல்லாக்கி;க் கொண்டு இவனைப் போலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள். சிலர் தம் மனைவி மக்களைப் பார்க்கவிருக்கும் ஆசையை வெளிப்படையாக கவலையுடன் கூறுவதை பல முறை கேட்டிருக்கிறான். வருடத்தில் இரண்டு தடவைகள் போய், நான்கு நாட்கள் இருந்து விட்டு வருவார்கள். சிலநேரம் போய் இரண்டு நாட்கள் ஆகும் போதே கடையில் வேலை இருப்பதால் வருமாறும், வராவிட்டால் சம்பளம் வெட்டப்படும் என்றும் அவர்களுக்கு தகவல் அனுப்பப் படுவதுண்டு.
இந்த வேலையை வீசி விட்டுப் போவதென்றாலும் முடியவில்லை. வறுமை அவர்களை கட்டிப் போட்டிருந்தது. வேலை தேடுவதென்பது இலகுவான காரியமல்லவே. ச்சீ என்ன வாழ்க்கை..இரண்டு மூன்று வருடங்ளாக இதே போல் அடிமையாக..!
உடம்புக்கு முடியாமல் படுத்திருந்தாலும் சம்பளம் வெட்டுவார்கள். சாப்பாட்டுக்கு போய் வர நேரமாகினாலும் சம்பளம் வெட்டுவார்கள்..இப்படியே நடந்தால் ஊழியர்களுக்கென்று என்ன மிஞ்சப் போகிறது?
முதலாளி என்றால்..இஷ்டப்பட்ட நேரத்துக்கு வீட்டுக்குப் போகலாம். சாப்பிடலாம். தூங்கலாம். ஏன் அதிகாரவர்க்கம் என்பதனாலா? அவர்கள் மட்டும் தான் மனிதர்களா? தமது மனைவி பிள்ளைகளுடன் இரண்டு மாதங்களுக்கொரு முறை சுற்றுலா போவார்கள். ஆனால் கடையில் வேலை பார்க்கும் சிற்றூழியர்கள் ஞாயிறு தினங்களிலும் வேலை செய்து முதலாளிக்கு உழைத்துக் கொடுத்தாலும் ஓரிரு நாளாவது அதிகமாக லீவு எடுத்து பிள்ளைகளுடன் இருந்து விட்டு வர முடியாது. என்னவொரு கொடுமை!
அனாஸ் பரவாயில்லை. தனிக்கட்டை. எனினும் ஆசாபாசங்கள் உள்ளவன் தானே. சிலருக்கு வயது வந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து அவர்களது தேவைகளைக் கவனிக்கும் பொறுப்பு இருக்கிறது. மனைவிமார் ஒவ்வொரு விடயம் பற்றியும் விம்மலுக்கும் விசும்பலுக்கும் இடையே அறியத்தரும் போது எவ்வளவு கவலைப்படுவார்கள் இந்த ஊழியர்கள்? அப்படி அவர்கள் கவலைப்பட்டு ஒடிந்து போயிருக்கும் நேரங்களிலெல்லாம் இவனது நினைவலைகள் வீட்டைச் சுற்றியும் எட்டு மாதங்களுக்கு முன்புஹலீமாவைச் சுற்றியுமே ஆரத்தழுவி ஆர்ப்பாட்டம் போடும்.
வாப்பா!
கண்டிப்பு, கோபம், அன்பு எல்லாவற்றுக்கும் உறைவிடமானவர். வாப்பா மீது அனாஸ{க்கு மிகவும் மதிப்பு அதிகம். ஆனால் ஏழைகளை மதிக்காத அவர் குணம் மட்டும் அனாஸ{க்கு பிடிக்காது.
உம்மாவைப்பற்றி கேட்க வேண்டுமா? சிறு தலைவலிக்கும் என்னமாய் துடித்துப் போவார்? உம்மா ரொம்ப அழகானவரும் கூட. ஆனால் ரோஷக்காரி. அடிக்கடி வாப்பாவுடன் சண்டையிடுவாள். அவர்களை புரிந்து கொள்ளவே முடியாது. என்ன இவர்கள்? எதற்காகவாவது சண்டை பிடிக்கிறார்கள்..ஆஸ்ஊஸ் என்கிறார்கள். இரவில் சமரசம்...காலையில் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
இப்படி அனாஸ் நினைத்த போது அவனுக்கு ஆறு வயதிருந்திருக்கும். முதலில் புரியவில்லை. அவன் இளைஞனாகும் போது தான் அன்பின் ஊடுறுவலும் அதன் தாற்பரியமும் புரிந்தது. திருமணம் பற்றி புரியுமளவுக்கு அவனுக்கு படிப்பிருக்கவில்லையா அல்லது அவை மேல் பிடிப்பிருக்கவில்லையோ தெரியாது. ஆனால் ஹலீமாவை காணும் போது வாப்பாவின் பணக்கார குணம் தெரிந்தும்; அனாஸின் மனம் ஹலீமாவை நாடியது.
உன் புள்ள செய்திருக்கிற வேலய பாத்தியா? புள்ளய பெத்திருக்காளாம்..புள்ள!
ஆவேசமாக வாப்பா காட்டுக்கத்தல் கத்திய போது
ஏன்ட அல்லாவே என்று நடுங்கியவாறு ஓடி வந்தார் உம்மா.
போயும் போயும் ஒரு ஏழையனோட பழகுறான் கழுதை. இவனை இப்படியே விட்டால் நாசமாப் போவான் என்றார் அதே தோரணையுடன்.
பெற்ற தாயிடமே தன் பிள்ளை நாசமாப் போகும் என்று கணவனே கூறினாலும் தாயுள்ளம் தாங்குமா? வாப்பாவுடன் மல்லுக்கு நின்றாள். வாப்பா ஏழை என்று குறிப்பிட்டது ஹலீமாவின் தம்பியான றியாஸைத் தான் என்பது தெரிந்த போது சுருக் என்றது. அடிக்கடி றியாஸ{டன் பேசும் போதெல்லாம் பள்ளி ட்ரஸ்டி யாராவது கண்டு வாப்பாவிடம் போட்டுக் கொடுத்து விடுவார்கள்.
என்ன மனிதர்கள்? படைத்தவனுடைய இல்லாங்களிலேயே பதவி வகித்துக் கொண்டு அல்லாஹ்வின் படைப்பினங்களை அவமதிக்கிறார்களே..
ஹலீமாவை தன் மனைவியாக்கிக் கொள்ளவென்று தான் கட்டிய கனவுக் கோட்டைகள் படிப்படியாக சரியத் தொடங்கிற்று. காரணம் பாழாய்ப் போன அவளது வறுமை.
அழகையும், அறிவையும் அவளுக்கு அள்ளி வழங்கிய இறைவன், ஏன் அவளை ஏழையாக உற்பவித்தான்?
ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் ஒவ்வொரு சோதனை உண்டு. எனது உம்மத்தாருக்கு சோதனை செல்வம் தான்
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை யாருமே படித்துணர்ந்ததில்லையா?. ஏழை எளிய மக்களின் உணர்வுகளைப் புரியாமல் அவர்களிடம் வேலை வாங்குவதும், தொழுவதற்கு கூட அவகாசமளிக்காமல் மிருகங்களாய் நடாத்துவதும்.....
ஏன்? வாப்பாவும் அப்படித் தானே நடந்து கொள்கிறார் என்று நினைவு வரும் போது நெஞ்சுக்குள் நோவெடுக்கும். மனித சமுதாயத்துக்குள் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாட்டை தோற்றுவித்த அந்த தீய சக்தி எது? அந்த பூதம் இப்போது எங்கு போய் ஒழிந்து கொண்டது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைத் தேடியே அலுத்துப் போயிருக்கிறான்.
அனாஸின் வாப்பா இரண்டொரு மாதங்களாய் மிகவும் பதட்ட நிலையில் இருந்தார். அடிக்கடி கோபப்பட்டார். சில நேரம் வழமைக்கு மாறாக பள்ளிவாசலில் அதிக நேரம் தங்கினார். அல்லாஹ{த்தஆலா அவரைச் சோதித்தான். அவர் தனது வியாபாரத்தில் நஷ்டமடைந்து கொண்டிருந்தார்.
இறைச்சிக்கறியும் மாசிச்சம்பலும் வெறும் நெத்திலிகளாய் மாறிப் போயின. முதலில் வீட்டார் அனைவருக்கும் மிகவும் கடினமாக இருந்தது. வாப்பா இப்படி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தததை கண்டறியாதவன் அனாஸ். அவர் தற்போது மனதளவில் உடைந்து போயிருந்ததாலும் வயதாகியிருந்ததாலும் அனாஸின் தலை மீது குடும்பப் பொறுப்பு வந்து விழுந்தது.
எனவே பத்திரகை ஒன்றில் விளம்பரம் பார்த்து கொழும்பில் பிரபலமான ஒரு கடைக்கு வேலைக்குப் போகவிருப்பதாய் வீட்டில் தெரிவித்தான். உம்மா ஓ... வென்று கதறியழுதார். தம்பி தங்கையரும் தான். வாப்பா வலது கையால் இடது நெஞ்சை அழுத்திப் பிடித்தபடி அமர்ந்து விட்டார்.
பொஸ் எனும் அந்தஸ்து மகனை போக விடக்கூடாது என்று தடுத்தாலும் வயிற்றுப்பசி அந்த வரட்டுப் பிடிவாதத்தை விரட்டியடித்தது. போதாக்குறைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் நோன்பு வந்தது. நோன்பு வந்தால் பணக்காரர்கள் வீட்டில் எப்படியெல்லாம் விசேஷங்கள் இருக்கும். நோன்புக்கஞ்சி, பெட்டிஸ், ரோல்ஸ், பாலூதா.......இந்த ஓரிரண்டு வருடங்களாக் அனாஸின் வீட்டில் அப்படியிருக்க சந்தர்ப்பமில்லை. நோன்பு திறப்பதற்காக பள்ளிக்கு வருவோரை தரக்குறைவாக பேசும் வாப்பாவும் சிலநேரம் பள்ளிவாசலுக்கே போயிருக்கக்கூடும்.
புனிதமிகு ஐவேளைத் தொழுகையைக்கூட நேரத்துக்கு தொழ முடியாமல்; இப்படி அடிமைத் தனமாக நடாத்தப்படும் என்றும்;, வெறும் சோற்றையும் பருப்புக்கறியையும் வீட்டார்கள் உண்ண நேரிடும் என்று அனாஸ{க்கு யாராவது சொல்லி இருந்தால் கருவிலேயே கலைந்து போயிருப்பான். உம்மாவின் வயிற்றிலிருந்து கொண்டு அவருக்கு உதைத்தற்கு தண்டை தானோ இது என்று பல சந்தர்ப்பங்களில் எண்ணுவதுண்டு.
ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் தெஹிவளை சந்தியில் வைத்து றியாஸைக் கண்டு கதைத்தான் அனாஸ். அவன் தன் சகோதரியான ஸலீமாவைப்பற்றிக் கேட்ட போது சிறிது நேரம் மௌனம் காத்தான் றியாஸ்.
ஆம். அவள் மணமுடித்து விட்டாளாம். மனசு விம்மியது. வாப்பா மட்டும் சம்மதித்து இருந்தால்...அன்றே ஹலீமா தனதாகியிருக்கக் கூடும். வறுமையைக் காரணம் காட்டி அவனுடைய சந்தோஷங்களைத் தீயிட்டாரே. இப்போது நாமும் ஏழைகள் தானே..யாஅல்லாஹ்!
நீ போனதற்கு பிறகு உங்க வாப்பா ரொம்பவே உடைஞ்சு போயிட்டார். உம்மாவுக்கும் டயபெட்டிக்..சில நேரம் என் ஆட்டோவில் உங்க வாப்பாவும் உம்மாவும் ஹொஸ்பிட்டலுக்கு போவாங்க...உங்க வாப்பா இப்ப ரொம்ப பாசமா எங்களோட நடந்துக்குறாரு..
றியாஸ் கூறிக்கொண்டு போனான். ஆனால் அனாஸின் மனது வெட்டுப்பட்ட பாம்பு கிடந்து துடிப்பதைப் போல துடித்தது. என்ன செய்ய? கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.
தனக்கு இப்போது முப்பத்திரெண்டு வயதாகிறது. அது வரை ஹலீமா இருப்பதும் நியாயமில்லை தானே. வாப்பா திருந்தியதை நினைத்த போது சந்தோஷம் இல்லாமலும் இல்லை.
முதலாளி வர்க்கம் மட்டும் நன்றாக இருந்தால் அன்றாட ஜீவனோபாயத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வயிற்றுப்பாடு என்னவாகும். பல்வேறு மேடைகளில் அதிதியாயிருந்தவர்கள் இப்போதெல்லாம் எப்படி வறுமை பட்டிருக்கிறார்கள்?
வறுமை என்ற ஒரே காரணத்துக்காக கணவன்களைப் பிரிந்து வெளிநாடு செல்லும் எத்தனை மனைவிமார்கள்? அங்கு தமது கற்புக்கு கூட பாதுகாப்பில்லாத நிலையில் திண்டாடுவதை எத்தனை பேர் தைரியமாக வெளியிலோ அல்லது கணவரிடமோ கூறுகிறார்கள்? பெண்பிள்ளைகளையும் ஆண்பிள்ளைகளையும் வெளிநாடுகளில் விட்டுவிட்டு மனநோயாளியாகியிருக்கும் எத்தனை வயோதிப பெற்றோர்?
நம் நாட்டில் இருக்கும் செல்வச் சீமான்கள் எல்லோரும் வறுமைப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவினால் அவர்கள் சிறுமைப்பட்டு இப்படி சீரழியத் தேவையிருக்காதே. ஊருக்கு காட்டுவதற்காக ஸகாத் கொடுக்கிறோம் என்று மார்தட்டி வெறும் இரண்டாயிரமோ, ஐயாயிரமோ கொடுத்து விட்டு அதையும் ஊரறியச் செய்து பெருமைப் படுபவர்கள், நாளை மறுமையில் என்ன சொல்லி அல்லாஹ்விடம் தப்பப்போகிறார்கள்? பணக்காரர்களுக்கு மாத்திரம் இப்தார் விருந்தும் வலீமா விருந்தும் கொடுக்கும் சில வள்ளல்கள் உற்றார் உறவினரை மதிக்காமல் என்ன சாதனை செய்வதாய் நினைத்துக் கொள்கிறார்கள்?
தன் சொந்த சகோதரியினதோ, சகோதரினனிதோ கன்னிப்பெண்கள் சீதனக் கொடுமையால் பிழியப்பட்டு திருமணத்துக்காக காத்திருக்க, அதற்கு உதவாமல் வெறும் வியாபார நோக்கத்தை மட்டும் கொண்டு ஏழெட்டு முறை ஹஜ் செய்பவர்கள் ஹாஜியார் பட்டத்தைத் தவிர வேறு எதைப் பெறப் போகிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பதில்லையா?
நாமெல்லாம்; மறுமையில் ஹாஜியார்களாக மதிக்கப்படுவோமா அல்லது ஹாஜி யார்? என்று கேட்கப்படுவோமா என்று அவர்கள் பயப்படுவதில்லையா? மனிதனை ஏமாற்றும் இந்தப் போலி உலகத்தை நம்பி நிரந்தரமான மறுமைக்காக உழைக்காத, உழைக்க விடாத எத்தனை மனித ஜென்மங்கள்? என்று பலவாறு சிந்தித்து களைத்துப் போனான் அனாஸ்.
எப்படியெல்லாம் வசதியாய் வாழ்ந்தவன்...இப்போது மா மூட்டை தூக்க வேண்டும். இரவு பதினொரு பன்னிரெண்டு மணி வரை கடையில் வேலை செய்ய வேண்டும். உணவைப்பற்றி சொல்லத் தேவையில்லை.. உப்புமிருக்காது. புளியுமிருக்காது. பொறுமையாளர்களுடன் தானே அல்லாஹ் இருக்கிறான். எனவே சலித்துக் கொள்ளாமல் மிகவும் பொறுமையாக இருந்தான். இந்த பெருநாளைக்காவது ஊருக்குப் போய் வாப்பா உம்மாவுடன் சேர்ந்து சாப்பிடணும்....அவர்களுக்கு சந்தோஷம் தருமளவுக்கு தம்பி, தங்கையருக்கும் உட்பட புது ஆடைகள் கொண்டு போக வேண்டும். பெ;போதோ வரவிருக்கும் பெருநாளை எண்ணி இப்படி இன்னும் இன்னும் என்னெனனவோ சிந்தனைகள் அவன் உள்ளத்தில் அலை மோதின.
என்னடா கனவு காணுறியா என கேட்டவாறு முதலாளி இடியப்பத்தால் நிறைந்த வயிறைத் தடவிய படி ரூமுக்கே வந்து கேட்டார். திடுக்கிட்டு எழுந்த அனாஸ் மெதுவாக நழுவி கடைக்குச் செல்ல ஆயத்தமானான். அவனது கன்னத்தில் கண்ணீர் கோடிட்டது. அது அவனுக்கு நெருப்பு போல சுட்டது. அவன் அடிக்கடி இப்படி கண்ணீர் சொரிவதுண்டு. அதனால் அவனுடைய கவலைகள் சுக்கு நூறாகிறதோ என்னவோ? அவனது தேனீர் கோப்பையில் ஈயொன்று விழுந்து இறந்திருந்தது.

அழகான அவன் !

அன்று சந்தியாவால் அலுவலகத்தில் ஒழுங்காக வேலை செய்யவே முடியவில்லை. அந்த இனிய காலைப்பொழுதில்தான் தனது வசீகரமான தோற்றத்தை மேலும் மெருகூட்டும் விதத்தில் முதன் முதலாக சேலையில் வந்திருந்தாள். அதுவே மனதில் ரம்மியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

அப்படியிருக்க... ஏன் அவன் சந்தியாவின் கண்ணில்பட்டு அவளிதயத்துள் சலனமூட்டி ஆனந்த அவஸ்தை தரவேண்டும்?
இன்னும் ஒரு முறை அவனைப்பார்க்க வேண்டுமே! மனது சிக்னல் கொடுத்த வண்ணமே இருந்தது. அவனாவது அவளை விட்டு வைத்தானா? வைத்த கண்வாங்காமல் அவளை விழிகளாலேயே உண்டுவிட்டானே!

அன்று காலை சற்று நேரத்தில் டீசலை உண்டுவிட்டு ஏப்பமிடுவது போல ப்ரேக் சத்தத்துடனும், பயணிகளை சாபமிடுவது போல
தூசியையும் கிளறி புகையுடன் வந்து நின்றது பஸ். ஏறிய சந்தியாவின் மான் விழியில் முதலில் அவன் உருவமே பட்டுத் தெறித்தது. சுருளான கேசம்இ நீண்ட நாசி, நேர் வரிசைப்பற்களில் ஒன்று விலகியதாலே அமைந்த அழகான சிரிப்பு. இப்படி எல்லாவற்றிலுமே அழகாயிருந்தான்.

அவளது அதிஷ்டமோ என்னவோ அவனது அம்மாவின் பக்கத்திலேயே இடம் கிடைத்ததால் அவள் மனம் மகிழ்ந்தது.
அவளது லேசர் விழிகள் அவனை மொய்த்த வண்ணமே இருக்க அவனும் அவளைப் பார்த்து சரிப்பதுவும் ஏன் தொடுவதுமாக இருந்தான். அடச்...சீ ஒரு பருவ வயதழகியை அவன் அம்மா முன்னிலையிலேயே இப்படி டச் பண்ணுவதா என அவள் நினைக்கவில்லை. அதுவே அவளுக்கு சுகமாயிருந்தது.

எங்கம்மா வேலைக்கிப் போறியா...? ஊரென்ன, தொழில் என்ன, பேர் என்ன...? என்று அவனது அம்மாவின் அடுக்கு கேள்விகளுக்கு பதில் கூறியே இருவரும் புது உறவை| ஏற்படுத்திக்கொள்ள தயாராயிருப்பதை சிரித்து ரசித்தான் அவன்.
சில நிமிடங்களில் தன் கெமரா போன் மூலமாக திருட்டுத் தனமாக அவனை அதில் பதிவு செய்த சந்தியா கனத்த இதயத்துடன் விடை பெற்று இறங்கி அலுவலகம் வந்துவிட்டாள்.

வழக்கத்துக்கு மாறாக யாருடனும் பேசாமலும், இன்னும் வீட்டுக்குப் போகாமலும் யோசித்துக்கொண்டிருந்த சந்தியாவைப் பார்த்து ஆச்சரியமடைந்தாள் நண்பி.

எனக்கும் வேண்டும் இப்படியொரு... என்று தனக்குத்தானே உளறிக் கொண்டிருந்தாள் சந்தியா.

அவளைப் பார்த்து...
ஏய் சந்தியா ஆபீஸ் விட்டாச்சி. நீ வீட்டுக்குப் போகலியா? என்று கேட்டவாறு அருகில் வந்து போட்டோவைப் பார்த்து
விட்டாள் சந்தியாவின் தோழியான கலா. ஒரு வித கிண்டல் சிரிப்பை அவள் உதிர கற்பனை கட் ஆகிய அவ்வேளையிலும் சந்தியாவின் முகம் செக்கச்சிவந்து உதடு துடித்தது.

வீட்டில் போய் ஆற அமர தனது அறையை நோக்கி சென்று கதவைத் தாழிடாமல் அவன் போட்டோவை ஆசை தீர ரசித்துவிட்டுத் திரும்பியவள் மூச்சுத்திணறி அதிர்ந்து சுவரோடு ஒட்டிய பல்லியாய் மாறி முகம் கறுத்தாள். எதிரே எரிமலையாகப் பெற்றோர்! யாரவன், யார் பிள்ளை...? என வினா தொடுக்க நிதானமாய் எல்லாவற்றையும் கூறி முடித்தாள். விபரம் அறிந்த பெற்றோர் வறுத்தெடுக்கும் கேள்விகளை விட்டுவிட்டு புன்னகை பூத்தூவ சந்தியாவின் மகிழ்ச்சி இரட்டிப்பானது.

நடந்த அனைத்தையும் பார்த்தவாறு போட்டோவில் அழகாக சிரித்தவாறு அவனிருந்தான். ஆமாம் சரியாக மூன்று வயது கூட நிறம்பாத அவனைப் பார்த்து, அவன் அழகை ரசித்து சந்தியா மீண்டும் தனக்குத் தானே கூறிக் கொண்டாள். எனக்கும் வேண்டும் இப்படி ஒரு அழகான பிள்ளை.

அந்த அவன் அவளைப் பார்த்து கையசைப்பது போலிருந்தது, அவளுக்கு மேலும் நாணத்தைத் தந்தது. அத்துடன் நிம்மதியான உறக்கத்தையும் தான்!!!

Sunday, May 16, 2010

காதல் கல்வெட்டு!

வசீகரன் காரை ஸ்டார்ட் செய்தான். வழி நெடுகிலும் அவனுக்கு வலி தரும் காட்சிகளையே கண்டான். ஆங்காங்கே குடைக்குள்ளும் சீமேந்து கட்டுகளிலும் காதலர்கள் இவ்வுலகை மறந்து தத்தமக்குரிய தனிமையான, இனிமையான, புதுமையான ஒரு உலகத்துக்குள் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

சென்ற வருடம் இதே நேரத்தில் எத்தனை உற்சாகமாகவும,; தவிப்புடனும் இருந்தான்.

ஓ... நிஷ்மிதா! வசீகரன் வாய்விட்டு அழுதான். அந்த சந்தோஷமும் பாதி தானே? பி.கொம் முடித்து விட்டு தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் வசீகரனிடம் அதிகாலைகளில் ~வோக்கிங்| செல்லும் பழக்கம் அவனது பதினொரு வயது தொடக்கம் கடமை போன்றே ஆகி விட்டிருந்தது.

அன்றும் அப்படித்தான். வழமையாக அவன் ~வோக்கிங்| போகும் பாதையில் வானை முட்டும் உயரமாக கட்டப்பட்டுள்ள அந்த கட்டிடத்தை எண்ணி பிரமித்து ஒவ்வொரு தட்டாக எண்ணினான். ஒரு நிமிடம்... கடவுளே! அகோர ஒலி எழுப்பிய அவன், லிப்ட் இருப்பதையும் மறந்து மாடிப்படி வழியாக விரைந்து ஓடிப்போய் பார்த்தான். இன்னும் ஒரே ஒரு செக்கனை வீணாக்கினாலும் அவ்வளவு தான். துரிதமாக செயல்பட்டு அவளைப்பிடித்து பின்னால் இழுத்து ஓங்கி ஒரு அறை விட்டான். எதிர்பாராத இந்த தாக்குதலினால் அதிர்ச்சியடைந்த அவள் அவனை மிரட்சியுடன் நோக்கினாள்.

~~ஏய் யாரு நீ? எதுக்கு தற்கொலைக்கு முயற்சி பண்ணினே?||
~~விழுந்திருந்தா எலும்பு கூட மிஞ்சாது தெரியுமில்ல..?||
~~......................||
அவள் மௌனங்களை விடையாகப் பகர்ந்தாள்.

சற்று நேரம் அவளை விட்டு விட்டு வசீகரனே மீண்டும் பேசினான்.

~~ என்ன எக்ஸேம்ல தோத்துட்டியா? இல்ல லவ் பெயிலியரா? ம்ம்.. இல்லேன்னா எவன்கிட்டயாவது...?||

அவன் முடிக்கு முன்னே அவள் சீறினாள்.

~~ ஏய் மிஸ்டர்! நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? எதுக்காக என்னை காப்பாத்தினீங்க?||

ஒரு கணம் ஆடிப்போனான் வசீகரன். தயங்கிய படி அவளிடம் மன்னிப்பு கேட்டான்.

அவன் அப்படி இரங்கி வந்து தன்னிடம் பேசிய போது அவளுக்கு என்னவோ போல் இருந்தது. தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். ஏனோ வசீகரனுக்கும் மீண்டும் மீண்டும் அவளிடம் காரணம் கேட்க வெட்கமாக இருந்தது.

அந்த தற்கொலைக்காரியான நிஷ்மிதாவுக்கு வாழ்வே வெறுத்தது. இந்த சமூகம் இப்படித்தான். நல்லாயிருந்தால் வாழவும் விடாது. கெட்டுப்போனால் சாகவும் விடாது. படிக்கும் பருவத்தில் அவளது கையெழுத்து அழகில்லை என்றாலும் தலையெழுத்து நல்லாயிருக்கும் என்று தோழியர் கூறிய போது நம்பினாளே...

இப்போது கத்தி அழ வேண்டும் போல் இருந்தது. தன் மீது சுமத்தப்பட்ட இந்த ஆயுள் காயத்தை எப்படி போக்குவது என்று அறியாமல் கண்ணீரை துணைக்கழைத்தபடி அவள் தூங்கிப் போனாள். காலையில் அவள் தன் தோழியின் ஞாபகமாக எடுத்து வந்த முற்றத்து ரோஜாவை ரசித்துக் கொண்டிருந்தாள்.

~~இந்த ரோஜாப்பூ கூட எத்தனை அழகானது. என் வாழ்வில் மட்டும் ஏன்...?||

அவளது மனதுக்குள் வெறுமை நிறைந்து மூச்செடுக்க தடை செய்தது.

அப்போது பார்த்து தூரத்தில் வசீகரன்; அவளுக்கு கைகாட்டி சிரித்து விட்டுச் சென்றான். தன் இதயத்தைப் பிடித்து யாரோ சிறகுகளை பொருத்தி வானத்தில் பறக்க விட்டது போல் உணர்ந்தாள். எனினும் அதற்கான காரணம்; அப்போதைக்கு விளங்கவில்லை.

ம்... நிஷ்மி குட்டிக்கு என்ன வாங்கலாம்?
காதலர் தின கார்ட், உயிருள்ள பூனைக்குட்டி, நகைகள்...

எதை வாங்குவதென்று தவித்தான் வசீகரன்.

~~இவ என் காதலை ஏத்துக்கணுமே... ஏத்துக்குவாளா? சிவ சிவா||

ஒரு நாளுமில்லாமல் கடவுளையும் வம்புக்கு இழுத்துக் கொண்டான்.

நாளை காதலர் தினம்!

வழமை போல அடுத்த நாள் காலை ஒரு பார்சலை அவளுக்;கு கொடுத்து விட்டு அவள் கண்களில் தன் உருவம் பார்த்தான். பிறகு தன் இதயத்தை அவளுக்கு தர இருப்பதாக சாடைமாடையாக தன் காதலைக் கூறினான்.

அவனுடைய காதல் இப்படி அவளது கண்ணீரில் மிதக்கும் என்று நினைத்திருப்பானா? அவனது பார்சலை அவனிடமே திணித்து விட்டு அழுது கொண்டே சென்றாள் நிஷ்மிதா.

~~ச்சீ.. எவ்வளவு பெரிய தப்பை செய்யவிருந்தோம்? அன்றைய அவளது வினாவிற்கான விடை இப்போது அவளுக்கு கிடைத்து விட்டது. அவளும் அவனைக் காதலிக்கிறாளா?
வெளிமனம் ஆனந்தத்தால் துள்ளிப் பாய்ந்தாலும் ஆழ்மனம் எச்சரித்து அவஸ்தைப்படுத்தியது.

~~அதை|| அவன் எப்படித் தாங்குவான்? ஆனால் அவளால் மட்டும் சொல்லத்தான் முடியுமா? வசீகரனின் அன்புத் தொல்லை வாழ்நாள் பூராக வேண்டும் போல் இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து இருவரும் சந்திக்க நேர்ந்தது. சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பாத நிஷ்மிதா அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

அதை வசீகரன் புரிந்து கொண்டானோ என்னவோ? அவள் சொல்லப் போவது தனக்குத் தெரியும் என்று கூறி விட்டு அனைத்தையும் கூறி சரி தானே என்றான்.

சிலையாகி நின்ற நிஷ்மிதாவை தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான். விதியின் கைகள் இத்தனை வலிமையானதா? என நொந்து கொண்டாள் நிஷ்மிதா.

~~சொரி நிஷ்மி உன் அனுமதி இல்லாமல் உன் மெடிக்கல் ரிப்போட்ஸ் பார்த்துட்டேன்|| என்று கூறி தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.

இந்த ஒரு வாக்கியம் போதுமே... அவள் அழவில்லை. மனசு கல்லாகியிருந்தது. அவன் தான் வெடித்தழுதான். பின் சமாதானம் கூறினான்.

~~வசீ...||

~~ம்ம்... என்னம்மா||

~~என்னை மறந்துருடா. நான் உனக்கேத்த பொண்ணில்ல||

~~ச்சீ வாயை மூடு||

~~ஐ லவ்யூ லவ்யூ னு ஆயிரம் முறை சொல்ற. நான் சொல்றத கேட்க மாட்டியா?||

~~கொஞ்சம் உன் கழுத்தை அறுக்குறேன். வலியைப் பொறுத்துக்க என்பது போல தானே நீ பேசுறே... உனக்காக எதையும் செய்கிறேன். ஆனால் உன்னை இழக்க மாட்டேன்.||

இத்தனை உறுதியாகக் கூறும் இவனை கட்டிப்பிடித்து அழ நினைத்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டாள். தன்னைப் பற்றிய அத்தனை தகவல்களையும் அறிந்தும் அவள் தான் வேண்டும் என்கிறானே... இவன் தான் சரியான கணவனாக இருக்க முடியுமோ? இதயத்தில் வலியுணர்ந்தாள்.

~~சரி ஒரு வருஷம் கழிச்சி இதே நேரம் காதலர் தினத்தில் சந்திப்போம். அதற்குள் எனக்கு எதுவும் நடக்கலாம். உருமாறிப் போகலாம். ஏன் செத்தாலும் செத்துருவேன்|| என்றாள்.

~~இப்படி பேசினால் நானே உன்னைக் கொன்னுட்டு நானும் செத்துருவேன்|| என்றான் வசீகரன்.

~~பார்க்கலாம். அடுத்த வருடம் இதே நேரம் நீ வர்ரப்ப உன் மனசு கண்டிப்பா மாறி இருக்கும். அப்பயும் மாறலேன்னா காதலர் தினத்துல உன்னோடு எனக்கு முதலிரவு. அட... கல்யாணம்பா.

பார்க்கலாம் நிஷ்மி. ஒரு வருஷம்கிறது அதிக காலம் தான். ஆனால் என் காதலை நிரூபிக்கிறேன். எனக்காக காத்திரு|| என்று கூறி அவள் இதழ்களைக் கவ்வி முத்தமிட்டு விடை பெற்றான்.

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

;வசீகரன் இப்போது காரை மிக வேகமாக செலுத்தினான். நிஷ்மிதா சொன்ன அந்த நாள் இன்று தானே.. அப்படியானால் இன்றிரவு இருவரும் ஒருவராகி விடுவோமா என்று கற்பனையில் லயித்திருந்தான் வசீ.

அந்த கட்டிடம் அப்படியே கம்பீரமாக காட்சி தந்தது. அதை நெருங்க நெருங்கத்தான் அவள் உள்ளத்தில் தீ பற்றியது. மெதுவாக இறங்கி மாடிப்படி ஏறி....

~~யாரங்கே என் நிஷ்மிதாவா?||

சந்தேகமேயில்லை. முகம் கறுத்து உடல் மெலிந்திருந்தாள்.

நல்லா இருக்கியாடா வசீ?

அவனுக்கு கண்ணீர் பீறிட்டது. பெருமூச்சுடனே அவளருகே உட்கார்ந்தவன் சுகம் கூட விசாரிக்காமல்.. ஐ லவ் யூ டா என்றான்.

~~லூசாடா நீ இன்னமும் லவ் பண்றியா?||

~~ என்னம்மா நீ இப்படி கேக்குற|| என்றான்.

அவள் அவனை விநோதமாக பார்த்தாள்.

~~செல்லம்! நீ எனக்குரியவள் மட்டும் தான்டா. உன் கர்ப்பப் பையில உள்ள குறையால நம்ம காதல் எதுவும் பண்ணேலாதுடா. எனக்கு நீ, உனக்கு நான் குழந்தையா இருக்கலாம். இல்லேன்னா தத்தெடுக்கலாம்...||

தன் செலக்ஷன் சரியானதாக இருப்பதாய் அவள் பெருமைப்பட்டாலும் அவனது வம்சம் துளிர் விட்டு வளர தான் குறையுடையவள் தானே என்ற எண்ணம் சந்தோஷத்தை வெட்டிப்போட்டது.

~~செல்லம்மா நீ எதுவும் யோசிக்காத. எனக்கு வாரிசு தர முடியாமல் போயிடும்னு தானே தயங்குற. எனக்கு நீ குழந்தையடி. நீ போதும். வா கார்ல ஏறு.||
என்ற படி அவளை படியிறக்கி கூட்டிச் சென்றான்.

இப்போது...
அவர்களும் காதல் ஜோடி தானே?

காற்றை விட வேகமாக போகச் சொன்னாள். ஐஸ்கிரீம் கேட்டு அடம் பிடித்தாள். ~பீச்சுக்கு| சென்று தண்ணீரில் விளையாடினாள். பழைய உற்சாகம் ஒட்டிக் கொண்டது.

பிறகு அவனுடன் அவனது வீட்டுக்குச் சென்றாள். அவன் வாங்கித்;தந்த நகைகள், சல்வார் செட், மியூசிக் கார்ட், சொக்லேட் என அனைத்தையும் பரப்பி ரசித்தாள். அரை மணி நேரத்துக்குப்பின் அவன் போட்டு வந்த காப்பியை ருசித்தாள்.

பத்து நிமிடங்கள் கழிந்து...

அவன் மஞ்சட் கயிறைக் கொண்டு வந்தான். சடங்கு சம்பிரதாங்களை மறந்து காதலை சாட்சியாக வைத்து மூன்று முடிச்சுகளை இட்டான். மெதுவாக அவளை இழுத்தணைத்து உதட்டை நெருங்க... அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

காதலர் தினத்தில் இணைந்து விட்ட அவர்களது காதலின் கல்வெட்டுக்கள் காலையில் அவனது கன்னத்திலும் பதிந்திருக்கும்!!!

(நிறைவு)

விதியிடம் தோற்றுப் போகிறேன்

இப்போதுகளிலெல்லாம் இருள் சூழ்ந்த ஓர் உலகமாகிவிட்டது என் வாழ்க்கை.

வாழ்வின் வசந்தங்களை ஒவ்வொன்றாக நுகரத்துடிக்கும் டீன்ஏஜ் முடிந்த ஒரு வருடத்தில்... நான் விதியிடம் தோற்றுப் போனேன்!

அந்த கொடுங்கணங்கள் எனக்கு ஞாபகமிருக்கிறது. பாடசாலைப் பருவத்தில் தான் முதன்முதலாக அவளைப்பார்த்தேன். ஜீவிதம் பற்றி விலாவாரியாக தெரியாத வயசெனக்கு. உண்மையில் சொல்வதென்றால் பெயரைப் போலவே நட்சத்திரமாக மின்னியவள். என் மனசுக்குள் காதல் வலைகளைப் பின்னியவள். வாழ்வின் அர்த்தம் தெரியாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்த என்னைப் பிடித்து நிறுத்தி வசந்தம் காட்டியவள். என்னை விட ஓராண்டு மூத்தவள். உடைந்திருந்த என் உள்ளத் துகள்களை தன் பார்வையால் ஒன்று சேர்த்தவள். நான் அழகனல்லன். எனினும் அவளது தரிசனம் கிடைக்கிற ஒவ்வொரு நாளிலும் நான் அழகாகத் தான் தோன்றுவேன்.

கையெழுத்து கோணியிருந்தாலும் என் தலையெழுத்து நன்றாக இருக்கும் என்று ஆறுதல் சொன்ன ஏணியவள். அவளுக்காக எதையும் செய்யத் தயாராயிருந்தேன். என் சக்திக்கு மீறியவற்றையும் அவளது சந்தோஷத்துக்காக செய்ய விழைந்ததுண்டு. அவள் விருப்பமற்ற எதையும் நான் செய்ய நினைத்ததில்லை. அவளுக்கு பிடித்த அனைத்தும் ஏனோ எனக்கும் பிடித்திருந்தது.

என்னை ரொம்பவும் ரசிப்பாள். உற்று உற்றுப் பார்ப்பாள். தேவையின்றி சிரிப்பாள். தலைகால் புரியாத ஆனந்தத்தில் பலநாள் தூக்கம் கெட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் என் உடலின் மயிர்த் துளைகள் அனைத்தும் ஆனந்த மழையில் கொஞ்சம் நனைந்து கொள்ளும். எனைத் தொடாமல் அவளுக்கு பேசத் தெரியாது. எனக்கோ கூச்சமாக இருக்கும். அவளைத் தொட்டுப் பேச ஆசையாகவுமிருக்கும்.

காலடியில் இருக்கும் பல தனியார் வகுப்புக்களை விட்டு விட்டு மிகத் தொலைவில் இருக்கும் வகுப்புகளுக்கு போய் வருவேன். ஏன் தெரியுமா? அவளோடு இணைந்து நடந்து, சின்னக் கண்கள் பார்த்து, மதுரமொழி குரல் கூறும் கதை கேட்டு சந்தோஷமாக செல்வதற்கு. அதை விட வேறென்ன தேவையிருந்திருக்கும் எனக்கு? நிச்சயமாக நான் அவளைக் காதலித்தேன்;. தேளாக கொட்டி விட்டுப் போகும் வரை எனக்கு அது தேன். அவள் எனை ஏமாற்றி விட்டுப் போன போது துடித்துப் போனேன். இதயம் வெடித்துப் போனேன்.

ஆரம்பக்காலங்களில் நன்றாகத்தானிருந்தாள். ஆனால் அவள் என் நெஞ்சுக்குள் நெருஞ்சி முள்ளை செருகி விட்டுப் போகும் வரை எனக்குத் தெரியவில்லை. தெரியாதளவுக்கு நான் சின்னக் குழந்தையுமில்லை. அன்பைக் காட்டி வம்பை வாங்குவேன் என்று அறிந்திருக்கவில்லை.

அவளது ஊருக்கு எனை விட்டு விட்டுப் போவாள். அப்போது இதயத்தில் இனம்புரியாத வலியெடுக்கும். ஏனெனில் திரும்பி வரும் போது என்னைப் பற்றி சுமந்து சென்ற ஞாபகங்களில் பாதியை தொலைத்து விட்டிருப்பாள். வந்த பின் கழுகாய் என்னைச் சுற்றி;, பாம்பாய் என்னைக் கொத்தி வதைப்பாள். அப்படியெல்லாம் நடந்தாலும் நான் அவளுடன் கதைக்காமல் இருந்ததில்லை. என் அகம் முழுக்க அவள் வியாபித்து இருந்ததாலோ என்னவோ மீண்டும் மீண்டும் அவள் முகம் பார்க்கவே ஏங்கினேன்.

அவளை மட்டுமே என் இதயத்தின் இளவரசியாக்கிக்கொள்ள ஆசைப்பட்டேன். ~~போனால் போடி| என்று சொல்லி விட்டு வந்திருக்கலாம். நான் அவள் மீது கொண்ட காதல் பொய் என்றால்!

அவள்...
எனக்கு மட்டுமானவள் என்று தான் எண்ணியிருந்தேன். “எனக்கு இன்னொருவன் இருக்கிறான்|| என அவள் சொல்லும் வரை.

அவள் வேண்டும் என்பதற்காக நான் அவளைக் காதலிக்கவில்லை. நான் உண்மையாக அவளைக் காதலிப்பதால் தான் அவள் எனக்கு தேவையாக இருக்கிறாள்.

அவளைத் தவிர வேறெந்த ஞாபகங்களும் எனக்கில்லை. என் இதயம் அழுகிறது. அவளது வீட்டார் விரும்பும் மணவாளனுக்கு அவளைக் கொடுத்துவிட்டு நான் விலகிக்கொள்ள நினைத்தாலும் என் உள்ளம் உலோபியாகின்றது. அவளை என் உயிர் போல நான் கருதிடாத காரணம், உயிரும் ஓர் நாள் என்னை விட்டு பிரிந்திடுமே என்பதால் தான். அவளை உண்மையாய் காதலித்ததற்காக எனக்கு கிடைக்கவிருக்கும் பரிசுதான் என்னவோ? ஐயோ கண்ணீர் கட்டுப்பாடின்றி வழிகிறது. அழிந்து போகவே முடியாதபடிக்கு ஒரு காதல் வடுவை தந்திடுவாளோ?

என் ஆசைகளை அவளின்; வார்த்தைகளுக்குள் கருகச் செய்து விட்டு என் அந்தரங்கத் துன்பத்தில் சுகம் கண்டால்…? அந்த எவனோ ஒருவனின் அணைப்பில், அந்த சுகத்தில் அவளது மனசாட்சி கருகிப்போய் என்னை மறந்துவிட்டால்....?

என்னைச் சுற்றி சதாவும் ஒரு தீக்குளம் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது.

துன்பக்கடலில் மூழ்கடித்து விட்டு மூச்சு முட்டச் செய்தாலும் அவளுடன் நான் கோபிக்கப்போவதில்லை. என் மனசில் அவளுக்காக ஊற்றெடுக்கும் அன்பை முழுவதுமாக வெளிப்படுத்தத் தெரியவில்லை. ஒரு வேளை அப்படித் தெரியப் படுத்தினால் என்னை பைத்தியக்காரனாகவும் எண்ணியிருப்பாள். சிலவேளை என் ஆன்மாவை கசக்கிப் பிழிந்து காதல் சாறை வலுக்கட்டாயமாக பருக்கியதாலோ என்னவோ அவள் என்னை விட்டு போக எண்ணியிருக்கக் கூடும்.

அவள் இன்னொருவனுக்கு உரிமையாகப் போகிறாள். கடவுளே. அதைத் தாங்கும் பலமான உள்ளம் எனக்கில்லையே.

கரவை மாடாய் காதலித்துக்கொண்டிருந்த என்னைவிட்டு அந்தப்பறவை உல்லாசமாய் பறந்து போய்விட்டது. ஆனால் சிறகுகள் எறிந்து சாம்பலாகிக் கொண்டிருப்பது நான் தான்!!!

மே தின விடுமுறை

குருமூர்த்தியின் மனது சஞ்சலப்பட்டுக கொண்டிருந்தது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாளை மே தினம். விடுமுறை நாள். வீதியெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு நாளைய தினத்தில் மே தின ஊர்வலம் கொண்டாடப்படும் என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை வாசித்த போது அவனுக்கு சத்திமிட்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது.

மலைய மக்களின் வாழ்க்கைச் சுமையும் தேயிலைச் சுமையும் நிரந்தரமாக்கப் பட்டு விட்டது. கடலோரப் பிரதேச வாசிகளின் வருமானம் பிடுங்கித் தின்னப்படுகிறது . நடுச்சாமத்தில் வலை வீசி க~;டப்படுபவர்களிடம் முதலுக்கும் மோசமாக்குவது போல குறைத்துத் தருமாறு விலை பேசுகிறார்கள். கம்பனிகள், கடைகள் வீட்டு வேலைகள் எல்லாவற்றிலும் பணத்தின் இதிகாரம் மாத்திரம் தலை விரித்தாடுகிறது. வருடம் முழுவதும் மாடாய் நடாத்தி விட்டு ஒரு நாளைக்கு மட்டும் தொழிலாளர்களுக்காக தொண்டைக்கழிய கத்தப் போகிறார்கள்???

எல்லோரும் விடுமுறை நாள் என்று சந்தோ~ப்பட்டுக் கொண்டிருக்க இவன் மாத்திரம் இப்படி தவிப்பதற்கு காரணம் இல்லாமலில்லை. வறுமையில் வாடிக்கொண்டிருப்பது மட்டும் தான் அவனது வாழ்க்கையாகி விட்டதே. இதையெண்ணி கவலைப்படுவதைத் தவிர அவனால் வேறு என்ன செய்ய முடியும்?

அரச மரத்தை ஆயிரம் முறை சுற்றி வந்தும், விரதங்கள், நேர்ச்சைகள் என்று பல தவங்கள் செய்தும் சில பணக்காரர்களுக்கு ஆண்டவன் ஏனோ குழந்தைப் பாக்கியத்தை மட்டும் கொடுப்பதேயில்லை. ஆனால் ஏழைகளுக்கு உள்ள ஒரே சொத்து இந்த குழந்தை பாக்கியம் மட்டும் தான். அந்த வகையில் குருமூர்திக்கும் ஐந்து குழந்தைகள் இருந்தன. கடைசிக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்கள் தானும் பூர்த்தியாகவில்லை.

குழந்தைகள் பசி தீர உணவு சாப்பிட்டதை அவன் இன்று வரை பார்த்ததில்லை. அவனது வாழ்க்கையில் அவனுடன் கூடவே ஒட்டி வநது நிலைத்த ஒரே உறவு வறுமை மட்டும் தான். நன்றாக படித்தால் பிற்காலத்தில் நன்றாய் வாழலாம் என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் சொல்லியிருக்கிறார்கள். எனினும் படிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தும் அது நிறைவேறாமல் போனதற்குக் காரணமும் அந்த வறுமை தானே?

தன்னை விட ஓரளவு வசதி வாய்ந்த தன் மனைவி தன்னைக் கல்யாணம் செய்து கொண்டதிலிருந்து அவள் கண்ட சுகம் தான் என்ன? வாய்க்கு ருசியாய் சாப்பிட்டிருப்பாளா? ஆசையாக புதுத்துணி தான் உடுத்தியிருப்பாளா? அவளுக்கென்றிருந்த கொஞ்ச சொத்தையும் தான் அவளது பணக்கார சகோதரர்கள் பநித்துக் கொண்டாகி விட்டதே?

குருமூர்த்தி பிரபலமான துணிக்கடையொன்றில் வேலை செய்கிறான். அவனது படிப்புக்கு இந்த வேலை கிடைத்ததே அபூர்வம் என்று மெனேஜர் உட்பட பலர் அவனை அவமானப்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில். அதில் கோபப்படவோ வருத்தப்படவோ ஒன்றுமில்லை. உண்மையும் அது தான்.

ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில் ஏழு வருடங்களுக்கு முன்பு தொழிலுக்கு வந்தான் குருமூர்த்தி. கடை முதலாளியும் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவது போன்றே இன்னமும் ஒரு ரூபாயேனும் அதிகமாக்கிக் கொடுக்கவில்லை.

ஒரு வேளைக்கு பருப்பும் தேங்காயும் பாணும் எடுத்தால் அன்றைக்கே இருநூறு ரூபாய் காலியாகி விடுமே? பீட்ஸா சாப்பிடும் பணக்காரர்களின் வாய்க்கு குருமூர்த்தியின் சாப்பாட்டைக் கொடுத்தால் என்ன செய்வார் என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதலாளியிடம் பல முறை இது குறித்து விசாரித்தும் அடுத்த மாதம் பார்ப்பம்ஷ என்ற ஒற்றை பதிலுடன் பேச்சை முடித்து விடுவார். அடுத்த மாதம் என்பது இந்த ஏழு வருடம் வரை தொடர்வதை அறியாத அப்பாவியா அல்லது மடையனா இந்த குருமூர்த்தி?

இந்தத் துணிக்கடையை வைத்துக்கொண்டு முதலாளி எவ்வளவு பெரிய மனிதராகி விட்டார். அவரது சொல்பேச்சை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு தன்னிடம் வேலை செய்பவர்களையும் கிட்டத்தட்ட அடிமை போல வைத்திருந்தார் அவர். விN~சமாக குருமூர்த்தியின் பங்களிப்பு அந்தக்கடைக்கு அத்தியவசிமானதாக இருந்தது. இருக்காதா பின்னே? பண்பட்ட நிலத்தில் தான் விளைச்சல் அதிகமாய் இருக்கும் என்பதற்கிணங்க ஏழு வருடங்கள் துளிக்கூட வஞ்சகமின்றி ஓடி ஓடி உழைத்து இந்தக்கடைக்காக தன் வாழ்க்கையையே தியாகமாக்கிக் கொண்டிருக்கிறான் குருமூர்த்தி. பெருநாள் தினங்களுக்கே லீவு கொடுக்காமலும், கடை மூடியிருக்கும் நாட்களில் சம்பளத்தை வெட்டியும் தன் அதிகாரத் திமிறைக் காட்டி ஏழைகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளும் இந்த அயோக்கிய முதலாளி, அவனை அவ்வளவு சீக்கிரத்தில் வேறொரு இடத்துக்கு வேலைக்குப் போக விட்டு விடுவாரா?

முதலாளி விடுகிறாரோ இல்லையோ இந்த வேலையை தூக்கியெறிந்து விட்டு வேறொரு தொழிலுக்கு செல்ல குருமூர்த்திக்கும் வழியில்லை. அவன் பழகிக் கொண்ட ஒரே தொழில் இது மட்டும் தான். அது மாத்திரம் காரணமல்ல. இவ்வளவு காலம் முதலாளியின் உப்பைத் தின்று விட்டு அவருக்கு விருப்பமில்லாததை செய்ய அவன் இ~;டப்படவில்லை. தவிர முதலாளி தனதும் தன் போன்றோரினதும் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டு அவர் மட்டும் பணக்காரர் ஆகிக் கொண்டிருப்பதையும் அவன் அறியவில்லை.

முதலாளிகள் அல்லது பொஸ் என்று தம்மை என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெறும் இயந்திரங்களாக நடாத்தும் எத்தனைப்பேர் இன்று நன்றாக வாழ்கிறார்கள்? தம்மிடம் வேலைப்பார்ப்போரை ஏன் வாழ விhமல் இருக்கிறார்கள்? கே~pயரில் வெறுமனே உட்கார்ந்து கொண்டு ஆயிரங்களாக சம்பாதிக்கிறார்களே? வியர்வை சிந்த உழைத்தும் தினமும் மூட்டைத்தூக்கினாலும் ஏன் தொழிலாளி வர்க்கம் மட்டும் ஏழையாகவே எப்போதும்??

சில இடங்களில் குறிப்பிட்ட மாத சம்பளத்தை தாமதித்து அடுத்த மாதத்தில் கொடுக்கின்ற அடாவடித்தனங்களும் இடம் பெறாமல் இல்லை. காதலுக்கும் கல்யாணத்துக்கும் ஜாதி மதம் பணம் என்று பிரித்துப் பார்ப்பவர்கள் போன்று தொழிலாளர்களையும் பிரித்துப் பார்க்கும் ஈனபுத்தி விரல்விட்டு எண்ணக்கூடிய பல முதலாளிகளிடம் இருக்கிறது. அது மாத்திரமின்றி பெருநாள் தினத்தைக் கொண்டாடுவதற்கு தொழிலாளர்களை தத்தமது சொந்த ஊருக்கு போக விடாமல் தனதும் தனது குடும்பத்தினரின் சுற்றுலாவுக்காக சாரதியாக வைத்துக்கொள்ளும் எத்தனைப் பேர்?

சிங்களத்தமிழ் புத்தாண்டுக்கு, கிறிஸ்மசுக்கு, நோன்பு அல்லது ஹஜ் பெருநாட்களுக்கு என்று விடுமுறை தராமல் வேலை செய்யப்பணிக்கின்ற அரக்கர்கள் தான் எத்தனைப் பேர்? சாப்பிடுவதற்கே வழியின்றி இவர்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது வீண் களியாட்டங்களில் ஈடுபடும் பாவிகள் எமது சமூகத்தின் சாபக்கேடுகள். முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்குமான பெரிய போராட்டமே நடப்பதும் இதனால் தான் என்று அவர்கள் அறியவில்லையா? அல்லது அறியாதது போல் வே~மிட்டுக் கொண்டு இருக்கிறார்களா?

திருநபி (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு அருளியுள்ளார்கள்.
கூலிக்காரனது கூலியை அவனது வியர்வை காயுமுன்னே கொடுத்து விடுங்கள்

இந்த கருத்தை மதித்து ஏற்றுக் கொள்ளும் எத்தனை முதலாளிகள் எங்கள் சமுதாயத்தில் இருக்கிறார்கள்?

இந்தக்காலத்தில் ஆண்கள் பல தொழில்களை கற்று வைத்திருந்தால் தான் குடும்ப பாரத்தை ஓரளவாவது சமாளித்துக் கொள்ள முடியுமாக இருக்கிறது. குருமூர்த்தி போல ஒரு தொழிலை மாத்திரம் கற்றுக்கொண்டு இருந்தால் வேறொரு தொழில்வாய்ப்பு எப்படி அமையும்? நல்ல வசதியான தொழிலுக்கு செல்வதென்றாலும் முதலாளி வர்க்கம் அதற்கு இடம் கொடுப்பதில்லையே? இன்டர்வியூ என்ற பெயரில் அரங்கேறும் அராஜகங்கள் எத்தனை? பணக்காரர்களில் புத்திரர்களுக்கு மாத்திரமாய் அமைந்து விடும் இந்த தொழில் வாய்ப்புக்கள் வறுமையோடு பிறந்து வறுமையோடு வளர்ந்தவனுக்கு எட்டாத கனி தானோ?

நாளைய தினத்தை எப்படியெல்லாம் களியாட்டங்களில் கழிக்கலாம் என்றும் என்னென்ன திரைப்படம் பார்க்கலாம் என்றும், எந்த நண்பன் வீட்டுக்கு போகலாம் என்றும் தான் பலர் யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் குருமூர்த்தியின் கவலையோ வேறு விதமாகத் தான் இருந்தது. அதாவது நாளைய தினத்தில் வேலை இல்லை என்றால் வழமையாக கிடைக்கின்ற இருநூறு ரூபாயும் கிடைக்காது. அதனால்; அன்றைய செலவுகளை சமாளிப்பது எப்படியென்றும், வழமையாக இருவேளைக் கஞ்சியோடு மாத்திரம் தம் பசியை அடக்கிக் கொள்ளும் தன் குழந்தைகள் நாளைய நாள் முழுவதும் பசியோடு இருக்க நேரிடுமே என்றும் தான்.

முதலில் குறிப்பிட்டது போல் பசி தூக்கம் மறந்து குடும்பத்தை பிள்ளைகளை நினைத்துருகி அயராது வேலை செய்து, முதலாளிகளுக்கு உழைத்துக்கொடுப்பவர்கள் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த மே தினத்தில் கொஞ்சமாவது ஆறுதல் பட்டுக்கொள்ளக் கூடும். ஆனால் அன்றாடங் காய்ச்சிகளான குருமூர்த்தி போன்றோரின் மனம், நிச்சியமாக மேதினம் என்ற விடுமுறை நாளை பொய்யாக கொண்டாடப் போவதில்லை!!!