Monday, May 24, 2010

படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா !

ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் தியத்தலாவை என்ற ஊரைச் சேர்ந்த இளம் கவிதாயினியும், சிறுகதை படைப்பாளியுமான எச். எப். ரிஸ்னா, ஹலால்தீன் - நஸீஹா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார்.

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா என்ற சொந்தப் பெயரையே பெரும்பாலும் பயன்படுத்தி வரும் இவர் கவிநிலா, குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருவதுண்டு. சொந்த ஊரான தியத்தலாவையிலிருந்து இடம்பெயர்ந்து வந்து உயர்படிப்புக்காக தலைநகரில் தங்கியிருக்கிறார்.

துரம் 03ல் கல்வி கற்கும் போதே பூங்கா என்ற சிறுவர் சஞ்சிகையில் இவரது ஆக்கம் வெளிவந்தது. அத்துடன் மீலாத் தின போட்டிகள், தமிழ்தினப் போட்டிகளில் பங்குபற்றி பல தடவைகள் முதலிடத்தை பெற்றிருக்கிறார்.

தரம் 08ல் கற்கும் போதே கவிதையின் படிக்கட்டுக்களில் காலடி எடுத்து வைத்த இவரது முதல் கவிதை 2004ம் ஆண்டு மெட்ரோ நியூஸ் என்ற பத்திரிகையில் காத்திருப்பு என்ற தலைப்பில் வெளிவந்தது. அதையடுத்து இதுவரை சுமார் 120க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 20க்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

துன்பம், சந்தோஷம், இனிமை, காதல், பெண்ணியம், சமூக அவலம், சீதனக்கொடுமை, மலையகப் பிரச்சனைகள் என்பன இவரது பாடுபொருள்களாக காணப்படுகின்றன.

வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளான ஓசை, நிஷ்டை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், அல்லஜ்னா, நிறைவு, ஞானம், இந்திய சஞ்சிகையான இனிய நந்தவனம், மற்றும் இணையத்தளங்களான www.vaarppu.com, www.youthfulvikatan.com பெண்களின் குரலாக ஒலிக்கும் www.oodaru.com, போன்ற வலைப்பதிவுகளிலும் அவருடைய ஆக்கங்கள் பதிவாகியுள்ளன.www.riznapoems.blogspot.com, www.riznastory.blogspot.com, www.poetrizna.blogspot.com ஆகிய தன்வலைப்பூக்களிலும் அவரது படைப்புக்களைப் பார்வையிட முடியும்.

2008ம் ஆண்டு ஏப்ரல் 20 - 26 வார சுடர் ஒளி பத்திரிகையில் வெளிவந்த உணர்வுகள் என்ற பகுதியிலும், 2008 புரட்டாதி மாத செங்கதிர் சஞ்சிகையிலும் மற்றும் 2010ம் ஆண்டு பெப்ரவரி ஞானம் சஞ்சிகையிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் பிரசுரமாகியுள்ளன.

பிறை எப்.எம்., சக்தி எப்.எம்., இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மற்றும் நேத்ரா அலைவரிசையில் கவிதை கூறியிருப்பதுடன் கடந்த 2010 பெப்ரவரி 03ம் திகதியன்று இவரது நேர்காணலும் இடம் பெற்றது.

தற்போது BEST QUEEN FOUNDATION என்ற அமைப்பின் பிரதித் தலைவராகவும் (bestqueen12@yahoo.com, www.bestqueen12.blogspot.com) பூங்காவனம் சஞ்சிiயின் ஆசிரியர் குழுவிலும் சேவையாற்றி வரும் இவர் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.

பேய்களின் தேசம் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற இவருடைய இரு கவிதைத் தொகுப்புக்களும் கனவுகள் உயிர் பெறும் நேரம் என்ற சிறுகதைத் தொகுதியும் இலக்கிய உலகத்துக்குள் நுழைய காத்திருக்கிறது.

இலக்கியத் துறையில் மாத்திரமன்றி கணினித் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் Information & Communication Technology என்ற கற்கை நெறியைப் பூர்த்தி செய்து Diploma பட்டத்தையும் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கவி வானில் உலா வரும் இக் கவிநிலாவுடன் தொடர்பு கொள்ள...

E-Mail- poetrizna@gmail.com

Thursday, May 20, 2010

காணாமல் போன கவிதை

நிஸ்தார் நானா கேட்டை திறந்து வெளியே வந்து பார்த்தார். எறும்புக்குட்டங்களாய் வாகனங்கள் போய்க் கொண்டிருந்தன. இந்த நிமிடத்தில் அவசரமாக பாதையைக் கடக்க வேண்டும் என்றால் உணிரைத் தான் விட வேண்டியிருக்கும்.
என்ன யோசிக்கிறீங்க... வாங்க சாப்பிடலாம்
சொல்லிக் கொண்டு வந்த மனைவியைப் பார்த்து புன்னகைத்தார்.
புள்ளையள் ரெண்டு பேரும் டியூஷன் பொயிட்டாங்களா?
ம்ம்... சாப்பாடு கொடுத்து அனுப்பிட்டேன்... வாங்க நாம சாப்பிடலாம் என கூற அவரும் வீட்டுக்குள் வந்தார்.
¨¨¨¨¨¨¨¨¨¨
அவருக்கு முப்பத்தியிரண்டு வயதிருக்கும். என்றாலும் இருபத்தியாறு வயது போலத் தான் தோற்றம். காது மடலருகே எட்டிப் பார்க்கும் வெள்ளை முடியை பின்புறமாக சீவி விட்டால் வாலிபன் தான் நிஸ்தார் நானா. மனைவி ரயீஸா மட்டும் என்னவாம். இரட்டைக் குழந்தைகளின் தாயார் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்? இயற்கை இவர்களிடம் அதீத பாசம் கொண்டு இளமையை வாரி வழங்குகிறதா என்றே எண்ணத் தோன்றும்.

நிஸ்தார் நானா ஆசிரியர் நியமனம் பெற்று எட்டு வருடங்களிருக்கும். அவரது வாழ்வில் அடி, தண்டிப்பு, கோபம் என்றெல்லாம் மாணவர்களிடம் வெளிக்காட்டியதேயில்லை. அன்பும் பாசமும் தான் ஒருவனை நல்லவனாக்கும் என்று எப்Nபுhதோ அனுபவம் மூலம் அறிந்தவர். உயர்வகுப்பு மாணவர்களுக்கெல்லாம் இவர் தான் பெஸ்ட் பிரண்ட். மனசு விட்டுப் பேசி மாணவர்களின் குறை நிறைகளை அறிந்து உதவுவார். அவர்களுடனிருக்கும் போது தன் இளமை நினைவுகளில் மாறிப்போவார்.

என்ன சேர்..அந்தக்கால யோசினை வந்திட்டா? குறும்புக்கார மாணவன் கேட்க,
ஓமோம். ரோமியோ ஜுலியட் காலம். போய் திருக்குறள் பாடமாக்கு. நாளைக்கு பரீட்சை என ஆதரவாக கூறி அனுப்பினார்.

அவன் கேட்டதும் சரி தானே?
எவ்வளவு வசந்தமான காலங்கள் அவை?
¨¨¨¨¨¨¨¨¨¨
ஆசிரிய பயிற்சிக் கலாசாலை... அங்கு தானே அவருக்கு மறக்க முடியாத காலம். ஸீனியர் மாணவர்க்ள எல்லாம் இவரை பாடச்சொல்லி அதட்டினார்களே?

ரேக்கிங் பற்றி கேள்விப் பட்டிருக்கிறார் தான். ஆனால் இப்படியுமா?
பாடசாலைக் காலத்தில் எந்தவித வம்புதும்புக்கும் போகாதவர் இவர்களிடம் மிரண்டு தான் போனார்.
ப்ரதர் எனக்கு பாட வராதே
என்னடா பாக்குற பாடன்னு சொல்றேனில்ல.. மீண்டும் அதட்டல்கள்.
பாடவா ஓஓர் பாஆஆடலை..... குரல் நடுங்கியது நிஸ்தார் நானாவுக்கு.
ஸீனியர் மாணவர்கள் எல்லாம் குடல் வெளியே தெரியுமளவுக்கு சிரித்தார்கள். பாடலை நிறுத்தச் சொல்லி, நிறுத்தியதற்காக பாராட்டினார்கள். பின்பு அவர்கள் அனைவரும் நண்பர்களாகி வாழ்க்கையை அனுபவித்ததெல்லாம் மனசில் பதிந்த இனிப்புகள் அல்லவா?

டேய் மச்சான் சூப்பர் ஃபிகர்டா..வா போய் பார்க்கலாம்
ஸீனியர் மாணவன் கூப்பிட்டும் பேகாவிட்டால் என்ன நடக்கும் என்று முழு பல்கலைக்கழக வளாகமும் அறியும். ஆதலால் குட்டி போட்ட பூனை போல நிஸ்தார் நானாவும் சென்றார்.
போய் அந்தப் பெண்ணைப் பார்த்தவர்.....
¨¨¨¨¨¨¨¨¨¨
பாடசாலை விடுவதற்பாக மணி ஒலித்தது. தன் மோட்டார் சைக்கிளின் உதவியுடன் அரை மணி நேரத்துக்கெல்லாம் வீ வந்து சேர்ந்தார். சாப்பிட்டு விட்டு வந்தவருக்கு மனைவி நீட்டிய பானத்தில் பார்வை நிலை குத்தியது. அதனூடே மீண்டும் அந்தப் பெண் அவரது புலன்களுடே வந்து சலனமூட்டிள்.

அப்படித்தான். ஒருநாள் சிற்றுண்டிச்சாலைக்கு நுழைந்து தொண்டை வரை சாப்பிட்டார். அந்த நேரம் பார்த்து ஒரு குரல்..

அங்கிள் கொக் ஒன்னு ப்ளீஸ்..

திருமியவருக்கு வியப்பு. என்ன அழகான குரல். பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் அவரை நோக்கி நெருங்கிக் கொண்டு வந்தாள்.
பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா எனப பார்ததார். இல்லை. அவருக்கு மின்னலடித்தது. அவர் கைகளில் கோக்கா கோலாவை தந்து விட்டுப் போனாள்.
அவரது மனசை ஓராயிரம் பட்டாம்பூச்சிகள் குடைய ஆரம்பித்தன. அடுத்த நாள் காலை சற்று லேட்டாகி எழுந்தவர் தனக்குத்தானே கனவு முழுவதும் கன்னியவள் வருகை என்றார்.
¨¨¨¨¨¨¨¨¨¨
அட கவிதை கூட வருமோ, கண்களை சிமிட்டிய படி ரயீஸா வர, வெலவெலத்துப் போனார் நிஸ்தார் நானா.
காப்பி பொடி தீர்ந்துடிச்சி. வாங்கிக்கிட்டு லைப்ரரியில புள்ளயள் நிப்பாங்க. அழச்சிக்கிட்டு வந்துடுங்க
¨¨¨¨¨¨¨¨¨¨
லைப்ரரி!
அது கூட நெஞ்சிலிருந்து அகலவில்லை. எதை மறக்க நினைக்கிறோமோ அது தான் அடிக்கடி நினைவில் வந்து போகும் என்று எங்கோ வாசித்த வரிகள் அவருக்கு ஞாபகம் வந்தது.
எத்தனை முறை அவளுpடம் பேசவென்று முயற்சித்திருப்பார். ஒரு பார்வை... ஒரு புன்னகை...
இதையே பார்த்து எவ்வளவு நாள் சீவிப்பது? மனம் திறந்து ஒரு வார்த்தை??

ஆம்! பேசக்கிடைத்தது. ஆனால் நான்கு மாதங்கள் கழிந்து ஒரு கலைவிழாவின் போது தான்.
அவள் கவிதை சொல்வதற்காக மேடை ஏறிய போது பலத்த கரகோஷம். கவிதையே கவிதை சொல்கிறதா? என்று வியந்தார்.
அதை சாட்டாக வைத்து பாராட்னார் அவளும் சிரித்தாள்.

நாளிராவுடனான அவரது பார்வை மற்ற ஆண்களிலிருந்தும் வித்தியாசப்படுவதை உணர்ந்தாள் நளீரா. அவரது காதல் மனம் அவளுக்கு விளங்கியது.

அதன் பிறகு பயிற்சிக்கலாசாலையிலிருந்து அவர் பாடசாலைக்கு மாறினார். இதன் போது தன் தந்தையின் உத்தரவுக்கிணங்க நளீரா போவது கட்டாயமானது. சந்திப்புகள் யாவும் வுங்சனை ஆனதால் கண்ணீருக்கு கைகளை அணையாக்கிப் பார்த்தார்கள். முடியாமல் போகவே பிரிவு என்பது உண்மை என உணர்ந்தார்கள். அவர்களது எதிர்கால கனவுக் கோட்டையை காற்று அடித்துச் சென்று காணாமலாக்கும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?
ஊருக்குச் சென்ற நாளிராவின் தொடர்பு திடீரென்று குறைய மலை உன்று இடம் பெயர்ந்து தன் நெஞ்சில் இருப்பதை உணர்ந்தார். உண்மையாக காதலித்தவர்களுக்கு காத்திருப்பதில் தானாம் சுகம் அதிகம். ஆனால் மானசீகமாக காலித்த நிஸ்தார் நானாவுக்கு பொறுமை என்பது பொய்யாகிப் போனது. எனவே அவர் அவளைப் பார்க்கவென்று புறப்பட்டார்.
ஒரு வேளை போகாமல் இருந்திருந்தால் நாளிரா அவரை ஏமாற்றி விட்டுப் போயிருக்கிறாள் என்றோ அல்லது பெண்களே பேய் என்றோ பிதற்றித் திரிந்திருக்கலாம். ஆனால்....

இதோ அவள் பாதி நிர்வாணத்துடன் பிணமாக கிடந்ததாக ஊரார் பேசிக் கொகின்றார்களே. இதைக் கேட்கத்தான் ஓடி வந்தாரா? சிறுவயதிலிருந்தே நாயிராவுடன் ஒன்றாக விளையாடிய இனிய நண்பனப இப்பயான கொடுமையைச் செய்தவன்? மூர்ச்சித்து விழுந்தார் நிஸ்தார் நானா.
¨¨¨¨¨¨¨¨¨¨
இன்றும் அவர் நினைவுகளில் நாளிரா வந்து போவதுண்டு. நாளிராவை மறந்த கயவராக அவர் இல்லை. அதே போல நாளிராவை நினைத்துக் கொண்டு ரயீஸாவுக்கு துரோகமும் செய்யவில்லை. அவரைப் பொறுத்தவரையில் நாளிராவைமறக்க முடியாது ஏனெனில் அந்த நாளிரா...அவரது காணாமல் போன கவிதை!!!

தெளிந்த வானம் !

அந்தப் பகல் அகோரமாய் காட்சியளித்தது. சூரியன் தன் மனைவி சாயையை தேடி நிலத்தின் வெடிப்புகளுக்கிடையிலும் தன் கதிர் எனும் கைகளை செலுத்திக் கொண்டிருந்தான். கடையில் கணக்கு வழக்குகளைப் பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்த அஸ்லம் எதிர்பாராத விதமாக அக்காட்சியைக் கண்டுவிட்டான். ஆம் அவனது தந்தையும் அவளும் வழியில் பேசிக்கொண்டு இருக்கிறார்களே! பேசுகிறார்களா? வாப்பா ஏதேதோ அவளுக்கு கைநீட்டி ஏசிக் கொண்டல்லவா இருக்கிறார்.

முக்கிய தேவைகளின் போது தனக்கு கோல் பண்ணுவதற்கு ஒரு மொபைல் போன் வாங்கித்தருவதாக அஸ்லம் தான் அவளை வரச்சொல்லியிருந்தான். காலை பத்தரைக்கு வந்து வாங்கிக்கொண்டு போனாளே... இப்போது இரண்டு மணி கடந்து இங்கென்ன செய்கிறாள்? இந்த மனிதரிடம் வசமாகவே மாட்டிக்கொண்டுவிட்டாளே? மனிதத் தன்மையை மறந்து அவள் மனசை என்ன பாடுபடுத்தி இருப்பாரோ இந்த வாப்பா? ஒரு வேளை நான் மொபைல் வாங்கிக் கொடுத்ததையும் வாப்பாவிடம் போட்டுக்கொடுத்து விட்டாளோ?

சொல்லியிருந்தால் தான் என்னவாம்? அஸ்லமிடம் கேட்கும் உரிமை அவளுக்கு இருக்கிறது தானே? அவளது தேவைகளை கவனிப்பது அஸ்லமின் பொறுப்பில்லையா? பாவம் ரமீஸா!

தன் வாழ்வுரிமை மீறப்பட்டதால் தானே இப்படியொரு இக்கட்டுக்கு விருப்பமின்றியேனும் தள்ளப்பட்டாள். இப்படி அஸ்லமுக்கு தோன்றி என்ன பயன்? அவளது வாப்பாவான தாஸீம் ஹாஜியாருக்கல்லவா தோன்ற வேண்டும்? ஏன் தான் வாப்பாவுக்கு புத்தி இப்படிப் போகிறதோ? பௌதீக மாற்றமேனும் நிகழ்ந்துவிட்டதோ? வாப்பாவை எதிர்த்து அவளை இந்த வீட்டுக்கு அழைத்து வரும் தைரியம் அஸ்லமுக்கு இல்லை தான். அவ்வளவு கையாலாகாதவனா அஸ்லம்? இவர்களை விட்டால் ரமீஸா எங்கு போவாள்?

யோசித்தவாறே பகல் சாப்பாட்டுக்கு வந்திருந்த அஸ்லமைப் பார்த்ததும் அவனது தாயான பாயிஸாவுக்கு அவன் இதயம் புரிந்துவிட்டது.

என்ன ராஜா இன்னிக்கு ரமீஸாவ கண்டுட்டீங்களா?

ஓம் உம்மா. அதுவும் வாப்பாகிட்ட வசமா மாட்டிட்டாளே. என்று கூறியதை கேட்ட பாயிஸாவுக்கும் தூக்கிவாரிப்போட்டது. கண்மண் தெரியாமல் தாஸீம் ஹாஜியார் அவளை ஏசியிருப்பார் என்றே பாயிஸா கவலைப்பட்டாள்.

சற்று நேரத்தில் அஸர் தொழுதுவிட்டு வந்த ஹாஜியார் அஸ்லமை பன்மையில் கூப்பிட்டார். அவர் அப்படி கூப்பிட்டால் நிச்சயமாக ரமீஸாவை, தான் சந்தித்த விடயம் தெரிந்திருக்க வேண்டும். ரமீஸாவை தான் சந்தித்து பேசிய விடயத்தை கேள்விப்படும் ஒவ்வொரு முறையும் இவனுக்கு பன்மையில் அழைப்பு வரும். பிறகு காதுக்கு அர்ச்சனை நடக்கும். ஏன் தான் இப்படியோ என்று நினைக்கும் போது அஸ்லமுக்கு மூளையில் எரிச்சல் பரவும். அஸ்லமுக்கும் ரமீஸாவுக்கும் இடையில் இருக்கும் பந்தம் பற்றி இவருக்கு என்ன தெரியும்?

காதலித்திருந்தால் தானே... ரமீஸாவின் மனநிலையை புரிந்திருப்பாரே? ஏதோ இவர்களின் தந்தைமார்களின் ஸ்நேகிதத்தால் தான் உம்மாவும் வாப்பாவை மணமுடித்திருக்கிறார். தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்! எத்தனை முறை இப்படி உயிரை வாங்கிவிட்டார்.

அவர் தனது வெறுப்பை அடிக்கடி வெளிப்படுத்துவதால் தானோ என்னவோ அஸ்லமுக்கு ரமீஸா மீதிருந்த அன்பு அதிகரித்துக் கொண்டே சென்றது? இல்லாவிட்டால் அதிகரித்திருக்காதா? இது என்ன புதிர்? இருபத்திமூன்று வயது வரை அவளுடன் தானே பேசி, சிரித்து வாழ்ந்தான். அவனை விட இரண்டு வயது வித்தியாசம் தானே அவளுக்கு இருந்தது!

பாயிஸாவுக்கு அவளை ரொம்பவும் பிடிக்கும். பிடிக்காமல் போகுமா? என்ன தவறு செய்தாலும் பாசம் கண்ணை மறைத்துவிடுமாமே? அவளை வீட்டுக்கு வந்திருக்க அனுமதிக்குமாறு எத்தனை முறை தன் கணவனிடம் சண்டை போட்டிருப்பாள் பாயிஸா?

அஸ்லம்!!!

வாப்பா மீண்டும் கூப்பிடுவது கேட்ட போது அஸ்லமின் கை கால்களில் உதறல் எடுக்கத் தொடங்கின. என்ன கேட்கப் போகிறாரோ என்று எண்ணியபடி சாரத்தை இருகக் கட்டிக்கொண்டு வாசலினருகே வந்து நின்றான்.

சொல்லுங்க வாப்பா...

இப்படி பயந்தபடி வாப்பா முன் போய் அழாத குறையாக நிற்பதற்கு அவன் ஒன்றும் ஒன்பது வயதுச் சிறுவனல்ல. கடந்த செவ்வாயன்று தான் இருபத்தி ஐந்து வயதை எட்டிப் பிடித்திருந்தான். தன் முன்னால் வந்து நின்ற அவனை பார்த்தார் ஹாஜியார்.

உங்களுக்கு இப்படி ஒரு மகன் கிடைக்க கோடி புண்ணியம் செஞ்சீக்கோணும் அடிக்கடி பஸ்லியா மாமி வாப்பாவிடம் கூறுவாள். தன் மகள் சியானாவுக்கு இவனை கணவனாக்கிவிட வேண்டும் என்ற உள் நோக்கம் அவளுக்கிருப்பதை ஹாஜியார் உற்பட அனைவரும் அறிந்திருந்தனர்.

பஸ்லியா மாமி சொல்வதிலும் தவறில்லையே? உண்மையில் அஸ்லம் போல் ஒருவனை தன் மகளுக்கு கணவனாக்க முடிந்தால் அந்த பெற்றோர் நன்மை செய்தவர்கள் தான். பாடசாலையில் உயர்தரம் படிக்கும் போது கூட பெண்கள் பின்னால் வலிய செல்வதும், சைட் அடிப்பதும் நண்பர்களோடு இணைந்து மானம் மரியாதை இழந்து பெண்களை இழிவு படுத்துவதும் கொஞ்சம் கூட அவனுக்கு பிடிப்பதேயில்லை.

தன் தாய் தந்தையர் பார்த்து தனக்கும் அவளைப் பிடித்தால் அவளை மணமுடித்து அதன் பிறகு அவளைக் காதலிக்கலாம். பார்க், பீச், ஹோட்டல் என்று உள்ளாசமாக காலத்தைக் கழிக்கலாம் என்று நண்பர்களிடம் கூறுவான். அப்போதெல்லாம் அவனுடைய ஸ்நேகிதர்களின் கேலிப் பேச்சுக்களுக்கு சிறைப்பட்டுத் தவிப்பான்.

கற்பென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அதைப் பெண்களுக்கு மட்டுமே உரியதாக இந்தக் குருட்டுச் சமூகம் ஓரங்கட்டிவிட்டதுடன் ஆண்களுக்கு ஆரோக்கியமற்ற சுதந்திரத்தையும் தந்துவிட்டது. காதல் மட்டுமல்ல கலாச்சார ரீதியிலும் கூட மார்க்கம் கூறாத சில சம்பிரதாயங்களை கடைபிடிக்கும் இந்தச் சமூகம் குறித்து அஸ்லம் கவலைப்பட்டிருக்கிறான். அத்தகைய அஸ்லமுக்கு வந்து வாய்த்தாளே உறவாக ஒருத்தி?

அவளால் அஸ்லம், தாஸீம் ஹாஜீயார், பாயிஸா என்று அனைவருமே சந்தித்த பிரச்சினைகள்?

வாப்பா பெரு மூச்சுவிட்டார். என்ன சிங்கம் கர்ஜிக்கவில்லை? மனுஷன் மௌனமாக இருக்கிறார் என்றால் அவரை உளரீதியாக ஏதோ ஒன்று தாக்கியிருக்க வேண்டும்? புரியாமல் உம்மாவும், மகனும் தவித்தனர். அதை கண்டுவிட்டவர் போல அவர்களை மாறி மாறி பார்த்த ஹாஜியார் நிதானமாகக் கூறுவதற்காக தொண்டையைச் செருமினார்.

அவ கர்ப்பமாக இருக்கிறாளாம் இது ஹாஜியார்.

அஸ்லமின் நாடி நரம்புகள் ஒரு நிமிஷம் வேலை செய்யவில்லை. கர்ப்பமாக இருக்கிறாளா? தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே? ஏன் சொல்லவில்லை? என்னிடம் கூறாத அளவிற்கு வைத்திருந்த ரகசியத்தை சட்டப்படி வாப்பாவிடமா கூறுவது? நெஞ்சில் இடி இறங்கினாலும் ஏதோ ஒரு குதூகலம் அதனுள்ளும் எட்டிப்பார்த்தது. உள்மனம் மகிழ்ச்சிக்கூத்தாடியது.

ஹையோ பிள்ளை ஆணாக இருந்தால் என் மடி மீது ஓடி வந்து உட்காருவானே? பெண் பிள்ளை என்றால் வடிவாக உடுப்பாட்டி அழகு பார்த்து... ஓரு வேளை இரட்டையர்கள் என்றால் இருவரையும் மாறி மாறிக் கொஞ்சி...

எத்தனை கற்பனை அஸ்லமுக்கு? திடீரென ஏதோ நினைவு வந்தவன் போல வாப்பாவின் முகத்தை கூர்ந்து ஆராய்ந்தான். அதில் கோபத்தின் ரேகைகள் அறவேயில்லை. ஒரு வேளை தன் தவறு நினைவுக்கு வந்துவிட்டதோ அவருக்கு?

ரமீஸாவின் காதலை தாஸீம் ஹாஜியார் ஏற்காத காரணம், சமூகத்தில் அவருக்கிருந்த செல்வாக்கும் பணமும் தானே? அப்படிப்பட்டவர் வீட்டை விட்டு ஓடி வந்த ரமீஸாவை எப்படி ஏற்று அனுமதிப்பார்? அவர் நிலையிலிருந்து எண்ணும் போது அவர் பக்கம் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் அஸ்லமுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறதே?

பால்ய காலத்திலிருந்தே ஒன்றாக உண்டு, விளையாடி, படித்து... காதல் என்ற ஒன்றை காரணம் காட்டி அவனிடமிருந்து அவளை பிரித்தால் அவன் எப்படித்தாங்கும்? அவனை அவள் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாள். அத்தனை உரிமை? எல்லாம் பறிபோய்விடுமா?

பாயிஸா...

வாப்பா உம்மாவை சன்னமான குரலில் கூப்பிட்ட போது அஸ்லம் சந்தனை கலைந்தான். இனியும் அவளை ஏற்கனவே முடியாது என்று தீர்க்கமாக கூறிவிட்டால்... நினைத்த போதே ஈரல் குளிர்ச்சியடைந்தது.

பாயிஸா அவ உண்டாகியிருக்கிறத கேள்விப்பட்ட பின்பும் நான் பிடிவாதமா நின்றால் நான் மனுஷனா பிறந்ததே அர்த்தமில்லாம போயிடும். ரமீஸாட மாப்பிள ஸஜாத் இப்ப ஹோட்டல் வச்சிருக்கானாம். ஸஜாத் உடன் இவ வீட்ட விட்டு போனதுக்கு காரணமே நான் தானே? நல்ல பண்புள்ள ஸஜாத்தை மதிக்காம இழவு... பணம் பணம்னு என்ட பிள்ளைய பிரிஞ்சி ஒரு வருஷம் எப்படி இருந்தனோ? என் கவுரவத்தை கல்லில் அடிச்சி உடைச்சிட்டு இன்று இப்படி நடக்குமா?

இந்தா இருக்கானே உன் பையன் அஸ்லம் எப்பப் பாரு தங்கச்சி தங்கச்சின்னு உருகுறான். எனக்குத் தெரியாமலே அவளோட தனியே பேசி உதவிகளும் செய்திருக்கான். இப்படி ஒரு நானாவை விட்டுட்டுப் போக அவளுக்கு எப்படி மனசு வந்திச்சோ?
ராஜா.. நீயாவது எங்கள் விருப்பத்துக்கு கல்யாணம் பண்ணிக்கப்பா. ம்.. என்ன பாயிஸா என் ரத்தத்துல பொறந்தவனுக்கே தங்கச்சி மீது இவ்ளோ பாசம்னா என் மகள் மீது எவ்ளோ பாசம் எனக்கிருக்கும்? ஏதோ விதி வெளயாடிரிச்சி. சரி அஸ்லம் நீ இனி பயப்படாம உன் தங்கச்சியுடனும், மச்சானுடனும் பேசு. காலம் கடந்தாலும் என் கண்களை அல்லாஹ் திறந்திட்டான் என்று சொல்லு..

நீண்ட நேரமாக பேசிய வாப்பாவை ஆச்சரியமாக பார்த்தான் அஸ்லம். மூடியிருந்த இருள் மேகம் தாஸிம் ஹாஜியாரை விட்டு விலகிற்று. அவரது இதய வானமும் தெளிந்து விட்டது. இதைக் கண்ட பாயிஸாவுக்கும் ஆனந்த மேலீட்டால் கண்கள் கலங்கின.

இனியென்ன மீண்டும் ரமீஸா என்ற பட்டாம்பூச்சி இந்த வீட்டில் பறந்து திரியும். சொல்லி வைத்தாற்போல அந்த நேரம் பார்த்து தான் வாங்கிக் கொடுத்த போனிலிருந்து ரமீஸா கோல் பண்ணிய போது அஸ்லமின் உதடுகள் மௌனமாக அல்ஹம்துலில்லாஹ் என்று இறைவனுக்கு நன்றி கூறிக் கொண்டது!!!
(கற்பனை)

அவள் அவனுக்குச் சொந்தம் !

ப்ளீஸ் ரவி நான் சொல்றத கேளுங்க ரவி ரவி

அவன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை. முன்பிருந்தவனா இவன்? என்ன நினைப்பு? என தனக்குள்ளேயே கூறிக்கொண்டு திரும்பிய சுகிர்தா ஒரு கணம் அதிர்ந்தாள்.

அவளருகே... நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தபடி சதீஷ் எதிர்ப்பட்டான். கணநாக்கி நடக்கத் தொடங்கினாள். அரை மணி நேரத்தில் வீட்டை அடைந்த போது இவளின் அம்மா, அப்பாவுடன் மல்லுக்கு நின்றது தெளிவானது.

மெதுவாக குளியலறைக்கு சென்றவள் கதவைத் தாளிட்டு விட்டு குமுறி அழுதாள்.

சதீஷ்!

சொந்தமாக ஒரு கம்பனியை நடாத்துகிறான். அழகுக்கு குறைவில்லை. லேசான மீசை தாடியுடன் ஸ்மார்ட் ஆக இருப்பான். இவன் முதன் முதலாக சுகிர்தாவை காணும் போதே இதயத்தை இழந்துவிட்டான். என்றாலும் ஆண்டவன் சித்தம் இருக்க வேண்டுமே? 120 செக்கன் கழியும் முன்பே இவள் ரவியின் பின்னால் வலிய சென்று பேசுவதை அவதானித்தான். இந்த ஊமை நாடகத்தை சதீஷ் சமீப காலமாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். அவனுடைய இதயக் கோவிலில் சுகிர்தா என்று குடியேறுவாளோ?

அம்மா சாப்பிட்டாச்சா? என்ற படி புத்தம் புது மலராய் பாத்ரூமிலிருந்து வந்தாள் சுகிர்தா. மனசோ சலனப்பட்டுக் கொண்டிருந்தது. மனசிலுள்ள கவலைகளை அம்மாவிடம் கூறி அவளை சங்கடத்தில் சிக்க வைக்க நினைக்கவில்லை. என்றாலும் அம்மாவிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது.

இதோ வந்திடறேன்மா என்ற படி அடுக்களையிலிருந்து வந்த அம்மாவுக்கு மகளின் முக மாற்றம் புலப்பட வெகுநேரம் எடுக்கவில்லை.

என்னம்மா ஒரு மாதிரி இருக்கே? என்ற அம்மாவின் கேள்வி சுகிர்தாவின் கண்களில் நீர் வரச் செய்யவே பதறிப் போனாள் அம்மா. ரவியை கண்டது முதல் சதீஷிடம் அவமானப்பட்டது வரை ஒன்று விடாமல் கூறினாள். அவற்றை எல்லாம் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு நிதானமாக அம்மா கூறிய பதில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

வேண்டாம் விட்டுடு. நம்மள மதிக்காதவனை நீ ஏன் தேடிப் போற? அந்த தம்பி பேரென்ன சதீசு, அது சொன்னது கரெக்டு. நீ ஏன்மா வலியுற?

சாத்தி வைத்து சவுக்கால் அடித்தது போலிருந்தது. என்ன இந்த அம்மா இப்படி பேசுகிறாள்? மற்றவர்களை விட அம்மா புரிவாள் என்றல்லவா கூறினேன். இல்லை அது பொய் என்பதைப் போல அம்மா நடந்துக்கிறாளே?

இறைவனே! உன் படைப்பினங்களில் யாருமே இதயத்தோடு படைக்கப்படவில்லையோ?

அம்மா நீ என்ன பேசற? ரவியை மறந்திட்டு.... எப்படிம்மா...?

சுகிர்தா அப்படி வலிமையாக கூறிய போது தாயுள்ளம் தப்பு செய்தது போல தவித்தது. விடிய விடிய நீரை இறைத்து விட்டு கடைசியில் குடத்தை உடைத்துப் போட்டது போன்ற குற்ற உணர்வு அம்மாவை ஆர்ப்பரித்துக் கொண்டது.


மறு நாள் க்ளாஸ் போய் வரும் போது பாதையைக் கடக்க முயன்றாள்.
க்ரீச்!!!
அவ்வளவு தான் சொல்லி வைத்தது போல எங்கிருந்தோ வந்த சதீஷின் காராசாரமான வார்த்தைக்குள் செவிப்பறை கிழிந்து நின்றான் டிறைவர். மீண்டும் அவள் பக்கமாக திரும்பி

என்ன சுகி.. கொஞ்சம் அக்கம் பக்கமா பார்த்து வரக் கூடாதாம்மா.... என்றான்.முழுமையாக அவன் வார்த்தைகளுக்குள் சுருண்டு போனாள் சுகிர்தா.

சுகி யாமே...? அந்த வார்த்தையில் தான் எத்தனை இதம்? எத்தனை மென்மை? ஓ... பட்டாம் பூச்சி சிறகடித்தது.

ஒரு கணம் தான். திடீரென மூளைக்குள் சந்தேகப் பொறி தட்டியது. என் பெயர் எப்படித் இவனுக்குத் தெரியும்? வெகுவாக குழம்பியவள் அதைக் கேட்க வாயைத் திறந்து ஏமாந்தாள். அவன் எப்போதோ போய் விட்டிருந்தான்.

பெயர் எப்படித் தெரியும்? அவன் தான் இவளைக் காதலிக்கிறானே? அந்த காதல் செய்த மாயம் தான். எனினும் தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தவில்லை. அப்படித்தான் அவன் வெளிப்படுத்துவது நாகரீகமில்லையே? இன்னுமொருவனை அவள் விரட்டி விரட்டி காதலிக்கும் போது அவன் எப்படிச் சொல்லுவான்? அப்படித்தான் சொல்லி விட்டாலும் சுகிர்தா அதை ஏற்பாளா? அல்லது தெரிந்து தெரிந்து என்னை லவ் பண்றியேன்னு அவனை தப்பாக நினைக்க மாட்டாளா? அதனால் தான் சதீஷின் காதல் மனசினுள்ளே விம்மிக்கிடந்தது.



அந்த சம்பவத்துக்குப் பின் அவளது மனம் அவன் பின்னால் அலை பாயத் தொடங்கியது. இந்த விசித்திரத்தைக் கண்ட அவளுக்கே தன்னை நம்ப முடியாமல் தவித்தாள்.

அவள் அவனை காதலிக்கிறாளா?

ச்சே! காதல் என்ற நோய்க்குள் தன்னை பலி கொடுக்க தயங்குபவளாச்சே சுககிர்தா. என் மனசு எப்பவுமே என் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும். என்று அடிக்கடி தோழிகளிடம் பெருமை பேசிய இவளுக்கு என்னவாயிற்று?
மனம் தடுமாறிற்றா?

இதென்ன யாராயிருந்தாலும் ட்றைவரை ஏசித் தானிருப்பார்கள். என்று சமாதானம் சொல்லிப் பார்த்தாள்.

இல்லையே யோசனை தவறி பாதையைக் கடந்தவள் நீ தானே என மனமும் மூளையும் அவளை அடங்கச் செய்தன.

மேய்ப்பவன் முட்டாளாயிருந்தால் ஆடு மாடு கூட அவனை மச்சான் என்றழைக்குமாமே? முட்டாள் போல டிறைவரை குற்றம் சொன்ன போது அவளது மனமும் மூளையும் கூட அதைத்தானா செய்தன?


ஒரு வாரத்துக்குப் பின்பு வேலைக்கு தெரிவாகி இருப்பதாக அவளுக்கு கடிதம் வந்தது. கடிதம் உட்பட முக்கியமான சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு மேனேஜர் அறைக்குள் நுழைந்தவளுக்கு தேள் கொட்டியது போலிருந்தது. இப்படி மாட்டிக் கொண்டாளே!

ஆனால் அவனோ அவளை தெரியாதது போலிருந்தான். அது அவளுக்கு வசதியாகப் போனாலும் உள்ளுக்குள் என்னவோ செய்தது.

அன்றைய மாலைப் பொழுதில் பஸ்ஸ_க்காக காத்துக் கொண்டிருந்த போது, எதிர்பார்த்த விதமாக ரவியை தூரத்தில் கண்டாள். இதயத்தில் வெளிச்சம் பரவியது.

ரவி! ரவி!!

அவன் சுகிர்தாவைக் கண்டவுடன் நடையின் வேகத்தை அதிகமாக்கினான். உடனே சாரியை சற்று தூக்கி கையால் பிடித்துக் கொண்டு வேகமாக செல்ல முயன்ற போது அவளது தோளை ஒரு கை தொட்டது. சந்தேகமேயில்லை அது சதீஷ் தான்.

சுகி உன்னை புரிஞ்சிக்காதவன நீ எதுக்கு தேடிப் போகணும்? என்று அவன் ஒற்றையில் அவளை அழைத்த போது ஒரு பக்கம் ஆச்சரியம் கலந்த ஆனந்தமாகவும் மறுபக்கம் அதிர்ச்சி கலந்த கோபமாகவும் இருந்தது. ஆனாலும் இவ்வளவு இயல்பாக பேசுபவனிடம் எப்படி கோபப்படுவது? தன் மனம் தான் அவன் பக்கம் எப்போதோ ஈர்க்கப்பட்டு விட்டதென்பதை அவள் அந்த கணத்திலாவது கண்டு கொண்டுவிட்டாளே!

அவள் எதையும் பேசவில்லை...
என்ன யோசிக்கிற சுகி... அவனது குரல் இளகியிருந்தது. இப்போது சுகிர்தாவுக்கு கோபம் வரவில்லை. தன் மேனேஜர் என்பதால் சற்று நிதானித்து...
ஒன்னுமில்ல சேர் என்றாள்.

ம்ம் என்னை பெயர் சொல்லியே கூப்பிட உனக்கு அனுமதி தர மாட்டேனாடா?

தேக்கி வைத்திருந்த காதல் வெள்ளம், வார்த்தைகளாய பீறிட்டுக் கிளம்பியது. சற்று தயங்கியவள் சமாளித்துக் கொண்டு

ஓகே சதீஷ்! நீங்க என்ன தப்பா விளங்கிட்டீங்க. நான் அவர் பின்னால அலையவில்ல. யாரையும் நான் காதலிக்கவுமில்ல..

என்ன சொல்ற சுகிம்மா? குரலில் உற்சாகம் ஒட்டிக் கொண்டது.

ஆமா சேர்..சொரி சதீஷ்! அவர் எங்கள் அண்ணா. அவர் வேற்று மதப் பெண்ணைக் காதலிக்கிறார். அதை அம்மா அப்பா விரும்பவில்லை. அதனால வீட்டை விட்டு போயிட்டார். அதனால அவரை எங்கு கண்டாலும் கெஞ்சி வீட்;டுக்கு கூப்பிடுறேன்...

சுருக்கமாக முழுவதையும் கூறிய போது தான் அவளை அவமானப்படுத்திய சம்பவங்கள் சதீஷின் கழுத்தை நெரித்தன. மிகவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான்.

ஒரு வாரத்துக்குப் பின் ரவி; அண்ணா வீட்டுக்கு வந்தார். ஆனந்தத்துடன் வந்தவள், அவர் கூறியவற்றைக் கேட்டு பரவசமடைந்தாள். ஆம். அன்றொரு நாள் அம்மா அப்பாவிடம்

என் பிள்ளைகள் படிச்சவங்கள். அவங்கட ஆசைப்படி செய்து வைங்கோ என்றிருக்கிறாள். அது தான் அப்பா என்னிடம் வந்து... என்று விட்டு நிறுத்தினார். நேரம் பார்த்து அம்மாவும் அப்பாவும் அவ்விடத்தில் பிரசன்னமானார்கள். அப்பா தான் முதலில் கூறினார். அம்மாவும் ஆமோதித்தார்.

ரவியின்ர விஷயம் சரியாகிட்டு... அத்தோட உன்ர விஷயத்தையும்... என்ற போது முகம் வெளிறினாள் சுகிர்தா. ஏனோ சதீஷ் மனத்திரையில் வந்துதித்தான். அந்த மாற்றத்தைப் புரிந்த அம்மா...

ஆமாம்டா. அந்த சதீசு தம்பி நம்மகிட்ட ஏற்கனவே பேசிட்டாரு.நமக்கெல்லாம் ஓகே. நீ என்னம்மா சொல்றே? என்றாள். பூவருகில் வண்டை நிறுத்தி தேன் பருக ஆசையா என்று கேட்டால் என்ன பதில் சொல்லும் வண்டு?

மனசுக்குள் குடிகொண்டிருந்த அந்தக் கள்வனின் கள்ளத் தனத்தை ரசித்தாள். நாளை காலை அவனை எப்படி பார்த்து... எப்படி பேசுவாள்?

இதையெல்லாம் எண்ணி நாணிச் சிவந்து ஓடிப் போய் தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்து தானே சிரித்துக் கொண்டு மகிழ்ந்தாள் அவள்!!!

(நிறைவு)

தவிப்பு !

ஏன் இன்னிக்கு இவ்ளோ லேட் பொய்க் கோபத்துடன் ஷாமிலா கேட்டாள்.
இல்ல செல்லம். ஒபிஸ்ல சரியான பிஸிடா. அது தான்; என்று கூறிக் கொண்டே அவளிடம் குனிந்தான்.
இரு வீட்டாராலும் தம் காதலுக்கு எதிர்ப்பிருந்த போதும், பொறுத்திருந்து..பெற்றோரின் சம்மதத்துடனேயே தன் இனிய காதலியைக் கைப்பற்றியவனல்லவா அஸ்வின்! இன்றைக்கு மூன்று வருடங்கள் கடந்தும் யாரும் அவர்களை தம்பதியராய் நோக்க மாட்டார்கள். காரணம் இவர்களுக்கிடையே காணப்பட்ட இரக்கமும் நெருக்கமும் தான்.
என் அஸ்வின் ரொம்ப நல்லவன்
இப்படித்தான் தன் கணவனைப்பற்றி நேற்று வரை பெருமை பட்டுக்கொண்டிருந்தாள் ஷாமிலா.
ஆனால் இன்று..திருஷ்டி பட்டதைப்போல...
இறைவனே ஏனிந்த சோகம்?
அஸ்வின் அப்படிப்பட்டவன் என்று யார் தான் நினைத்தார்கள்? இல்லை. அவன் அப்படிப்பட்டவனில்லை என்று ஆறுதலடைய அவளால் முடியவில்லையே?
நித்யா!
இந்த மனக்குமுறலுக்கெல்லாம் காரணம் நித்யா என்பவளுக்கு அஸ்வின் எழுதியிருந்த கடிதம் தானே? பீரோவைத் திறக்கையில் வந்து விழுந்த பைலிலிருந்து; தானே அஸ்வின் பாதி எழுதி விட்டு வைத்திருந்த அந்தக்கடிதம் இவளுக்குக் கிடைத்தது.
தன் கற்பனையை ஓட விட்டுப் பொருமினாள். வயிற்றெரிச்சலாயிருந்தது. சாப்பிடப்பிடிக்வில்லை. குளிக்கவுமில்லை. தன் மணவாழ்வின் இதுவரையும் செய்திராத ஒன்று இன்று அரங்கேறியது.
ஆம். குப்புறப்படுத்து அழுதாள் ஷாமிலா.
பொழுது சாயும் நேரம் மிகவும் களைத்துப் போய் வந்த அஸ்வின், புன்னகையால் தன் களைப்பைப் போக்கும் ஷாமிலா எங்கே என கண்களால் வீடு முழுக்க தடவினான். பளிச்சென அவன் முகம் மிளிர்ந்தது. ஓ.. மூடு வந்து விட்டது போல. தனக்குத்தானே கூறிக்கொண்டவன் உற்சாகத்துடன் படுக்கை அறையை நெருங்க நெருங்கத் தான் பயம் கௌவிக் கொண்டது.
குப்புறப்படுத்து விம்மிக் கொண்டிருந்த ஷாமிலாவின் நெற்றியில் கைவைத்துப்பார்த்து பதறினான். அல்லாஹ்வே..இப்படி கொதிக்குதே..என்று கலவரப்பட்டான்.
பதறிக் கொண்டிருந்தவனை மெல்ல கண்விழித்துப் பார்த்தாள் ஷாமிலா.
என் மேல் தான் எவ்வளவு அன்பு என்ற எண்ணம் தோன்றி மறையும் முன்பே சீ..என்னமாய் நடிக்கிறான் ராஸ்கல் என்று எண்ணி அவனது கையை விலக்கி விட்டு விருட்டென எழுந்து குளியலறைக்குச் சென்றாள்.
எல்லாமே புதிதாக இருந்தது அஸ்வினுக்கு. பசியோடு அமர்ந்திருந்தவனுக்கு ஷாமிலாவின் திடீர் மாற்றத்தை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது.
அவளை முதன் முதலில் சந்தித்தது ஒரு விபத்தில் தான். அதுவும் அவனது காரிலேயே! செல்போனில் சுவாரசியமாக உரையாடிக் கொண்டு வந்தவள் மஞ்சட்கடவையில் அல்லாமல் பாதையைக் கடக்க முற்பட்டாள்.
க்ரீச்!
மறுநிமிடம் இமைகளால் விழிகளை மூடிக்கொண்டாள். சொல்லி வைத்தாட் போல பொலீஸ் சூழ்ந்து கொண்டது. பொலீஸ் அதிகாரி இவனை ஜீப்பில் ஏறச் சொன்னார். பெண்கள் தவறு செய்தாலும் ஆண்களின் தலையில் தானே விடிகிறது என்று நினைத்துக் கொண்டவன் தன் விதியை நொந்வாறு வேறு வழியின்றி ஜீப்பில் ஏறிக் கொண்டான்.மூன்று நாட்கள் கழிய இன்னும் இரண்டு மணித்தியாலம் இருந்தது.
அப்போது
உங்கள விட்டாச்சி..வீட்டுக்குப் போகலாம் என்று கான்ஸ்டபிள் சிங்களத்தில் கர்ஜித்தான். வெளியே வந்த போது ஷாமிலா அவனுக்காக காத்திருந்தாள்.
என்ன நினைத்தானோ அவளிடம் மன்னிப்புக் கேட்டான் அஸ்வின்.
தவறு செய்தவள் அவள். அவனை மன்னிப்பதா?
இல்ல மிஸ்டர்........ அவள் தடுமாறிய போது
அஸ்வின் என்று முடித்து வைத்தான்.
நீங்க தான் என்னை மன்னிக்கணும். நான் தான் பிழை செய்தேன்
எப்படியோங்க...உங்களால் அவர்களுக்கு செமலாபம் என்று கூறி சிரித்தான். அந்த சிரிப்பில் அவள் சொக்கிப் போனாள்.
ட்ரிங்..ட்ரிங்...
சுய நினைவுக்கு வந்த அஸ்வின் ரிஸீவரைக் காதுக்குக் கொடுத்தான்.
ஹலோ யாரு நித்தியா..சொல்லு. ஓகே வர ட்ரை பண்ணுறேன் பேசிக்கொண்டிருந்தான்.
மீண்டும் நித்தியாவா? எத்தனை நாளா நடக்குது இந்த நாடகம்..குளித்துக் கொண்டிருந்தவள் குரூரமாய் சபித்தாள். அஸ்வினுடைய நினைவுகளோ தான் ஷாமிலாவைக் காதலித்த காலங்களை அசை போட ஆரம்பித்தது.

கம்பனியில் புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவளைப் பற்றியே அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் ரொம்ப அழகாய் இருப்பதாய் கூறினார்கள். பார்ப்போமே என்று அலட்சியமாய் வந்தவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. மனசு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. புன்னகை ஒன்றை மட்டும் அன்று பகிர்ந்து கொண்டார்கள்.
ஒரு நாள் தன் உம்மாவுக்கு சுகமில்லை என்று ஷாமிலா வராதிருந்த ஒரு நாளின் போதே..தான் ஷாமிலாவுக்குரியவன் என்பதை அஸ்வின் தெரிந்து கொண்டான். பின்பு அவர்கள் தத்தமது இதயங்களை பரிமாறியதும்....அவள் வீட்டில் தோன்றிய எதிர்ப்பலைகள் அஸ்வினின் நடத்தை கண்டு ஓய்ந்ததும், ஷாமிலாவின் குணம் கண்டு அஸ்வினின் பெற்றோருக்கு அவளை பிடித்துப் போனதும் பழைய ஆனால் இனிய கதை.

குளியலறைக் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். டவலுடன் வந்து கொண்டிருந்தாள். ஆனால் அவளை ரசிக்கும் மனநிலையில் அவன் இருக்கவில்லை. மிதித்து விட்டது போல் சென்றாளே..
எழுந்து சென்று பாதி எழுதி விட்டு வைத்திருந்த அந்த கடிதத்தை எழுதத்தொடங்கினான்.
எதேச்சையாக வந்தவள் அவன் பின்னாலிருந்து அவன் எழுதுவதை வாசிக்கத் தொடங்கினாள்.
அதில்
........................... நித்தி.. ஸொரிடா. உன் ரூமில் வந்து உன்னைப் பார்க்க முடியவில்லை.....
இப்படி தொடர்ந்து எழுதி நிறைவு செய்தான்.
அன்றைய இரவு இருவருக்கும் நரகத்துக்கு இட்டுச் சென்ற பாலமாக இருந்தது. எனினும் ஷாமிலாவின் நெஞ்சம் பாறையாய் இறுகியிருந்தது. ஸொரி டா வாமே..அந்தளவுக்கு நெருக்கமோ...அழுகை வந்தது. ஆனால் அழவில்லை. துரோகிகளுக்காக அவள் ஏன் அழ வேண்டும்? அத்தோடு விட்டால் கூட பரவாயில்லை. ரூமில் போய் பார்க்க முடியவில்லையாம். நெஞ்சு வெடித்து விடும் போல் இருந்தது. உலகமே ஒன்றிணைந்து தனக்கு சதி செய்வது போல் உணர்ந்தாள்.
சற்று திரும்பியவளின் கண்களுக்கு அஸ்வினின் புகைப்படம் தென்பட்டது. இந்த..இந்த சிரிப்பில் தானே அவளது கன்னி மனம் பறிபோனது. அவனின் சிரிப்பழகை ரசிக்கவென்றே எத்தனை ஜோக்குகளை தேடிச் சொன்னாள்? திடீரென அது ஆள்மயக்கிச் சிரிப்பு போல் தோன்றியது.
எல்லா ஆண்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.. அந்த மாதிர பொறுக்கிகளை மரத்தில கட்டி வச்சி சுடணும். பிறகு கழுகு கொத்தணும்...
என்று கணவனால் ஏமாற்றப்பட்ட தன் தூரத்து உறவினர் ஒருத்தி சொல்லியிருந்தாள். அது நடந்து அரை ஆண்டுகள் கழிந்திருக்கும். ஆனால் இப்போது ஷாமிலா சொல்லிப் பார்த்த போதும் பொருந்துகிறதே..!
தான் பார்த்துப் பார்த்து காதலித்தவள்..மணம் முடித்து இன்று வரை தேனாய் தித்திப்பூட்டியவள் இப்படி சீறுகிறாள் என்றால், தன்னில் ஏதாவது பிழையிருக்குமோ என் மூளையைக் கசக்கி யோசித்தான் அஸ்வின். ம்ஹ{ம்..அப்படி சொல்லுமளவுக்கு எதுவுமில்லை. எதற்காகவாவது சற்று உரத்துப் பேசினாலும் சிரித்துக் கொண்டே கேட்டு விட்டு பிறகு அதற்குத் தண்டனையாக முத்தம் கேட்பாள். இன்று என்னவாகிற்று?
தமக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த பிரிவு பற்றி ஈரேழு வாரங்களாக அவள் எதுவுமே கூறாததில் குழம்பிப் போனான் அஸ்வின். எங்காவது போய் வந்தால் நன்றாக இருக்கும் போல் இருந்தது. அவளிடம் சொல்லாமலேயே டவுனுக்குச் சென்றான்.
ஷமி...நீ நடந்நுக் கொள்றது கொஞ்சமும் பிடிக்கல.... அவன் சொல்லி விட்டு திரும்pப் பார்த்த போது அவள் அங்கிருந்தால் தானே? முதன் முதலாக அவள் மேல் கோபம் கோபமாய் வந்தது.
நித்தி!
ஷாமிலா சொல்லிப் பார்ததாள். எரிச்சலாக இருந்தது. சற்று நேரத்தில் குமட்டிக் கொண்டு வர காரணமறிந்து பூரித்துப் போனாள். ஆனால் அந்த சந்தோஷம் வெகுநேரம் நிலைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் முடிவு கட்ட எண்ணிக் கொண்டிருந்தவள் இப்போது விக்கிக் கொண்டு அழுதாள். தான் மோசம் போனதாய் தனக்குள்ளே கற்பனை பண்ணி மனம் சோர்ந்து போனாள்.
மாலை நேரம் அஸ்வின் தன் நண்பன் ஒருவனுடன் வீட்டுக்கு வந்தான். அவனை இதுவரை ஷாமிலா கண்டதில்லை. அவர்கள் தத்தமது அலுவலக வேலையில் முழ்கிப் போயிருந்தார்கள். வந்தவர்களுக்கு ஒரு கப் டீயாவது கொடுக்காவிட்டால் நல்லாயிருக்ககாது என்று அவளுக்குத் தெரியும். எனவே நாகரீகம் கருதி தேநீர் தயாரிக்க சமையலறைப் பக்கம் சென்றாள். அவர்கள் பேசுவது அவள் காதுகளுக்கு கேட்டது.
இடையில் அஸ்வின் சொன்னான்..
உன் ரூமுக்கு வர நினைச்சன்டா நித்தி;. ஆனால் கொஞ்சம் வேலையா இருந்தது.. உன் இனிஷியல் என்னானு சொல்லு. பயோடேட்டாவை டைப் பண்ணிடலாம்?
அதற்கு அந்த மற்றவன் கூறினான்...
உன் லெட்டர் கிடைச்சதுல சந்தோஷம்டா. நீ வருவன்னு நினச்சன்..பட். பரவாயில்ல .என் முழுப்பெயர் எஸ். ஏ. நித்தியானந்தன்..
ஓகே மிஸ்டர் நித்தியானந்தன். கண்களில் குறும்புடன் அஸ்வின் கூறினான்.
ஓ.. நித்தியா னந்தன்!
ஷாமிலாவுக்கு எல்லாம் புரிந்தது. இவனுக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்துத் தான் அவள் அப்படி குதித்திருக்கிறாள்..அஸ்வினைப் பற்றி தவறாக நினைத்ததை எண்ணி மனசு வலித்தது.
எதையும் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டு டீயும் வடையும் கொடுத்த போது அஸ்வின் மெதுவாக அவளை ஏறிட்டான். அவனுக்கு எக்ஸ்ட்ராவாக ரொமான்ஸ் புன்னகையும் கொடுத்தாள். ஏதோ சொல்ல நினைத்த நித்தி அதைக் கண்டு புரிந்தவனான சொல்ல வந்தததை சொல்லாமலேயே விடைப் பெற்றுச் சென்றான்.
வெட்கத்தில் மிரண்டவள் தான் தாய்மை அடைந்த விடயத்தைக் கூறினாள். பிறகு தன்னுடன் சில நாட்களாக கோபம் காட்டியது ஏன் என்று அவன் கேட்ட போது அசடு வழிய காரணத்தைக் கூறினாள். அவனுக்கு சிரிப்பு வந்தது. இப்போது அந்த சிரிப்பில் கள்ளம் இருக்கவி;லை.
அவனைக் கட்டியணைத்தாள் ஷாமிலா.
இப்படி ஒருவருக்கொருவர் அணைத்து மகிழ்ந்து எத்தனை நாட்களாகி விட்டன?
ஏய் விடு குளிச்சிட்டு வர்ரேன் என்றான் அஸ்வின்.
அவனை விடாமலேயே வேணாம் சேர்ந்து குளிக்கலாம் என்றாள்.
வெட்கம் விட்டு கூறியவளை தவிக்க விடாமல் அவனும் அணைத்துக் கொண்டான்!!!

காதல் வரம் !

கால்களை நீட்டி சோபாவில் சாய்ந்திருந்தார் சுபா டீச்சர். அவரது சிந்தனைகள் யாவும் பத்து வருஷம் பின்னோக்கியதாய் இருந்தது. ஆம். அவர் ஆசிரியர் தொழிலில் இருந்து ரிட்டயர் ஆகியும் பத்து வருஷங்கள் தான். தன்னால் தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தார்.
இந்த தவிப்பிற்குக் காரணம் என்ன? ஓ வைஷ்னவி தான். அவள் படிப்பில் கெட்டிக்காரி. அவளது பரீட்சைப் புள்ளிகள் பல தடவை சுபாவை குளிர்வித்திருக்கின்றன. வைஷியை உதாரணம் காட்டி எத்தனை பிள்ளைகளை ஊக்குவித்திருப்பார் சுபா டீச்சர்?
இன்று காலை சுபா டீச்சர் வங்கிக்குச் சென்றிருந்தார். கியூவில் வருமாறு இருந்த அறிவித்தல் எரிச்சலைத் தந்தது. அதன் பிரதிபலிப்பாக அங்குமிங்கும் பார்த்தவருக்கு அதோ அந்த ஜன்னலினூடாக வைஷி தென்பட்டாள். முதலில் யாரென்று அனுமானிக்க முடியாமல் குழம்பினாலும் தீவிரமாக யோசித்ததில் ஆசிரிய மூளை சட்டென்று இனம் கண்டு கொண்டது. சந்தோஷப்பட முடியவில்லை. ஏனெனில் பாடசாலை பருவத்தில் துருதுரு என்று இருந்த வைஷி தற்போது களையே இல்லாமல் கறுத்து சிறுத்து இருந்தது தான். அதையும் விட பல்கலைக்கழகம் போக வேண்டும் என்ற அவளது சதா ப்ரார்த்திப்பு??
என்ன டீச்சர். பெல் அடிச்சி பத்து நிமிஷம் ஆயிட்டுது வகுப்புத் தலைவியாயில்லாத போதும் வைஷி வந்து கூப்பிட்டாள். பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவராயிருந்த சுபா டீச்சருக்கு அளவில்லா ஆனந்தம்.
படிப்பில் எத்தனை ஆர்வம் இந்தப் பிள்ளைக்கு? கட்டாயம் நல்ல நிலைக்கு வருவா
மனப்பூர்வமாக ஆசிர்வதித்தார் டீச்சர். ஆசிரியர்களின் ப்ரார்த்தனை தட்டுப்படுவதில்லையே? இப்போதும் கூட நல்ல ஸ்தானத்திலிருந்து தான் கடமை புரிகிறாள். என்pனும் சுபா டீச்சருக்குத் தான் திருப்தி பட்டுக் கொள்ள முடியவில்லை.

அவர் அப்படி கியூவில் நின்ற போது வைஷியும் அவரைக் கண்டிருக்க வேண்டும். பியூன் வந்து உள்ளே வருமாறு கூற சுபா ஆச்சரியமடைந்து பின் நிதானித்து உள்ளே சென்றார். அவரைக் கண்டதும் வைஷி எழுந்து நிற்க
ம்ம் பண்பாடு மாறாத பிள்ளை. இப்போதும் என்ன கண்டிட்டு எழுந்து நிண்டிட்டுது வாழ்த்தினார் டீச்சர்.
அவர் வந்த காரணத்தைக் கேட்டு உடனே செய்து கொடுத்ததுடன் அவரது முகவரியையும் வாங்கி தனக்கு லீவு கிடைக்கும் போது வந்து போவதாகவும் கூறினாள். நன்றியுடன் விடைபெற்று வந்த டீச்சரை குறை கூறியவர்களாக கியூவில் இருந்தவர்கள் முணுமுணுத்தார்கள்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு வைஷி சுபா வீட்டுக்கு வந்தாள். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சுபாவின் வாழ்க்கைஇ கணவன்இ பிள்ளைகள் பற்றி வினவினாள். எதிர்பாராத இக்கேள்வியினால் திக்குமுக்காடிப் போனார் டீச்சர். அவரது முகமாற்றம் வைஷியின் மனதை என்னவோ செய்தது. செய்யக்கூடாத பெரிய தப்பை செய்து விட்டதாக கருதி தடுமாறினாள். அதை உணர்ந்த சுபா
அவர்கள் யாரும் எனக்கில்லைம்மா என்றார்.
இந்த ஒற்றை பதிலில் அதிர்ந்த வைஷி
ஏன் எல்லோரும் எங்கே? வெளியூரிலா அல்லது நாடிருந்த நிலையில் யுத்தத்துக்கு இரையாகி...
இதைக் கேட்க நினைத்தாலும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். சற்று நேரத்தின் பின் வைஷி பற்றி ஆராய்ந்த போது அவள் பாதாளம் நோக்கிப் போவதை உணர்ந்து கொண்டார் டீச்சர். அது பாதாளமா? பூபாளமா? யாருக்குத் தெரியும்?
நீ இன்னமும் அவனைக் காதலிக்கிறியா?|
இல்லை டீச்சர் உண்மையாகவே பொய்யைச் சொன்னாள்.
ராகுலின் அப்பா வைஷியின் ஏழ்மை காரணமாகவே அவளை எதிர்ப்பதாக அறிந்த போது கோபம் தலைக்கு உச்சியில் ஏறியது சுபா டீச்சருக்கு. ராகுலின் அப்பாவுடன் தான் பேசுவதாக தைரியப்படுத்தினார்.
வைஷியின் காதலாவது வாழட்டுமே?
சுபாவின் காதல் தான் பட்டமரமாய் போயிற்றே. அதை வைஷியிடம் வெளிப்படையாக கூற முடியுமா? குருசிஷ்ய உறவுக்கு பாதிப்பு என்பதை விட சுபாவுக்கு ஒரு மகளிருந்தால் ஏறக்குறைய வைஷியின் வயது தான் இருந்திருக்கும். அப்படியென்றால் மகளிடமே தன் காதல் தோல்வியை கூறுவது போல் ஆகிவிடாதா? அது அநாகரிகம் அல்லவா? வைஷி நாவலொன்றை பார்த்திருக்கஇ சுபா டீச்சர் இளமைக்கால நினைவுகளை மீட்டிக் கொண்டிருந்தார.
சுபா என்னைப் பாரேன் ப்ளீஸ்
......................
சொல்றத புரிஞ்சிக்க..உன்ன கலியாணம் செஞ்சா சீதனம் தர மாட்டியள் என்டு அப்பா சொல்றவர். மலேசியாவில் இருக்கும் அப்பாவின் பிரண்டின்ர மகளை யோசிக்கினம். அதனால..
அதனால்
அவர் குனிந்த தலை நிமிரவில்லை. அவரைப்பிடித்து உலுக்கிக் கேட்டதில் இனி அவர் தனக்கு சொந்தமில்லை என்பதை சுபா புரிந்து கொண்டாள்.
இறைவா!
கனவில் அவருடன் வாழ்ந்துஇ பிள்ளைக் குட்டிகள் பெற்று...
ஒரே வார்த்தையில் வாழ்க்கையைச் சீரழித்து விட்டாரே? காதலிக்கும் போது பெற்றோரைக் கேட்கிறார்களா? குதிரைக்கு பசித்தால் வைக்கோலையும் திண்ணும் என்பது எவ்வளவு நிதர்சனம். எந்த கஷ்ட நஷ்டம் வந்தாலும் பசித்தாலும் புல் திண்ணாத புலி போல் மனம் மாறமாட்டார் என்று தானே சுபா ஆழமாக நம்பியிருந்தாள்?
அதே நிலை தானா வைஷ்ணவிக்கும்?

சத்தியமாக வைஷி நாவலை படித்துக் கொண்டிருக்க வில்லை. அவளது கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. பாவம் அவளின் ஏழை பெற்றோர். வறுமை காரணமாக ராகுலின் அப்பாவிடம் பேசவே தயங்கினார்கள்.
டீச்சர் ராகுலில் வீட்டாரிடம் சென்று தனக்காக பரிந்து பேசுவதை வைஷி விரும்பவில்லை. காரணம் சுபா டீச்சரும் ஏழை மனுஷி என்பதால் தான். அழகுஇ குணம்இ மார்க்கம் இருந்து என்ன பயன்? பணத்துக்கு முன் அவை எல்லாமே மண்டியிட்டு காணாமல் போகின்றனவே?
அவற்றைக் கண்டு வைஷியினதோஇ ராகுலினதோ காதல் நெஞ்சங்கள் மசியவில்லை. அவனும் தன் அப்hவுடன் வாக்குவாதப் பட்டுக் கொண்டு தான் இருந்தான். அவர்கள் தம் காதல் கைகூடாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளவும் தயங்கமாட்டார்கள். அப்படியென்றால் இத்தனை வருடங்களாக வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டுவிட்டு ஓடுமளவுக்கு வலிமையைத் தந்தது எது? காதல் புனிதமானதா? தீய சக்தியா? உண்மையாக காதலிக்கும் அனைவரும் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்குத் தான் வைஷியும் முகம் கொடுத்திருந்தாள்.

சுபா டீச்சர் கதவைத் தட்டினார். இருபததேழு வயது மதிக்கத்தக்க ஒரு அழகான வாலிபன கதவைத்திறந்து பார்த்து புருவத்தை சுருக்கினான். அவனைப் பார்த்த டீச்சருக்கு முள்ளுக்குத்தியது போல் இருந்தது. இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே?
அப்போது ராகுல் ஹ_ இஸ் தெயார்? (ராகுல் யாரங்கே?) என்று கம்பீரமாக ஒலித்த குரலும் டீச்சரை தடுமாறச் செய்தது. அந்த உருவம் அவர்களை நெருங்க நெருங்க டீச்சரின் மனமும் மூளையும் ஒருமித்தே விளித்துக் கொண்டன.
அடக்கடவுளே!
பால் வாங்க பாம்பிடமா வந்திருக்கிறேன்?
இவன் ராகுலை எங்கும் பார்க்கவில்லை. இதோ இவரில் தான். மனசு ஓலமிட்டு அலறியது. அவரும் டீச்சரை அடையாளம் கண்டு கொள்ளாதிருப்பாரா? வந்த வேகம் குறைந்து பணிந்து போய்... இல்லையில்லை கூனிக்குறுகிப் போய் நின்றிருந்தார்.
டாடி இவங்களைத் தெரியுமா - இது ராகுல்
இல்..ஓம்..இல்லை.. தடுமாறினார் ராகுலின் தந்தை.
தெரியாதுப்பா. ஆனா உன்னப்பத்தி பேசத்தான் வந்தருக்கேன் என்றார் டீச்சர்.
ராகுலுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். சுடர்விட்டு எரிந்த டீச்சரின் நம்பிக்கைத்தீ ராகுலின் தந்தையைப் பார்த்ததும் அணைந்தே போயிற்று. இருக்காதா பின்னே? அவன் அப்பன் தன்னைப் போலவே ராகுலையும் மாற்றி விட்டால்..?
நாக்கு மேலண்ணத்தில் ஒட்ட கதிரையில் சாய்ந்து மௌனம் காத்தார் ஐங்கரன்.
ஐங்கரன்!
ம்ம் சுபாவின் காதலர்இ இன்னொரு முறையில் சொன்னால் ராகுலின் அப்பா.
எதை எப்படி சொல்வது என தவித்துஇ பின் நிதானித்து வைஷியைப் பற்றி கூறி முடித்த போது ராகுல் மொத்தமாய் உடைந்திருந்தான்.
தன் மகளுக்கு ராகுலைக் கேட்டு வந்திருக்கிறாளா சுபா... என்ன நீனைத்தாரோ செய்திடலாம் என்றார்.
அப்பாடா. வந்த காரியம் இனிமையாக முடிந்ததே. கண்மூடி இறைவனுக்கு நன்றி கூறினார் டீச்சர்.
இன்னும் இரண்டே மாதங்களில் திருமணம்!

அம்மா! இவங்க தான் எங்கள் விஞ்ஞான பாட டீச்சர்.... என்று வைஷி தன் ஏழைத் தாயிடம் கூறிக் கொள்ள அவள் சுபா டீச்சரைப் பார்த்து கைகூப்பினாள்.
அவளது விழிகளில் தான் எத்தனை நன்றிப்பெருக்கும்இ சந்தோஷமும்!
இக்காட்சியைக் கண்ட ஐங்கரனுக்கு கண்ணைக்கட்டி நடுக்காட்டில் விட்டது போல் இருந்தது.
இவள்.. இவள் சுபாவின் மகளில்லையா? ஐயோ தன் மகள் என்று சுபா என்னிடம் கூறவில்லை தானே? நான் எப்படி கற்பனை பண்ணி.... சுபாவைக் கண்டதும் ஏற்பட்ட தடுமாற்றத்தில் கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டேனா? - தவித்த ஐங்கரன் சுபாவை அழைத்து விபரம் கேட்டார்.
உங்களைத் தவிர வேறொருத்தன என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியல்லீங்க. நான் இன்னமும் கல்யாணமே பண்ணிக்கல. வைஷி என் பொண்ணுன்னு உங்ககிட்ட சொல்லலியே..ம்ம் என்ன நல்ல குணமான மருமகப் பொண்ணு கிடைச்சிருக்கா. பயம் வேணா. ராகுலை சந்தோஷமா வச்சிக்குவா. ஐயோ கெட்டிமேளம் சொல்றாங்க. வாங்க போகலாம்
சுபா நகர அப்படியே சுவரில் சாய்ந்து விட்டார் ஐங்கரன். காதலர் பிரிந்தாலும் சுபாவின் காதல் அழியவில்லை.
அங்கே வைஷியின் கழுத்தில் தாலி கட்டிக் கொண்டிருந்தான் ராகுல்!!!